'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் தந்த அறிவுப் போர்க் கருவிகளான அந்நாளைய, ‘குடிஅரசு', ‘பகுத்தறிவு', 'Revolt' இந்நாளைய ‘விடுதலை', ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு' 'The Modern Rationalist' போன்ற அறிவாயுதங்கள் அறியாமை, ஜாதி, வர்ண சனாதன தர்மம் போன்ற பிற்போக்கு மூடத்தனங்களையும், ஆணவ வெறுப்பை விதைத்து, அரசியல் அதிகாரத்தை அறு வடை செய்ய முனைந்து நாட்டின் சமூக நல்லிணக்கத்தை அழிக்க முயலும் நோய்க் கிருமிகளையும் எதிர்த்து "நாளும் மக்களுக்கு அறிவூட்டும் திருப்பணியே - தெருப்பணியே நம் பணி" எனச் சிறந்தனவாகும்.

இதுபற்றி இன்று பல்கலைக்கழங்களில் பெரியாரை ஆய்வுத் தலைப்புகளாக்கி, டாக்டர் பட்டங்கள் வழங்கு கின்ற அளவுக்கு பெரியார் என்ற பேராசானின் அறிவுத் திரு அகண்டமாகி, அகிலம் முழுவதும் ஒளி பாய்ச்சி பிறவி பேதக் கொடுமையை அகற்றி, சமத்துவத்தையும், சமூக நீதியையும் உலகெங்கும் பரவச் செய்திடும் அறிவு கொளுத்திடும் பணியை அயராது செய்கிறது.

அப்படிப்பட்ட கருவிகளைக் கண்டறிந்து தந்த அறிவு ஆசான் - அதனைப் படிக்கும் வாசகர்கள் உறவு எப்படிப் பட்டது என்பதை டாக்டர் பட்ட ஆய்வாளர், சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.சுப்பிரமணி அவர்கள் எப்படி படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள்:

பெரியார் - வாசகர் உறவு

"இதழ்களின் ஆதாரமே வாசகர்கள் தான் என்பதனால் இதழாளர்கள் எப்போதும் வாசகர்களுடனான தமது உறவைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்து வதுண்டு. தந்தை பெரியார் மக்களிடம் இயல்பாகவும், எளிமையாகவும் பழகும் பண்புநலன்கள் கொண்டவர் என்பதனால், மக்களுக்கும் பெரியாருக்குமான உறவு என்பது நட்புமுரண் கொண்ட தோழமையாகவே இருந்தது. இதனால் இதழ்கள் தொடங்கிய போதும் அவர் கடைபிடித்த எளிமை, வெளிப்படைத்தன்மை போன்றவை வாசகர்களி டையே அவருக்கு ஈர்ப்பானதொரு உறவைக் கட்டமைத் தது எனலாம்.

நடுநிலை நாளேடு, விருப்பு வெறுப்பற்ற இதழ் என்ற முகமூடிகள் ஏதுமில்லாமல் நான் பகுத்தறிவாளன், இறை மறுப்பாளன், வைதீக எதிர்ப்பாளன், பிராமண எதிர்ப் பாளன், ஒடுக்கப்பட்டோர் ஆதரவாளன் என்ற சமூக, அரசியல் நிகழ்ச்சி நிரல்களோடு தான் பெரியார் தனது இதழியல் அடையாளத்தை வெளிப்படுத்தினார். 

இதழியல் உலகில் நடுநிலைமை என்ற போர்வையில் அறம்சார் இதழியல் செய்வதாகக் கூறிக்கொள்ளும் பொய்த்தன்மை எதுவும் தந்தை பெரியாரின் இதழியலில் இல்லை. மாறாக ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்ட வர்கள், ஆதிக்கத்தால் அழுத்தப்பட்டவர்கள், புறக்கணிக் கப்பட்டவர்கள் பக்கமே என் இதழியல் எனப் பெரியார் தமது இதழியல் கோட்பாட்டை உருவாக்கிச் செயல்படுத்தி யுள்ளார்.

தான் ஏன் இந்தப்பணியை மேற்கொண்டுள்ளேன் என்பதற்குப் பெரியார் தரும் விளக்கம் அவரின் கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் எவ்வித ஒளிவு மறைவுமின்றி முன்வைக்கிறது. தனது இதழ் குறித்துப் பேசும் பெரியார், "தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபி மானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடை யுணர்த்துவதற்கே யாம், ஏனைய பத்திரிகைகள் பலவிருந் தும், அவைகள் தங்களது மனச்சாட்சிக்குத் தோன்றிய உண் மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்கவேண்டுமென்பதே எமது நோக்கம்" (‘குடி அரசு', 2.5.1925) என்கிறார்.

தந்தை பெரியார் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில், அதனை எடுத்துரைக்கும் நிலைப்பாட்டில் மிக உறுதியாகச் செயலாற்றி இருப்பதனைக் காண முடிகிறது. தமது சமூக, அரசியல் இயக்கங்களாகட்டும், இதழியல் முயற்சிகள் ஆகட்டும் அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் பெரியார் இயங்கி இருப்பதனைக் காணலாம். தான் ஏன் ‘குடி அரசு' என்னும் பெயரில் தனியாக இதழ் ஆரம்பித் தேன், இதனை எவர் வாசிப்பர் என்ற கேள்வியைத் தனக்குத்தானே எழுப்பிக் கொண்டு விடையளிக்கும் பெரியார். அது குறித்து எழுதுகையில்,

"எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும்வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும். இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட வில்லை வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந் தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்று கொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன். நீங்கள் என்னை என்னதான் சொன் னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்."

- தொடரும்


No comments:

Post a Comment