புரட்சிக்கவிஞர் பேசுகிறார்: ‘நூலறிவும் உணர்வும்' என்ற தலைப்பில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

புரட்சிக்கவிஞர் பேசுகிறார்: ‘நூலறிவும் உணர்வும்' என்ற தலைப்பில்!


நேற்று (29.4.2020) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 130ஆவது ஆண்டு பிறந்த நாள்.


வழமைபோல் விழாக் கொண்டாடி மகிழ, புரட்சிக்கவிஞர் என்ற அந்த கனலின் சூட்டில் அயர்வினைப் போக்கிக் கொள்ள கூடி மகிழ்வதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், படித்து மகிழலாம்,  ‘பாவேந்தர்’ என்று பலராலும் அழைக்கப்படும் ஈடு இணையற்ற மானுடம் தந்த மகத்தான கவிஞரின் கவிதையைப் படித்து, படிக்கக் கேட்டு, மேடைகளில் நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் தம் வெண்கல நாதக் குரலில் உயிர்த் துடிப்போடு முழங்கக் கேட்டு மகிழ்வதற்கு ஒப்பானது எதுவும் இல்லை.


பெரும்புலவர் பேராசிரியர் ந.இராமநாதன் (பெரியார் பேருரையாளர்) அவர்கள் விளக்க, புரட்சிக்கவிஞரின் கவிதைகளில் உள்ள நயம்பற்றிக் கேட்கும்பொழுது, நாம் எல்லாம் தேனில் வீழ்ந்த வண்டுகளாவோம்! நம்மை மறந்தவர்களாவோம்!!


‘‘ஏம்பா, நம்ம இராமநாதன் எனது கவிதைகளை விளக்கியபோதுதான் எனக்கே தெரிந்தது, ‘‘ஓகோ, நாம் இப்படியெல்லாம் எழுதியுள்ளோம் என்று; அப்படி ஒரு அரும்பெரும் புலவனப்பா அவன்!’’ வியப்புடன் கூறினார் புரட்சிக்கவிஞர்.


அத்தகைய கவிஞரின் பேச்சுகள் - பேருரைகள் பலவற்றைக் கேட்கும் வாய்ப்பு வாசக நேயர்கட்கு மிகமிக அரிதுதானே.


அதனால், எவ்வளவு ஆழமான சிந்தனை வளம் பெற்ற நம் சுயமரியாதை சூட்டுக்கோல் புரட்சிக்கவிஞர் என்பதற்கு 1931-32 ஆம் ஆண்டு ஆற்றிய  ஓர் உரை, இதோ சுவையுங்கள்:


"மனிதன் அறிபவன், மனிதனுக்கு அறிவுண்டு. மனிதன் எவற்றையும் அறிபவன். எவையும் அறிவுக்கு உட்பட்டவை.



உண்மை என்பது உள்ளத்தின் தன்மை. அதாவது உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்) யின் தன்மை. அதாவது மேற்புறத்தின் இயல். கடலின் மேற்புரம் கண்டோன் கடலின் மெய்மை கண்டோனாவான். கடலின் உள்ளியல் கண்டோன் கடலின் உண்மை கண்டோனாவான்.


மனிதன் அறிபவன். தன்னுண்மை, தனது மெய்மை, உலகுண்மை உலகின் மெய்மை, அடங்கல் உண்மை ஆகிய அனைத்தையும் அறிபவன் (அடங்கல்-எல்லாம்).


அறிவு என்பது உண்மை, மெய்மைகளை அறிதல் என்பதனோடு அனைத்தையும் அறிதல் என்பதும் ஆகும்.


அறிவின் நோக்கம் பெரிது! அறிபவனாகிய மனிதன் தான், இல்லம், ஊர், நாடு, கண்டம், உலகம், வானம், வானுள்ள கோளங்கள் ஆகியவை உள்ளிட்ட பெரும் புறம் அனைத்தின் உண்மையை - மெய்மையையும் அறியும் நோக்கமுடையவன்.


இப்பெரு நோக்கமுள்ள மனிதனின் நிலையோ சிறிது. தொட்டாலன்றி உணர முடியாத உடல் கூப்பிடு தூரத்தில் உள்ள உருவத்தைக் காண முடியாத சிறு கண்கள், சிறிய காதுகள், சிறிய வாய், சிறு மூக்கு ஆகிய இவற்றையுடையவன், அனைத்தின் உண்மை மெய்மைகளை அறிதலான தனது நோக்கத்தை அவன் எவ்வாறு நிறைவேற்றுவான்! இதுனால், அவன் கல்வி கற்றல் அவசியமாகிறது.


கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள். கல்லல், கல்வி, கற்றல், கற்பு அனைத்தும் ஒரு பொருட் சொற்கள். சூரியன் பல்லாயிர அடி உயரத்தில் இருக்கிறது; ஒளியால் வெப்பத்தால் அறியப்படுகிறது. இதுவன்றி அதன் உட்புறத்தின் தன்மை வெளிப்புறத்தின் தன்மை அறியப்படவில்லை. ஆயினும் அறிஞர் ஆக்கிய நூற்களில் அச் சூரியனது விஷயப் பெயர்ப்பு உண்டு. சூரியனால் எதிர் பார்த்த அறிவு அதைப்பற்றிய விஷயப் பெயர்ப்புள்ள கல்வியால் நிரம்பலாம்.


அறிவு என்பதற்கும், நூலறிவு அல்லது கல்வி யென்பதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு உண்மை மெய்மைகளை மாத்திரம் ஆதாரமாக உடையது.  நூலறிவு அல்லது கல்வி என்பது உண்மை, மெய்மை, பொய்மை, மடமை முதலியவைகளை ஆதாரமாக உடையது. கேள்வியறிவும் இவ்வாறே.


ஒருவனுக்கு தன்னிலையில் உள்ள அறிவானது விவாதத்துக்குரிய நூலறிவால் பெருகிவரும் காரணத்தால் பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு தார்க்கீகத்துக்கு உட்பட்டதேயாகும். அறிவினால் எதிர்பார்க்கும் பயன் இன்பவாழ்வு பெறுவதாகும். உண்மையும், மெய்மையும் உடைய இவ்வறிவால் இன்பவாழ்வு பெறுதல் நிச்சயம். பொய்மை மடமைகளையும் உடையதான தார்க்கீக ஞானத்தால் இன்ப வாழ்வு கிட்டுதல் நிச்சயமாகுமா?


தார்க்கீகமாவது ‘‘இது சரியா? சரி அன்றா? சரி என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! பிழை என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! வினை பயன் எதுவாயிருக்கலாம்! தீமையோ ! நன்மையோ! என ஒருவன் தனக்குள் தர்க்கம் புரிவதாகும். தார்க்கீக ஞானமானது செயலில் இறங்கத் தீவிரப்படுத்தாது. ஒன்றைப்பற்றி நிச்சயிப்பதற்கும், தயங்குவதற்கும் காரணத்தைத் தானே கண்டுபிடித்திருக்கும் நூலறிவு தார்க்கீகத்துக்குக் குரியதே.


அநுபவஞானம் என்பதொன்று உண்டு. அது உணர்வு, உணர்ச்சி எனவும் சொல்லப்படும் உணர்வு என்பதைச் சிறப்பித்து “ உணர்வு எனும் பெரும் பதம்‘’ என்றார் ஆழ்வாரும்.


தார்க்கீக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி  அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு.


நெப்போலியன், நூலறிவால், தார்க்கீக ஞானத்தால் காரியம் செய்யவில்லை எனவும், அவனது வெற்றி அனைத்தும் உணர்வின் பயனே எனவும் சொல்வர் பாரதியார்.


நமது நாட்டில் விவாதத்துக்குரிய நூலறிவும், கேள்வியறிவும் மிகுதியாகும். இதனால் தான் நம்மவர் செயலற்றுக் கிடக்கின்றனர். பட்டறிந்ததின் பயனாகவாயினும் உணர்ச்சி பெறவில்லை.


உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழை படுவதில்லை. அது உண்மை. மெய்ம்மைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவும் செயலும் அன்றோ! அந்தோ உணர்வு பெறாதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள், நூலறிஞர்கள்.


கடவுட் பைத்தியம், மதப் பூசல், ஜாதி யிறுமாப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பட்ட தொல்லை பல பெரும் பாரதம்! இவைகளைத் தொலைக்க வேண்டும் என்பதை உணராதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள்! அந்தோ இவ்விஷயத்தில் இவர்கள் உணர்வு கொள்ளாதிருத்தலே யன்றி ஏழு ஆண்டுகளாகக் ‘குடிஅரசு’ செய்து போந்த கிளர்ச்சியின் பயனாக உணர்ச்சி ஏறிவரும் பெருமக்களை, சுயமரியாதைக்காரரை - அறிவியக்கத்தினரைப் பார்த்து “இவர்கள் நூலறிவற்றவர்’’ என்றும். ‘‘ஆராய்ச்சியற்றவர்’’ என்றும் சொல்லி உணர்ச்சிக்குத் தடை போடவும் முயல்கின்றனர். இவ்வறிஞர் செயல் தார்க்கீகப் பெரியார் செயல் இரங்கற் குரியதாகும்.


ஓ புராண அறிஞர்களே! இதிகாச அறிஞர்களே! கடவுளறிஞர்களே! மத அறிஞர்களே! ஜாதி அறிஞர்களே! மூடப் பழக்கவழக்க அறிஞர்களே! நூலறிஞர்களே! தார்க்கீக அறிஞர்களே! கண்ணைத் திறந்து பாருங்கள். உணர்வு என்னும் பெரும்பதம் நோக்கி,  மக்கள் அபரிமிதமாக ஓடுகின்றனர். நீங்கள் இருந்த இடத்தினின்று அசையாமலிருக்கின்றீர்களே! உங்கள் நிலை என்னாகும்?


நான் கல்வி, நூலறிவு வேண்டியதில்லை என்கின்றேனா? இல்லையில்லை. உண்மை, மெய்மைகளை ஆதாரமாக உடைய பகுத்தறிவு, நூண்ணறிவு, உணர்வு, நுண்ணுணர்வுகளை யுடையார் ஆக்கிய நூற்களைக் கொள்ளுமாறு கூறுகிறேன். தார்க்கீகத்தை வளர்க்கும் நூற்களைத் தள்ளுமாறு கூறுகிறேன். நல்வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு - சமத்துவமான வாழ்வுக்கு, சகோதரத்துவ வாழ்வுக்குரிய வகையில் உணர்வு கொள்ள வேண்டுமென்பதே எனது கோரிக்கை".


No comments:

Post a Comment