குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு

சிறீநகர், ஜன. 31- குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப் பயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்று (30.1.2023) நிறைவடைந்தது. நாட்டின் தாராள வாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளும் விதமாக, தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை (‘பாரத் ஜோடோ யாத்திரை’) கடந்த 2022 செப்.7ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைப் பயணத்தை, கேரளா, கருநாடகா, அரியானா, மகாராட்டிரா, டில்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வந்தது. மொத்தமாக 137 நாட்களில் 3,800 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்த இந்த நடைப்பயணம், ஜம்மு-காஷ்மீரின் சிறீநகரில் நேற்று (30.1.2023) நிறை வடைந்தது. நடைப்பயண முடிவில், அங்குள்ள ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:

நாடு முழுவதும் 137 நாட்களாக நடைபெற்ற நடைப் பயணத்தில் பல்வேறு மாநில மக்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பேசி, குறைகளைக் கேட்டேன். நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ, கட்சி வளர்ச்சிக்காகவோ இந்த நடைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே நடைப் பயணம் மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதே எங்கள்நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கம்.

எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தொலை பேசி மூலம் என்னிடம் அந்த தகவலை தெரிவித்தனர். ஒருவருக்கு அதுபோன்ற தொலைபேசி அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த வலி தெரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்தினருக்கு அது புரியும். வன்முறையை தூண்டுபவர் களுக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. வெறுப்பு உணர்வை தூண்டும் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது.

அது ராணுவ வீரரோ, சிஆர்பிஎஃப் வீரரோ, எந்த ஒரு காஷ்மீரியோ, யாராக இருந்தாலும் ஒருவரது அன்புக்கு உகந்தவரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கும் வலிமிகுந்த நிகழ்வு இனி நடக்கக் கூடாது என்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கம். ஜம்மு-காஷ்மீரில் என்னைப் போல பாஜக தலைவர்கள் யாரும் நடந்துவர முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒரு போதும் அப்படி செய்யமாட்டார்கள். இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல. அவர்கள் பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment