காந்தியார் படுகொலை - தந்தை பெரியார் சிந்தனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

காந்தியார் படுகொலை - தந்தை பெரியார் சிந்தனை!

காந்தியார் கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், தந்தை பெரியார் விடுத்த முதல் அறிக்கையில் கூறியதாவது : “காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ-உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப் படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப் பரிதாபகரமான முடிவின் காரண மாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற் றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948).

“காந்தியாரின் மறைவையொட்டி, இந்தியாவின் சில பகுதிகளில் நடந்தவற்றைப் போன்ற கலவரங்கள் ஏதும் தமிழ்நாட்டில் நடக்காமல் இருந்ததற்கு முக்கியப் பங்களிப்புச் செய்த, பெரியார் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் தேசியப் பத்திரிகைகள் எனக் கூறிக்கொண்ட சில ஏடுகள், தொடர்ந்து ‘வகுப்பு துவேஷக்’ குற்றச்சாட்டைக் கூறி வந்ததால், காந்தியார் இறந்த 32 நாள்களுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் ‘கருஞ்சட்டைப் படை’ (இது ஆர்.எஸ்.எஸ். போல ஆயுதப் பயிற்சியளிக்கும் அமைப்பு அல்ல) சென்னை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள திராவிடர் கழக அலுவலகங்களிலும் கழக உறுப்பினர்களின் வீடுகளிலும் காவல் துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டதும் வரலாற்று முரண்.
இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதற்குச் சில வாரங்களுக்குப் பின், தூத்துக்குடியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பெரியார், முதலில் எடுத்துக்கொண்ட விடயம் காந்தியார் கொலைதான். அந்தக் கொலைக்கான காரணத்தைப் பெரியார் விளக்கினார் : ‘சூத்திரனுக்கு தபஸ் செய்யும் உரிமை இல்லை என்று கூறி அவனைக் கொல்லும்படி இராமனுக்கு உத்தரவிட்ட அதே சக்திகள் தாம் இப்போது காந்தியைக் கொன்றுவிட்டன. காந்தியார் சம்புகன் இனத்தாராகவும், கொன்றவன் இராமன் இனத்தானாகவும் இருந்ததுதான் இக்கொலைக்குக் காரணமே ஒழிய – மற்றபடி தனிப்பட்ட மக்கள் மீதோ, தனிப்பட்ட குணங்கள் மீதோ குறை கூறுவது பொருத்த மற்றதாகும்” (குடிஅரசு, 15.5.1948).

காந்தியாருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் முதல் பிரபல பத்திரிகைகள் வரை பலரும் பலவித ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போது, தந்தை பெரியாரும் தம் பங்குக்குச் சில ஆலோ சனைகளை அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி, ஜவகர்லால் நேரு, ராஜ கோபாலாச்சாரியார், பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோருக்கு அனுப்பினார். இந்தியாவுக்கு ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ் தான்’ என்று பெயரிடலாம் என்பது அந்த ஆலோசனைகளில் ஒன்று! (குடிஅரசு, 14.2.1948).
காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் 2.2.1948 அன்று நடத்தப்பட்டதுடன், அந்த அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது (குடிஅரசு 7.2.1948).

திராவிடர் கழகத்தின் சார்பில் எல்லா ஊர்களிலும் 29.2.1948 அன்று காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்று பெரியார் விடுத்த அறிக்கை (குடிஅரசு, 21.2.1948), அவற்றுக்கான விதிமுறைகளையும் வகுத்தது :
‘காந்தியார் அவர்கள் இயற்கைக்கு விரோதமாக மரண மாக்கப்பட்டதைக் குறித்து அநுதாபப்படவும் கொலைச் சம்பவத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் திராவிடர் கழகத்தார் அநுதாபம் – கண்டனக் கூட்டம் 29.2.1948 ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்ய வேண்டியது. கூட்டத்திற்கு ஆடம்பரம் கூடாது, செலவு கூடாது, ஒலிபெருக்கி கூடாது, சொற்பொழிவு கூடாது, தலைவர் அல்லது அவரால் அழைக்கப்பட்டவர் பின்வரும் தீர்மானத்தைப் படித்ததும், பொதுமக்கள் எழுந்து நின்று ஒரு நிமிஷம் மவுனமாக இருந்ததும் மிக அமைதியாகப் பிரிந்து விட வேண்டியது :-
காந்தியார் மறைவுக்கு அநுதாபத் தீர்மானம் : ‘சென்னை மாகாணத்தில் உள்ள திராவிடர் கழகத்தின் கிளை ஸ்தாபன மாகிய …….. ஜில்லா …….. ஊர் ……. திராவிடர் கழகத்தார் சார்பில் கூட்டப்பட்டதும் திராவிடர் கழகத்தவர்கள் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப் பட்டவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடப்புக்கு மூலகாரண மாயிருந்து அதை நடத்திவந்த முக்கியத் தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களைச் சதாசர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்துத் தனது ஆழ்ந்த துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும் அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக்காட்டிக் கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்று பட்டு வாழ்வோமாக!
அன்பும், அறிவும், சத்தியமும் என்றும் எங்கும் நிகழ்வ தாகுக. அவையே யாவற்றிலும் வெற்றி பெறுவதாகுக.’ இத்தீர் மானத்தை மத்திய நிலையத்துக்கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது. செய்தியை எல்லாப் பத்திரி கைகளுக்கும் அனுப்பவும்.’
பாதுகாப்புக்கான தக்க ஏற்பாடுகள் செய்யத் தவறிய தற்குமான பொறுப்பு, அன்று இந்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கே உரியது என்று ஜெய பிரகாஷ் நாராயணன் கூறியதைச் சுட்டிக்காட்டிய ‘குடிஅரசு’, ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது. வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ் டிக்கப்படக்கூடாது. இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது என்றும் கூறியது (‘காந்தியார் முடிவு’, குடிஅரசு, 7.2.1948).
இந்தியாவில் வேறு எந்த அமைப்பும் தலைவர்களும் சிந்திக்காத வகையில் சிந்தித்து, கருத்துகளைப் பகர்ந்தவர் தந்தை பெரியார் – செயல்பட்டது திராவிடர் கழகம்.
இன்றைக்குக் காந்தியாரை மட்டம் தட்டும் ஆளுநர்கள் கிளம்பியுள்ளனர். காந்தியார் நினைவு நாளில் காந்தியார் உருவம் செய்து துப்பாக்கியால் சுடுகிறது (பூஜா சகுண் பாண்டே இந்துத்துவா அமைப்பு) ஹிந்து மகாசபை என்றால், காந்தியாரைச் சுட்டு உயிரைக் குடித்த கூட்டம்! இன்றும் அதிகார தொனியில் ஆட்டம் போடுகிறது. “சவுரிய திவஸ்” அதாவது துணிச்சலான நாள் என்று ஹிந்து மகாசபை கொண்டாடுகிறது.
சம்புகனைக் கொன்ற சித்தாந்தம் அதிகார பீடத்தில் தொடரலாமா? சிந்திப்பீர்!
காவி ஆதிக்கத்தை ஒழித்து காந்தி சிலைக்கு மாலை சூட்டுவோம்!
மதவெறி மாய்ப்போம் – மனிதநேயம் காப்போம்!

No comments:

Post a Comment