பிற இதழிலிருந்து... அண்டசராசரமும் ஏன் அரிக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

பிற இதழிலிருந்து... அண்டசராசரமும் ஏன் அரிக்கிறது?

'முரசொலி' தலையங்கம்

அண்டசராசரமும் எரிய ஏன் அவாளுக்கு அரிக்கிறது? எதனால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை? சாதனைகளுக்கு மேல் சாதனைகளைச் செய்தால் அவர்க ளுக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்? ‘தலையைச் சொறிந் தபடியே’ நிதி நிலை அறிக்கையை திருப்பித் திருப்பி பார்க்கிறார்கள். திக்கு முக்காடிப் போகிறார்கள். ஒரே ஒரு அறிக்கையில் இத்தனை அறிவிப்புகளா? இவ்வளவையும் செயல்படுத்தினால் எவ்வளவு பேரும் புகழும் இந்த தி.மு.க. அரசுக்கு கிடைத்துவிடுமே என்ற வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டி தலைப்பு போடுகிறது ‘தினமலர்’.

நிதி நிலை அறிக்கை என்றால் நிர்மலா சீதாராமனைப் போல அரசாங்கச் சொத்தை தனியாருக்கு விற்பதாக இருக்க வேண்டாமோ? அப்படி எதுவும் இல்லாத அறிக்கை என்ன 

நிதிநிலை அறிக்கையாக இருக்க முடியும் என்று ‘தினமலர்’ ஆசிரியர் குழு நினைத்திருக்கலாம். ஒன்பது ஆண்டுகாலமாக ஒன்றிய அரசு எல்லாவற்றையும் விற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் ‘திராவிட மாடல்’ ஆட்சியானது உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி உருவான நேரத்தில் 2021 ஜூலையில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும் போது, ‘’ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதி நிர்வாகத்தை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவியுங்கள்” என்று துணிச்சலாகக் கேட்டார். இதுவரை எந்த மாநில நிதி அமைச்சரும் கேட்காதது இது. ஆடிப் போனார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

‘’உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப் படுத்தப்பட்ட பின், நம் அரசமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, ஒன்றிய அரசாங்கத் திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலமாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத் தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோப மும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்” என்று பேசினார். இந்த ஆத்திரத்தைத்தான் தீர்த்துக் கொள்கிறது ‘தினமலர்’.

இவ்வளவு நிதி நெருக்கடியை பா.ஜ.க. அரசு கொடுத்த பிறகும் இத்தனை திட்டங்களைத் தீட்டுகிறார்களே என்று வன்மம் தலைக்கேறி தலைப்புச் செய்தியைப் போடுகிறார் கள். தனக்கு முன்னால் இருக்கும் கணினி தொடுதிரையை குனிந்து பார்த்து இருப்பவரின் தலைக்கு மேலே கேமரா வைத்தால் அவர் தூங்குவது போலத்தான் இருக்கும் என்பது தலையில் பிறந்தவர்க்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் ஏன் கிண்ட லடிக்கிறார்கள் என்றால்... பாராட்ட முடியாது அல்லவா? அதனால் கிண்டல் அடித்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது அந்தக் கூட்டம்.

எடுத்தவுடனேயே சமூக நீதி, பெண்களுக்கான சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத் தறிவு ஆகிய நான்குதான் இந்த ஆட்சியின் அடிப்படைத் தத்துவம் என்று சொல் கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த நான்கையும் பார்த்தாலே அந்தக் கூட்டத் துக்கு எரியும். ஆரியக் கூட்டத்துக்கு நூறு ஆண்டுகளாக ஆப்பு வைத்து வருவதே இந்த நான்கு தத்துவங்கள்தான்.

* ஹிந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்நீத்த நடராசனுக்கும் தாளமுத்துவுக்கும் நினைவு மண்டபமாம்!

* ஆரியத்தின் வேர் அறுக்கப் போராடிய அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் வருமாம்!

*  ‘ஜாதி பேதமற்ற திராவிடர்களே’ என்று அழைத்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரால் குடியிருப்புகள் திட்டமாம்!

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டமாம்!

* ஈரோடு வனவிலங்குச் சரணாலயத்துக்கு தந்தை பெரியார் பெயராம்!

* தமிழ்ப் பண்பாட்டு கடல்வழிப் பயணங்களை ஆராயப் போகிறார்களாம்!

* சோழர்களுக்கு அருங்காட்சியகமாம்!

* இலங்கைத் தமிழருக்கு வீடுகளாம்!

* தமிழினத் தலைவர் கலைஞர் பெயரால் அறிவு நூலகமாம்!

- பக்கத்தைத் திருப்பத் திருப்ப ‘தினமல’ பத்திரிக்கைக்கு குமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. அந்த வாந்தியை தலைப்பாக்கி இருக்கிறது.

‘பொம்மனாட்டிகள் எதுக்கு வேலைக்கு போவனும்? நாட்டுல பிரச்சினையே அதுனாலதான் வந்தது’ என்று கேட்டார் பெரிய மடாதிபதி ஒருவர். கதாகாலட்சேபம் செய்யும் சிலர் இன்னமும் அதனை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் வாட்ஸ் அப்பில் பரப்பிக் கொண்டு இருக்கிறது சனாதனக் கூட்டம். இந்தச் சூழலில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்பது அந்த இனத்தையே சமூகப் பங்களிப்புக்கு வெளியில் இழுத்து வருவதை இந்த சனாதன சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை கொடுக்க முடியாது தி.மு.க. அரசால் என்று இவர்கள் நினைத்தார்கள். ‘எடப்பாடி சுரண்டிவிட்டுப் போன சோத்துப் பானையை வைத்து சமையல் செய்ய முடியாதே’ என்று வக்களிப்பு காட்டிக் கொண்டு இருந்தார்கள் சிலர். ஆனால் 1000 ரூபாய் அறிவித்துவிட்டார்களே என்ற கோபம் அவர்களுக்கு. ‘இனி கேட்பதற்கு தி.மு.க. அரசிடம் எதுவும் இல்லையே’ என்ற ஆத்திரம்!

‘’கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும் பாலானவற்றை நிறைவேற்றிவிட்டார்கள். மீதம் இருப்பதையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றி முடிப்பேன் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க.வின் பெயர் உச்சியில் இருக்கும்’’ என்று நினைத்து இதனைத் திசை திருப்பவே இந்த திருகுவேலையில் இறங்குகிறார்கள். 

"திராவிட இயக்கத்தை நூறடி பள்ளத்தில் புதைப்பேன்" என்று சொன்னவர் ‘வாய் ராசி’ திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளைக் கடந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.

- நன்றி: ‘முரசொலி', 24.3.2023


No comments:

Post a Comment