2020 இல் பத்து அம்சத் திட்டங்களுடன் நமது பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 30, 2019

2020 இல் பத்து அம்சத் திட்டங்களுடன் நமது பயணம்


2020 ஆம் ஆண்டுக்கான பத்து அம்ச திட்டங்களுடன் புத்தாண்டு வாழ்த்து களையும் கூறி,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


பிறக்கும் ஆண்டு 2020 ஆகும்!


இயக்கத்தின் பவள விழாவைத் தாண்டு கிறோம்.


அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழா


கடுமையான 'விலையினை' கொள்கை, லட்சியங்களுக்காகத் தரும் வகையில் இயக்கச் செயல் வீரர்கள் - இளைஞர்கள் அத்துணைப் பேரும் ஆர்வத்தோடு இருப் பது, பின்பற்றுவது மட்டுமின்றி, செயற் பாட்டிற்கும் ஆயத்தமாக வேண்டிய கால கட்டமாக அநேகமாக இவ்வாண்டு இருக்கக் கூடும்!


கடுஞ்சோதனைகளையெல்லாம் சந்தித்து, களங்கண்டு, வெற்றி முகங்கண்ட இயக்கமே நம் இயக்கம்!



தஞ்சையில் மாநில மாநாடு, பிப்ரவரி, 2019


உலகமே பெரியாரை உற்றுநோக்கும் நிலை!


நம் விழி திறந்த வித்தகர், விடுதலை வேந்தர் தந்தை பெரியார் வழியில் இந்தி யாவின் வடபுலமும், உலகின் பல நாடு களும் நடந்துவரும் இனியச் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன! நம் உழைப்பு நல்ல பலனைத் தரத் தொடங்கி யுள்ளது.


பிரச்சாரப் பெருமழையும், மழை நீரை அணை கட்டித் தேக்கி, மழை தவறும் காலங்களிலும் பயன்படும் வகையில் அமைதல் போன்று நமது கொள்கை லட்சியங்கள் என்ற ''ஆயிரம் காலத்துப் பயிர்களுக்குப்'' பயன்படுதல் வேண்டும். பயன்படுவது உறுதி!


2019 இல் நமது மெச்சத் தகுந்த பணிகள்!


2019 இல் பல மாநாடுகள் -


பிப்ரவரியில் தஞ்சையில் மாநில மாநாடுகள்,


அதையடுத்து வேலூரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா (மார்ச் 10 இல்),


திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் (ஆகஸ்ட் 27),


அமெரிக்காவில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு (செப்டம்பர் 21, 22),



அமெரிக்காவில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு, செப்டம்பர் 21, 22, 2019


வாஷிங்டன் - மேரிலாந்து பகுதிகளில் அமெரிக்க மனிதநேய சங்கமும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத் தியது!


விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு (நவம்பர் 16)


இடையில் போராட்டங்களுக்கும் பஞ் சமே இல்லை; பிரச்சாரமும் தொடர்ந்தன. பல மாவட்டங்களில் கிராமப் பிரச்சாரமும் இடையறாது நடந்தது; 'விடுதலை' நாளேட் டின் 85 ஆம் ஆண்டு விழா (ஜூன் 15) நடந்தது!


இப்படி அடுக்கடுக்கான பணிகள் அடுத்தடுத்து - தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் தேனீக்களைப்போல சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டே உள்ளனர்!


இயங்கிக் கொண்டே இருந்தால்தானே அது இயக்கம் ஆகும்; இல்லையென்றால், தயக்கம் காரணமான முடக்கமாக அது ஆகிவிடக்கூடும்.


புத்தகங்கள் உண்டாக்கிய புத்தாக்கம்!


ஏராளமான புத்தகங்கள் - புதிய வெளி யீடுகளாக வெளிவந்து, புத்தாக்கத்தை உருவாக்கியுள்ளன!


2020 ஆம் ஆண்டில் அறைகூவல்களை முறியடித்து, புதியவரலாறு படைக்க வேண்டும்.


பெரியார் என்ற எரிமலை பக்கம் நெருங்க, பயந்தோடி பதுங்குகின்றனர் நம் இன எதிரிகள்!


மற்றவர்களை - கட்சிகளை வெல்லம் போல் விழுங்கி ஏப்பம் விடத் துடிக்கும் ஆரியத்தாலும், அதன் ஏவுகணைகளாலும் நெருங்க முடியாததாகவும், இளைஞர் களுக்குச் சரியான கலங்கரை வெளிச்ச மாகவும் மட்டுமல்லாமல், திசை காட்டும் கருவியாகவும்  இருக்கிறார் பெரியார் என்ற பேரொளி.



சேலம் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு, ஆகஸ்ட் 27, 2019


2020 இல் 10 அம்சத் திட்டங்கள்!


2020 இல் இதோ இனிய 10 அம்ச வேலைத் திட்டங்கள்:


1. சமூகநீதி - பாலியல் நீதிகள் பறிப்பு (10% புகுத்தல் - 27% பறித்தல்) - முறியடிப்பு


2. ஜாதி தீண்டாமை ஒழிப்பு - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்


3. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மீட்டெடுத்தல்


4. திராவிடர் கொள்கை விளக்க அறிக்கை பரப்புதல்


5. மதவெறி மாய்த்து, மனிதநேயம் பரப்புதல்


6. பெரியாரை உலக மயமாக்கும் தேவையும், திட்டமும் - மின் மயமாக்குதல்


7. மனித உரிமை பறிப்புகளுக்கு எதிரான பிரச்சாரம்


8. புத்தகப் புரட்சி- பரப்புதல் வெளி யீடுகள் - மின் புத்தகங்கள் - பெரியார் நகர்வு புத்தக சந்தைகள் நாடெங்கும்!


9. இளைஞர்கள் - மாணவர்கள் - மகளிரணியினருக்குப் பயிற்சி வகுப்புகள்


10. அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டு - இயக்கத்தின் அறப்பணிகள் - ஆக்கப்பணிகள் (பெரியார் உலகம்)


பார் முழுவதும் இந்த ஏர்முனையிலே உழுது, விதைத்து, பிறகு கொள்கை வெற்றியினை அடைய முயற்சிப்போம்!


பெரியார் உலகம் - முதலமைச்சரிடத்தில் கோப்பு!



வேலூரில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா, மார்ச் 10, 2019


பெரியார் உலகம் திருச்சி சிறுகனூர் அருகே பெரும் பணிகள் 95 அடி உயரம், 44 அடி பீடம் எல்லாம் தயார் நிலையில்; மத்திய - மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயம் உள்ளது; அதற்கான கோப்பு, தமிழக அரசில், குறிப்பாக முதலமைச்சர் அவர்களிடம் ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாக  (திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பியது) நிலுவையில் இருப்பதால், தேக்கம் ஏற்பட்டுள்ளது.


புத்தாண்டில் இதனை விளக்கி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் அனுமதி அளித்திட வேண்டி, தனியே ஒரு வேண்டுகோள் விண்ணப்பமும் அனுப்ப உள்ளோம். விரைந்து அனுமதி கிடைக்கும் என்றும் நம்பி, காத்திருக்கிறோம்.


புத்தாண்டு வாழ்த்துகள்!


எனவே, 2020 எல்லா முனைகளிலும் இயக்கத்தில் திருப்பம் ஏற்படும் ஆண்டாக அமையும் என்பது உறுதி.


அனைவருக்கும் அன்பு கலந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


30.12.2019


No comments:

Post a Comment