ஊழல் என்னும் வைரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

ஊழல் என்னும் வைரஸ்

கரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சீனாவிலிருந்து ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்கள் (சோதனைக் கருவிகள்) இறக்குமதி செய்யப்பட்டன. அந்த சோதனைக் கருவிகளில் பரிசோதனை முடிவுகள் சரியாக வரவில்லை என்று பல மாநிலங்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது அதன்மூலம் சோதனை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்களை, இந்தியா இரட்டை மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது பிரச்சினை ஆகியுள்ளது.


ரியல் மெட்டபாலிக் என்னும் விநியோகஸ்தரால் இந்திய அரசுக்கு விற்கப்பட்ட சோதனைக் கருவிகள், மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்குமூலம் இது தெரிய வந்துள்ளது.


கடந்த மார்ச் 27ஆம் தேதி, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம், சீனாவில் உள்ள வாண்ட்ஃபோ நிறுவனத்திடம் 5 லட்சம் ரேப்பிட் சோதனைக் கருவிகள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இது குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆர்க் பார்மாசூடிகல்ஸ் என்ற நிறுவனத்துடன் அய்சிஎம்ஆர் கையெழுத்திட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, சீனாவுக்கான இந்தியத் தூதர், விக்ரம் மிஸ்ரி, சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று 6,50,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் மற்றும் ஆர்என்ஏ எக்ஸ்டிராக்ஷன் கிட்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ட்விட் செய்தார்.


இந்த சோதனைக் கருவிகளை, மாட்டிரிக்ஸ் என்னும் நிறுவனம்தான், சீனாவின் நிறுவனம் ஒன்றிலிருந்து ஒரு கருவி தலா 245 ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதே நேரத்தில் விநியோகஸ்தர்களான இந்தியாவைச் சேர்ந்த ரியல் மெட்டபாலிக் மற்றும் ஆர்க் பர்மாசூடிகல்ஸ் நிறுவனங்கள், அதே கருவியை மத்திய அரசுக்கு, 600 ரூபாய்க்கு விற்றுள்ளன. இது கிட்டத்தட்ட 66 சதவிகித விலையேற்றமாகும்.


தமிழக அரசும், இதே சோதனைக் கருவிகளை, மாட்டிரிக்ஸ் நிறுவனத்தின் மூலம் சான்பயோடெர் எனனும் இன்னொரு விநியோகஸ்த நிறுவனம் மூலமாக ஒரு கருவி 600 ரூபாய் என்கிற விகிதத்தில் வாங்கியது. ஷான் பயோடெக் மற்றும் தமிழக அரசுக்கு மத்தியில் இது தொடர்பாக கையெழுத்தான ஆவணம் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது.


இதைத் தொடர்ந்து ரியல் மெட்டபாலிக்ஸ் நிறுவனம், மேட்ரிக்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்யும் சோதனைக் கருவிகளை விநியோகம் செய்ய தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது என்றும், தமிழக அரசிடம் இந்த ஒப்பந்தத்தை மீறி ஷான் பயோடெக் மூலம் மேட்ரிக்ஸ் சோதனைக் கருவிகளை விற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டி, டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


இந்த வழக்கு விசாரணையின் போதுதான், நீதிமன்றம், சோதனைக் கருவிகள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளது.


‘‘கரோனாவால் நாட்டில் மிகப் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும் அளவிலான சோதனைகள் செய்யப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்கள், தங்களின் லாபத்தைப் பற்றி மறந்துவிட்டு, பொது நலன் சார்ந்து இயங்கவேண்டும். சோதனைக் கருவிகள், ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து தலா 400 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும்'' என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அய்சிஎம்ஆர் இடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுவரை எந்தவித பின்னூட்டமும் வரவில்லை.


சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் மிகவும் பிழையான முடிவுகளையே தருகின்றன என்று நாட்டின் மூன்று மாநிலங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டின. அதைத் தொடர்ந்து சோதனைக் கருவிகள் மூலம் கரோனா சோதனை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் சீனா கொடுத்துள்ள பதிலில் இந்திய இறக்குமதி செய்த கரோனா சோதனை உபகரணங்கள் தங்கள் நாட்டின் நிறுவன தயாரிப்பு இல்லை என்றும், இது தங்கள் நாட்டில் இயங்கிவரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு என்றும், தாங்கள் உலகெங்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பி வருகிறோம் - எங்கள் முழுக்கவனமும் கரோனா தொற்றை ஒழிப்பதில் உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் சீனாவின் பெயரை இழுக்க வேண்டாம் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.


இதன்படி கரோனா போன்று கொடுந்தொற்று பரவல் நோத்தில்கூட மருந்துப் பொருட்கள் என்ற பெயரில் இறக்குமதியில் ஊழல் கறை!


காங்கிரசின் மேனாள் தலைவர் இராகுல் காந்திகூட இது குறித்து வினா எழுப்பியுள்ளார் என்பதும் கவனத்துக்குரியது.


No comments:

Post a Comment