பிப். 3 முதல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2ஆம் தாள் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பிப். 3 முதல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2ஆம் தாள் தேர்வு

சென்னை, ஜன. 31- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 53,023 பேர் எழுதினர். அதன் முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 பேர் (14%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து டெட் 2ஆம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று டிஆர்பி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வு தேதியில் தற்போது மாற்றம் செய்து புதிய அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் 2ஆம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் 14ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெற உள்ளது. இதுதவிர தேர்வர்களுக்கான முதல்கட்ட நுழைவுச் சீட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. முதல்கட்ட நுழைவுச் சீட்டில் தேர்வு மய்யம் அமைந்துள்ள மாவட்டம் மட்டுமே இடம் பெற்றிருக் கும். தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் வெளியாகும் 2ஆவது கட்ட நுழைவுச் சீட்டில் தேர்வு மய்யத்தின் முழு விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கிடையே டெட் 2ஆம் தாள் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் முந்தைய தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதால் 10 பேர் உட்பட 30 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment