தந்தை பெரியாரால் எங்களைப் போன்றோர் ஏற்றம் பெற்றோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

தந்தை பெரியாரால் எங்களைப் போன்றோர் ஏற்றம் பெற்றோம்

வைக்கம் நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மரியாதை!

கேரள மாநில தலைமை நீதிபதி சா.மணிக்குமார் நெகிழ்ச்சிப் பதிவு

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகராட்சியில் தமிழ்நாடு அரசின் பராமரிப்பில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவகம் அருங்காட்சியகத்தை கேரள மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சா.மணிக்குமார் தனது மனைவியுடன் நேரில் சென்று மரியாதை செலுத்தியபின், அங்குள்ள குறிப்பேட்டில், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் போன்ற மகத்தான தலைவர்களால் எங்களைப் போன்ற மக்கள் இன்று படித்து முன்னேறி இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கவில்லை. ஏன் அந்தக் கோவிலைச் சுற்றி அவர்கள் நடமாடவும் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரியும், 1924ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. பலமுறை கைது செய்தும், பல கட்டுப்பாடுகளையும் திருவிதாங்கூர் அரசு  விதித்தது. அனைத்து தடைகளையும் மீறி தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தில் குதித்தார். அதில் வெற்றி பெறும் வரையில் தன் போராட்டம் ஓயாது என்று கூறி அதில் வெற்றிகண்டார். அதனாலே தந்தை பெரியார் அவர்களை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் ‘வைக்கம் வீரர் பெரியார்’ என்றே அழைத்தனர்.

இந்த புரட்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட வைக்கத்தில்தான் தமிழ்நாடு அரசு பராமரிப்பில் தந்தை பெரியார் நினைவகம் உள்ளது. அந்த நினைவகத்தை பல்வேறு போராளிகள், பல்வேறு அறிஞர்கள், வெளிநாட்டினர். பல்வேறு கட்சித் தலைவர்கள் சென்று பார்த்து தந்தை பெரியார் அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சாமிதுரை அவர்களின் மகன் நீதிபதி சா.மணிக்குமார் கேரள மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

அவர்தம் வாழ்விணையருடன் 9.12.2022 அன்று வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்திற்குச் சென்று பார்வையிட்டு, பதிவேட்டில் நெகிழ்ச்சியுடன் தம் கருத்தை பதிவிட்டுள்ளார்.

வைக்கம் தந்தை பெரியார் நினைவகம், அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின், அங்குள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நீதிபதி சா.மணிக்குமார் தம் வாழ்விணையருடன் இணைந்து தந்தை பெரியார் உருவச் சிலை அருகில் நின்று ஒளிப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பார்வையாளர் வருகைப் பதிவேட்டில்: தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரைப் பற்றி பெருமிதத்துடன் தமிழிலேயே எழுதி கையெழுத்திட்டார்.

கேரள மாநில தலைமை நீதிபதி சா.மணிக்குமார் பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதியது வருமாறு:

“இன்று நானும் எனது மனைவி மற்றும் துறை அதிகாரிகளுடன் அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற மகத்தான தலைவர்களால் எங்களைப் போன்ற மக்கள் இன்று படித்து முன்னேறி இருக்கிறோம். சிறு வயதில் பெரியாரின் கைகளை நான் தொட்டுஇருக்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் இம்மண்ணில் அவரை பார்த்ததில், பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.’’

இவ்வாறு நீதிபதி சா.மணிக்குமார் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment