பன்முகத் திறனாளி ஃபாத்திமா அன்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

பன்முகத் திறனாளி ஃபாத்திமா அன்சி

ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் நாளில் வழங்கும் சிறப்பு விருதின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பன்முகத் திறமையாளரான ஃபாத்திமா அன்சி. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து 18 வயதுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளி பிரிவிற்கான சிரேஷ்ட திவ்ய பாலிகா விருதை ஃபாத்திமா அன்சி பெற்றுள்ளார்.

மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா அருகிலுள்ள மேலாட்டூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த அப்துல் பாரி - சல்மா இணையரின் ஒரே மகளான ஃபாத்திமா அன்சி பிறவியிலேயே நூறு விழுக்காடு பார்வைக் குறைபாடு உடையவர்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே தங்கள் மகளிடம் இசை ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்து பெற்றோர்கள் ஊக்குவிக்க,தற்போது ஃபாத்திமா அன்சி மலபார் முஸ்லிம்களின் பிரபலமான கலை வடிவங்களில் ஒன்றான மாப்பிள்ளைப் பாடல்களை மெட்டமைத்துப் பாடுவதில் புலமை பெற்று விளங்குகிறார். 2018ஆம்ஆண்டு கேரள அரசின் உஜ்வாலா பால்ய விருதைப் பெற்றுள்ள இவர் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் 2015 முதல் 2022 வரை தொடர்ந்து முதல் பரிசு பெற்று சாதனையும் படைத்துள்ளார்.

பத்து, பதினொன்றாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் கல்வித்துறை சிறப்பு அனுமதி பெற்று கணினி உதவியுடன் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் அதிக (ஏ+) மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஃபாத்திமா அன்சி இப்போது +2 படித்துக் கொண்டிருக்கிறார்.

கணினி தொழில்நுட்ப உதவியுடன் சொந்தமாக இசை ஆல்பங்களைத் தயாரிக்கும் ஃபாத்திமா அன்சி மலையாளம், ஆங்கிலம், ஃபார்சி, உருது, சைனீஸ், மலாய், ஜெர்மன் உள்பட ஏழு மொழிகளில் புலமை பெற்று விளங்குகிறார்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்   The Project Vision  எனும் கண்கொடை விழிப்புணர்வு அமைப்பின் கேரள மாநில நல்லெண்ணத் தூதராக ஃபாத்திமா செயல்பட்டு வருகிறார். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அயல்நாட்டு தூதுவராகப் பணியில் சேர வேண்டும் என்பது ஃபாத்திமா அன்சியின் விருப்பம்.

எண்ணங்கள் ஈடேறட்டும்..!

- குளச்சல் ஆசிம்


No comments:

Post a Comment