பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

பிற இதழிலிருந்து...

ராம நவமி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்கள்

மார்ச் 30 ராம நவமி அன்று நாட்டின் பல பகுதி களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்ட ங்கள் மற்றும் மோதல்கள் மதவெறியர்களால் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டவையாகும். கடந்த சில ஆண்டு களாகவே, இந்துத்துவா வெறியர்கள், ராம நவமி ஊர்வல ங்களை, முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். சென்ற ஆண்டு, ராம நவமி ஊர்வலங்களின் போது மிகவும் விரிவான அளவில் தாக்குதல்களும், மோதல்களும் ஏவப்பட்டன. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் கான்கோன் மற்றும் மகாராட்டிரா, குஜராத், கோவா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஷிப்பூர், ஹவுரா ஆகிய இடங்களில் வன்முறை வெறியாட் டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதைப் பார்த்தோம்.

இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நடைபெறும் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, முஸ்லீம்கள் அதிகம்  வாழும் பகுதிகளில், மசூதிகளில் அவர்கள் தொழுகை நடத்திடும் சமயங்களில் இந்துத்துவா மதவெறியர்கள் ஆத்திர மூட்டும் விதத்தில் இழி செயல்களில் ஈடுபட்டார்கள். மார்ச் 30 அன்றும் அதனைத் தொடர்ந்து சில நாட்களும், ஜல்கான், மாலத், அவுரங்காபாத் (இப்போது அதன் பெயர் சம்பாஜிநகர்) முதலான இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பீகாரில் சசாரம் மற்றும் பீகார் ஷரிஃப்  என்னுமிடங்களில் வன்முறைகள் நடந் துள்ளன. இதே போன்று அரியானாவிலும், குஜராத்தில் வதோதராவிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந் துள்ளன. மேற்குவங்கத்தின், ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. பின்னர் ஹூக்ளி மாவட்டத்தில் ரிஷா என்னுமிடத்தில் மோதல்கள் நடந்துள்ளன.

பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல...

மகாராட்டிரா மற்றும் குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாது, மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களிலும் ராமநவமி ஊர்வலங்களின்போது வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் - சங்பரிவார அமைப்புகள் ராம நவமி ஊர்வலங்களைப் பயன்படுத்திக்கொண்டு, முஸ்லீம் பகுதிகளுக்குள் நுழைந்து, மசூதிகளுக்கு முன்பு, வாள்கள்  மற்றும் கொடிய ஆயுதங்களை ஏந்தி நின்று கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் விதங்களில் கூச்சல் போட்டுள்ளனர். இதன் காரண மாக ஹவுரா மற்றும்  தால்கோலா ஆகிய பகுதிகளில் மோதல்கள்  நடந்து, ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். பலர்  காயமுற்றிருக் கின்றனர்.

வேடிக்கை பார்த்த மம்தா அரசாங்கம்

இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்ன வெனில், ஹவுராவில் ராமநவமி ஊர்வலப் பாதையைத் திருப்பிவிட்டு முஸ்லீம்களுடனான மோதல்களைத் தவிர்த்திடத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கை எதையும் காவல்துறையினரோ, நிர்வாகமோ எடுக்கவில்லை என்பதாகும். சில இடங் களில், மோதல்கள் நடந்துகொண்டிருந்தபோது காவல் துறையினர் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டனர். சில இடங்களில் குண்டர்களுடன் இணைந்து தாக்கு தல்களைத் தொடுத்துள்ளதையும் பார்க்க முடிந்தது. இந்துத்துவா வெறியர்களின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்திட உறுதியான நடவடிக்கைகள் எதையும் மம்தா  அரசாங்கம் எடுத்திடவில்லை. இதேபோன்று தான் சென்ற ஆண்டும் ஹவுரா, ஷிப்பூர் முதலான இடங்களில் மோதல்கள் வெடித்தன. முந்தைய ஆண்டுகளிலும் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல்கள் மதவெறிப் பதற்ற நிலைமைகளை உருவாக்கி,  மோதல்களை உருவாக்கிட, இதுபோன்று ராம நவமி ஊர்வலங்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த சமயங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் அவற்றில் தங்களை யும் இணைத்துக்கொண்டு சென்றார்களே தவிர, அவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலை எதிர்த்து முறி யடித்திட முனையவில்லை. இப்போது, மதவெறியர்களின் நடவடிக்கைகளால் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள சிறுபான்மையினரிடம் அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் அடைந்திடலாம் என யோசிப்பதாகவே தோன்றுகிறது.

பாஜக, திரிணாமுல் உடந்தை

மேற்குவங்கத்தில், பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் மதவெறி அடிப்படையில் மக்களிடையே பிளவினை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒருவர்க்கொரு வர் உடந்தையாகவே இருந்து வருகிறார்கள். முக்கியமாக, திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  இடது முன்னணியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், இவ்வாறு இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

தீக்கிரையான கல்வி நிறுவனம்

பீகாரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங் களின் போது, பீகார் ஷரீப் மற்றும் சசரம் பகுதிகளில் மசூதிகள், மதராசாக்கள், வீடுகள், வாகனங்கள், கடைகள் சூறை யாடப்பட்டிருக்கின்றன; தீக்கிரையாக் கப்பட்டிருக்கின்றன. மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் எதுவென்றால் மிகவும் பழமையான கல்வி நிறுவனமாக விளங்கும் மதராசா-இ-அசிசியா தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாகும். அங்கிருந்த 4,500 புத்தகங்கள் மற்றும் அபூர்வமான ஓலைச்சுவடிகள் தீக்கிரையாக்கப்பட்டு, அழிக்கப்பட்டி ருக்கின்றன. பீகாரில், நிதிஷ் குமார் அரசாங்கம் இந்துத்துவா வெறியர்களின் இழிவான இத்தகைய நிகழ்ச்சிநிரலைக் கையாள்வதற்குத் தேவையான தயாரிப்புப் பணிகளைச் செய்யாமல், எல்லாம் நன்றாகவே நடக் கிறது என்பது போன்று திருப்தி மனப்பான்மையுடன் இருப்பதுபோலவே தோன்றுகிறது.

பீகார் அரசு கவனமாக இருக்கவேண்டும்

நிதிஷ்குமார் மற்றும் அய்க்கிய ஜனதா தளம் மீண்டும் மகாகத்பந்தன் கூட்டணிக்குத் திரும்பியபின், பாஜக அங்கே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ராமநவமி தினத்தன்று நடைபெற்றுள்ள வன்முறை நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மீண்டும் அங்கே ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்கள் மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கொண்டு செல்லக்கூடிய விதத்தில், தங்கள் அரசியல் சூழ்ச்சி களை ஒருங்கிணைக்கிறார்கள் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு முஸ்லீம் இளைஞர் சரண் என்னு மிடத்தில், மாட்டிறைச்சி கொண்டுசென்றார் என்று குற்றம்சாட்டி, கொல்லப்பட்டிருப்பது ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும். மாநில அரசாங்கமும், நிர்வாகமும் மதவெறி அடிப்படையில் எவ்விதமான ஆத்திர மூட்டும் நட வடிக்கைகளும் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ளும் விதத்தில் முன்கூட்டியே விழிப் புடன் இருந்திடவேண்டும். மேற்கு வங்கம் போல் அல் லாமல், பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி மதவெறி சித்தாந்தத்தையும், மதவெறியர்களை யும் எதிர்த்து முறியடித்திடக்கூடிய விதத்தில் உறுதியுடன் இருந் திருக்கிறது. இது உறுதியான நிர்வாக நடவடிக்கை களின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

முதலமைச்சர்களிடம் பேசாத அமித்ஷா

இந்தப் பிரச்சனைகளில் ஒன்றிய அரசாங்கம் பாகுபாட்டு டன் நடந்துகொள்வது என்பது பட்டவர்த் தனமாகவே தெரிகிறது. உள்துறை அமைச்சர், அமித்ஷா, இவ்விரு மாநில முதலமைச்சர்களுடன் எதுவும் பேசவில்லை. மாறாக, அதன் ஆளுநர்களிடம் அங்குள்ள நிலைமைகள் குறித்துப் பேசியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கங்களை ஓரங்கட்டிவிட்டு, தாங்கள் நியமித்துள்ள ஆளுநர்கள் அங்கே ஆட்சி நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் எதிர்பார்ப்பதன் சமிக்ஞையே இது. மேலும், பீகாருக்குச் சென்ற அமித்ஷா, அங்கே பேசுகையில், மாநி லத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மதவெறிக் கலவரங்கள் இருக்காது என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர், கலவரக்காரர்களை தலைகீழாகத் தொங்க விடுவோம் என்றும் 

கூறியிருக்கிறார். இதன் பொருள் என்னவெனில், முஸ்லீம்களை கலவரக்காரர்கள் என முத்திரைகுத்தி, அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதேயாகும். ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி மற்றும் இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹனுமான் ஜெயந்தி போன்ற மத விழாக்கள் சிறு பான்மையினர் மீது தாக்குதல் தொடுப்பதற்கான ஆயு தங்களாக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, மதவெறித் தீயை மிகத் தீவிரமாக விசிறி விடப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், குறிப்பாக பாஜக அல்லாத மாநில அரசாங் கங்கள், இவர்கள் கட்டவிழ்த்து விடும் மதவெறி நடவடிக்கைகளை அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதி யாகவும் எதிர்த்து முறியடித்திட, சரியான உத்திகளை வகுத்திட வேண்டும்.

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆங்கில இதழ்

தலையங்கம் (ஏப்ரல் 5,2023)

தமிழில்: ச.வீரமணி

நன்றி: 'தீக்கதிர்', 12.4.2023

No comments:

Post a Comment