பயண அட்டை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

பயண அட்டை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த அனுமதி

சென்னை, மார்ச் 26 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ,சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலை யங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது  வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவ தற்கு பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளின் வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.

பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயண அட்டை கவுன்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மெட்ரோ ரயில் பயணிகள் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள பயண அட்டை விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் மறு ஊட்டம் செய்து கொள்ளலாம். வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் பயண அட்டைகளுடன் மட்டுமே கிடைக்கும். வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுகொள்ளப்படும் என்பதால் அனைத்து பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாகப் பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment