Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பன்னாட்டு குறும்படத் திருவிழா
March 11, 2023 • Viduthalai

பாலு மணிவண்ணன்

கந்தக பூமியாய்க் கனன்று கொண்டி ருக்கும் சென்னை பெரியார் திடலில் கடந்த 9 நாள்களாக தென்றல் வீசியது! 

 தென்றல் என்றால் இதமான தென்றல் அல்ல; தீயாய்ச் சுடும் தென்றல்!

அப்படியா! அது என்ன தென்றல்? தீப்பந்தங்களாய்த் திரண்டு வந்த திரைப் படங்களே அந்தத் தென்றல்!

அவை பற்ற வைத்த தீ, பார்வையாளர் களின் மூளைகளைத் தட்டி நிமிர்த்தி கூர்மைபடுத்தியது! 

புதிய பார்வை, புதிய ரசனை, புதிய சிந்தனைகளைக் கிளறி விட்டது.

11ஆம் சென்னை பன்னாட்டு ஆவணப் பட மற்றும் குறும்பட விழா என்னும் அந்த விழாவினை, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையும் மறுபக்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

அமைதிப் பூங்காவாகத் திகழும் உத்தரப் பிரதேச அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் திடீரென்று பாய்ந்து நுழைகின்றன போலீஸ் நாய்கள். அவற்றை முந்திக்கொண்டு தாவுகின்றன. உ.பி மாநில போலீஸ் படையும் அதிரடிப்படையும்!

மூன்று மணி நேரம் துப்பாக்கிக் குண்டு கள் தீரும் வரை மாணவர்களை நோக்கிச் சுடுகின்றனர்; பரவியிருந்த பச்சைப் புல் வெளிகள் சிவப்பு இரத்தக் காடாக மாறு கின்றன. தடியடி.. கண்ணீர்ப் புகை.. குண்டு வீச்சு.. படிக்கும் மாணவர்கள் பதறித் துடிக்கும் காட்சி பார்வையாளர்களைப் பதற வைத்தது.

மாணவர்கள் தங்கும் அறைகளுக்குள் ஆர்.எஸ்.எஸ் அடியாட்களாய் , கதவு சன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், உறங்கும் மாணவர்களை எழுப்பி அடித்ததும் உதைத்ததும் ஈவு இரக்கமற்ற செயல்.

அந்த மாணவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? முஸ்லிம்களாக பிறந்ததுதான். 

"பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட் டத்தை எதிர்த்து அன்று ஊர்வலம் வேறு போனார்களே, அது தவறு இல்லையா?" என்று பத்திரிகையாளர் பேட்டியின் போது கேட்டார், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

இந்த அவலத்தையும் அநியாயத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

‘IN A DISSENT MANNER’  என்ற ஓர் ஆவணப்படம். திரையிடப்பட்ட சுமார் 30 ஆவண மற்றும் குறும்படங்களும் இப்படியே பார்வையாளர்களின் மூளை களை உசுப்பி விட்டன.

ஒன்றிய அரசாட்சி சிறுபான்மையர் நலனுக்கு எதிராகச் செயல்படும் பாசிச ஆட்சிதான் என்பதை அத்தனை படங் களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்திய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல; எல்லா நாட்டு ஆட்சியாளர்களும் தம் மக்களுக்கு இப்படியெல்லாமா இன்னல் தருவார்கள் என்கிறீர்களா..

”ஆம்” என்று உரக்கச் சொல்லின அத்தனை படங்களும் பின்லாந்து நாட்டிற்கு வேலை தேடிப் போன கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியுரிமை வழங்காமல் அவர்களை அந்நாட்டு அதிகாரிகள் அலைக்கழிப்பதும் மக்கள் இங்கும் அங்குமாக, வேலைதேடி அலைவதும்.. பசியும் பட்டினியுமாக அல்லல்படுவதும் கொடுமை.

நரேந்திர மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறினால் நம் நாட் டிலும் வேலை தேடுவோருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு இதே நிலை நேரிடலாம் என்கிறது LAS ABOGADAS.  

”தாய் நிலம்’’ என்றொரு உணர்ச்சி கரமான ஆவணப்படம், இலங்கையில் வாழும் தமிழர்களின் சொந்த நிலங்களை சிங்கள அரசு எப்படி ஆக்கிரமித்து,சிங்களர்களைத் குடும்பம் குடும்பமாகக் குடியேற்றி வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இப்படியே போனால் தமிழர்கள் , தம் சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரிய வேண்டி வருமே என்கிற தவிப்பைத் தருகிறது ”தாய் நிலம்’’.

சீன அரசு, தம் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காக முதலாளித்துவக் கற்ப னைகளோடு கட்டிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளான A PILE OF GHOSTS  என்ற படம் கிண்டல் அடிக்கிறது.

எல்லா நாட்டு அரசு அதிகாரிகளும், ஆட்சி புரிவோரின் அடிமைகள் தானே! 

சீன அரசின் வீடு கட்டும் திட்டம், சிறு பிள்ளைகள் விளையாட்டாக இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறார் இயக்குநர்.

கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ 

கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரியாரியல் பார்வையில் குறும்படம்

ஆண் இனம் இதுவரை அறிந்திராத அல்லது அறிய முற்படாத ஒரு பாலியல் பிரச்சினையை முன் வைக்கிறது. ‘SEX RELISH’ என்னும் ஓர் ஆவணப்படம். 

என்ன அந்தப் பிரச்சனை?

எந்த ஓர் ஆணும் பெண்ணுடன் இணையும் போது உயிர் அணுக்கள் வெளியானவுடன் ஆண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். ஆனால், பெண்ணுக்கு அதே உச்சகட்ட இன்பம் கிடைக்கிறதா? அதற்கு என்ன தீர்வு என்று ஆண்கள் யோசிப்பதில்லை. பெண்களும் ‘சரி போ’ என்று சகித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

இந்த செக்ஸ் பிரச்சினையில் பெண் உரிமை ஒடுங்கிக் கிடக்கிறது என்னும் பெரியாரின் பெண்ணியச் சிந்தனையின் நீட்சியாக உள்ளது இப்படம்.

தற்போதைய ’நீட்’ பிரச்சினையும் முன் வைக்கப்படுகிறது ENTRANCE.

EXAM என்னும் ஆவண படத்தில். ‘நீட்’ தேர்வுக்கான படிப்பு. எப்படி இளம் மாணவர்களை வாட்டி வதைக்கிறது, தேர்வுக்கான பயிற்சி மற்றும் தேர்வுக்கான முன் தயாரிப்புகள்   - எப்படி மாணவர்களின் ஆர்வத்தைக் குலைக்கிறது என்பதைக் குறியீட்டு பாணியில் சொல்கிறது இப் படம்.

இதைப்போல பல்வேறு பிரச்சனை களை நேர்த்தியாகவும் அழகான திரை மொழியிலும் சொல்லும் பல படங்கள் பார்வையாளர்களின் சிந்தனைக்கு விருந் தாக அமைந்தன. 

அவற்றில் மனதை வருடும் இரண்டு கலைப் படங்கள் குறித்து பரிமாறிக் கொள்ள வேண்டியது முக்கியம்.

’சரோடு’ வாத்திய வித்வான் பண்டித் ராஜூ தாரா நாத் வாழ்க்கையைப் பற்றிய நேர்கா ணல்கள் அந்த இசை போலவே துடியாக இருந்தன. விழாவில் திரையிடப்பட்ட மென்மையான மற்றொரு படைப்பு THE ART WORLD OF AATHI MOOLAM  ஆவணப்படம்.

சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்து, ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட பல்வேறு ஓவியக் கலைஞர்களையும் சிற்பக் கலை ஞர்களையும் உருவாக்கி, தனக்கென தனித்துவமான ஓவியப் பார்வையோடு பல்வேறு ஓவியங்களை உலகத்திற்கு வழங்கியுள்ளார் ஆதிமூலம்.

அவரது பாதையும் பயணமும் பல்வேறு ஓவியர்களை எதிர்காலத்தில் உருவாக்கக் கூடியது என்ற வார்த்தைகளோடு படம் முடிவது பல கலைஞர்களுக்குள்ளும் பல படைப்பாளிகளுக்குள்ளும் வேர் விட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.

மக்களுக்கான புதிய பாதை காட்டும் இவை போன்ற திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் கடந்த 11 ஆண்டுகளாகத் திரையிட்டு வருகின்றனர் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் அமைப்பினர்

இவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பின் தொடர வேண்டியது தான் - என்று பார்வையாளர்கள் சொல் லிச் சென்றனர். பார்வையாளர்கள் குவிய வேண்டும் என்பதும், அவர்கள் எல்லாம் படைப்பாளிகளாக மலர வேண்டும் என்பதும், அதன் மூலம் சமத்துவ சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என்பதும்தான் நமது ஆவலும் அக்கறையும்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn