காக்க இதயம், காக்க - காக்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

காக்க இதயம், காக்க - காக்க!

 காக்க இதயம், காக்க - காக்க!

நம் நாட்டில் இதய நோய் காரணமாக ஏற்படும் மரணங்கள் மிக அதிகமாக உள்ளன என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

முன்பெல்லாம் முதிய வயதினருக்குத்தான் பெரும்பாலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும் என்ற நிலையும், கருத்தும் இருந்தது; ஆனால் அது இப்போது    உண்மையல்ல; இள வயதுக்காரர்கள் கூட திடீர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள் என்பதே நடைமுறையில் நாம் தெரிந்து கொள்ளும் வேதனைக்குரிய உண்மையாகும்!

இடதுதோளில் கீழிறங்கும் வலி அல்லது ஒரு வகை மூச்சுத் திணறல், திடீர் மயக்கம் போட்டு விழுந்தவுடன் மரணம் - இப்படிப் பலப்பல உண்டு என்றாலும்கூட, எவ்வித அறிகுறியும், முன்னெச் சரிக்கையுமின்றி திடீர் என்று மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு சாவைத் தழுவுகின்ற நிகழ்வு களும்கூட உண்டு.

எனவே அடிக்கடி தக்க மருத்துவர்களை நாடி, உடற்பரிசோதனையைச் செய்து கொள்ளத் தவறா தீர்கள். அப்படி அவற்றை நீங்கள் அலட்சியப் படுத்தினால் கடும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடும்!

இதய நோய் வகைகளில் பல வகை உண்டு. எனவே சின்னச் சின்ன அறிகுறியாக இருந்தாலும் அதனை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, போதிய ஆய்வுகளை நடத் துவதன்படி - கடல் அலை வரும் போது தலையைத் தூக்கி விட்டால், அந்த அலையை பின் வாங்கச் செய்து தப்பித்துக் கொள்ளல் போன்று நாமும் தப்ப முடியும்.

சிலரின் உடற்கூறில் இதயத் துடிப்பு (Heart Beats) மிக மிகக் குறைவாக இருக்கும் - அதனைக் கூடுதலாக்கவும், அப்படிப்பட்டவர்கள் - இருக்க வேண்டிய அளவு துடிப்புகள் மிக மிகக் குறைவாக இருக்கும் போதும், அதனை குறிப்பிட்ட அளவுக்கு வருவதற்காகத் தூண்டும் சிகிச்சைகளை - மருந்து,  மாத்திரை மூலமோ அல்லது வேறு மருத்துவச் சிகிச்சை மூலமோ மருத்துவர்கள் தருவார்கள்.

அதைவிட மற்றொரு வகையும் உள்ளது. அது ஓர் இதயத் துடிப்பிற்கும், மற்றொரு துடிப்பிற்கும் உள்ள இடைவெளி சரியாக அமையாது  - பல துடிப்புகள் தொடர்ந்து இல்லாமல் (Missed Beats)  தவறிடக் கூடும்.

இந்தத் தவறும் இதயத் துடிப்பு, இதனால் சிலருக்கு பாதிப்பின்றியே அவர்கள் பல காலம் வாழ்வார்கள். 'அரித்மியா' (Arythmia) என்ற இது அளவுக்கு அதிகமாக 1,2,3 விட்டு விட்டு அடிப்பதைத் தாண்டி அடிக்கடி இப்படி அடித்தால் அதனை E.C.G.  என்ற (Electro Cordiogram)  படம் எடுத்தோ, எக்கோ (Eco) என்ற பரிசோதனை மூலமோ அறிந்திட வேண்டும். அதனை அலட் சியப்படுத்தக் கூடாது.

உடலில் உள்ள மின்சாரத் திறன் மூலம் இத்துடிப்பினை ஒழுங்குபடுத்தும் சிகிச்சையை சரியான நேரத்தில் செய்துகொண்டால், தொடர்ந்து வாழ முடியும் - அச்சப்படத் தேவையில்லை.

'ஆஸ்பிரின்' மாத்திரை ஓர் இதயத் துடிப்புத் தடை  அடைப்பான் - தடுப்பான் ஆகும். மருத் துவர் பரிந்துரைப்படிதான் எடுக்க வேண்டும். கடையில் நாமே சென்று வாங்கி விழுங்கி விடக் கூடாது! மருந்தில் விளையாடக் கூடாது!

இதற்குரிய தற்கால நவீன சிகிச்சை முறை  (Ablation) சிகிச்சை என்பதாகும். எது இதயத் துடிப்பிற்கு தடையாக இருக்கிறதோ அந்தத் தடுப்பினை அகற்றிட நோயாளியின் உடலின் உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தியே, மாற்று இதய சிகிச்சை (Bypass surgery) மாதிரி 3,4  மணி நேர முழுமயக்கம் தந்து நடத்திடும் ஆபத்து நிறைந்த (Risk Involved) அறுவைச் சிகிச்சை மூலம் அதனை செய்து கொள்வது அவசிய மானதாகும். அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் ஒருவரால் இது செய்யப்படுகிறது.

இது இப்போது பல நாடுகளில் பரவியிருக்கக் கூடும்.

சிற்சில நேரங்களில் இந்தச் சிகிச்சை பலனளிக்காமல், பக்கவாதம் அல்லது மரணம்கூட ஏற்பட்டு தோல்வியில் முடியலாம்.

அறுவை சிகிச்சை அறைக்கு நோயாளி போகு முன்தான் மருத்துவமனைகளின் முழுப் பொறுப்பு.  இசைவுதான் என்று எழுதி வாங்கித்தானே மருத் துவர்கள் தங்கள் சிகிச்சையைத் துவக்குகின்றனர்!

அபாயத்தைத் தலை மேல் வைக்க அஞ்சினால் நம் வாழ்வில் எதையும் நாம் பெறவே முடியாது!

நடந்து செல்பவர்கள்மீது கார்கள் மோத வில்லையா? தேநீர்கடைக்குள் லாரிகள் புகுந்து மரணங்களை ஏற்படுத்தவில்லையா?

ஆபத்து எங்கேதான் இல்லை  - எனவே அச்சமின்றி துணிந்து இறங்குதல் தேவை - தேவைப்படும்போது. 


No comments:

Post a Comment