தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை!

 மதத்தின் பெயரால் மாற்றம் என்பது 

மறுபடியும் சூத்திரப்பட்டம்தான் கிடைக்கும்; சுயமரியாதை கிடைக்காது!

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கில் 

தி.மு.க. செய்தித் தொடர்பாளர்  டி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை!

சென்னை, டிச.27  மதத்தின் பெயரால் மாற்றம் என்பது மறுபடியும் சூத்திரப்பட்டம்தான் கிடைக்கும்; சுயமரி யாதை கிடைக்காது என்று எச்சரிக்கை செய்தார் திரா விட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள்.

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கப் பிரகடன நாள் கருத்தரங்கம்

கடந்த  20.12.2022  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடை பெற்ற ‘‘நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் 

டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் கருத்துரை யாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாளான இன்று நடைபெறும் இந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் அவர்களே,

வரவேற்புரையாற்றி இருக்கின்ற திராவிடர் வரலாற்று மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றியது மட்டுமல் லாமல், இந்தப் பணியின் தொடக்கமாக இன்று ஒரு உறுதி ஏற்றிருக்கின்றேன் என்று உரையாற்றி அமர்ந் திருக்கின்ற அன்புச்சகோதரர் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு சா.சி.சிவசங்கர் அவர்களே,

இங்கே சிறப்பு செய்யப்பட்டு, நம்மிடையே உரை யாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற பேராசிரியர் நாகநாதன் அவர்களே,

நாம் அனைவரும் ஆவலோடு உரையைக் கேட்க, இங்கே நிறைவுரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற முனைவர் சரவணன் அவர்களே,

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இணைப்புரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற தம்பி என்னாரெசு பிரின்ஸ் பெரியார் அவர்களே,

இங்கே குழுமியுள்ள பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையின்  105 ஆவது ஆண்டு விழா

105 ஆவது ஆண்டு விழா கொண்டாடுகிற பார்ப் பனரல்லாதார் கொள்கை அறிக்கையை நாம் போற்றி, அதன் நினைவாக, அதைப் பாராட்டுகின்ற வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை என்றால், அது பார்ப்பனர்களைத் திட்டுகின்ற அறிக்கை அல்ல; பார்ப்பனர்களுக்கு எதிரான அறிக்கையும் அல்ல.

அது சொல்ல வந்தது என்னவென்றால், அரசு அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அரசுப் பணிகளில், அல்லது கல்லூரிகளில் படித்தவர்கள் இன் றைக்கு 650 பேர் மொத்தம் படித்திருக்கின்றார்கள் என்றால், அதில் 452 பேர் பிராமணர்களாக இருக்கிறார்கள். 12 பேர்தான் பிராமணரல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்கிற அந்த புள்ளி விவரங்கள் - அரசுத் துறையில் இருப்பவர்கள்; நீதித் துறையில் பணியாற்றுபவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்தவர்கள் என்று பல்வேறு பணிகளில் ஒரு குறிப் பிட்ட சமுதாயம் ஏறத்தாழ 85, 90 சதவிகித இடங்களைப் பெற்றிருக்கிறது.

அந்த சமுதாயத்தினரின் மக்கள் தொகை இன்றைக்கு மூன்று சதவிகிதம்கூட இருக்காது.

ஆனால், 90 சதவிகிதம் உள்ள மற்ற சதவிகிதத் தினருக்கு 5, 6 சதவிகிதம் இடம்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அந்த அறிக்கை என்ன சொல்கிறது என்றால்,

பார்ப்பனரல்லாத மக்களைப் பார்த்து நீங்கள் படி யுங்கள்; நீங்கள் முயற்சி செய்யுங்கள்; நீங்கள் முன்னேற வேண்டும்; நீங்களும் அந்தத் தகுதியைப் பெறவேண்டும் என்று சொல்லுகின்ற ஓர் அறிக்கை.

மற்றவர்களை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக ஆலோசனை சொல்லுகின்ற அறிக்கை

அது யாரையும் திட்டுகின்ற அறிக்கையாக இல்லை. சில நிலைமைகளை எடுத்துச் சொல்லி, மற்றவர்களை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக ஆலோசனை சொல்லுகின்ற அறிக்கையாகத்தான் அந்த அறிக்கை இருக்கிறது.

ஆனால், அந்த அறிக்கை அந்தக் காலத்தில் வெளி யிடப்பட்டபொழுது, எந்த அளவிற்குத் திட்டினார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

இதில் மிக முனைப்பாக இருந்தர், ஹோம் ரூல் இயக்கத்தை நடத்திய அன்னிபெசண்ட் அம்மையார். அவர் நடத்திய ‘நியூ இந்தியா’ என்கிற பத்திரிகையில், நாள்தோறும் கட்டுரைகள் வரும்.

பார்ப்பனரல்லாத அறிக்கை வெளியிட்ட நீதிக்கட்சி, மக்களைப் பிரிக்கிறது; நீதிக்கட்சி மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்துகிறது.

இப்பொழுது நம்முடைய எதிரி வெள்ளையர்கள்; ஆனால், நீதிக்கட்சி அந்தப் போராட்டத்தை நடத்தும் மக்களைப் பிரித்து, அந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது என்றெல்லாம் நாள்தோறும் எழுது வார்கள்.

நாம் யாரையும் திட்டவில்லை

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனரல்லாதாரை வைத்துப் பேசவும் சொல்வார்கள்; கட்டுரைகளை எழுதச் சொல்லுவார்கள்; அதைப் பிரச்சாரம் செய்வார்கள்.

நாம் யாரையும் திட்டவில்லை. ஆனால், நம்மை இந்த அறிக்கைக்காகத் திட்டியவர்கள் அவர்கள்.

அந்த அளவிற்கு இந்த அறிக்கையின் வேகத்தை, தாக்கத்தை, ஏற்படுத்தக் கூடிய ஆக்கத்தை - அவர்களை, அவர்களுடைய இடத்தில் நிறுத்தி, மற்றவர்களையும் முன்னேற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அழிப்ப தற்காக, பல முனைத் தாக்குதல்கள் என்றுகூட சொல்ல முடியாது - ஒருமுனை தாக்குதல்தான் - குறிப்பாக ஹோம் ரூல் இயக்கத்தின் சார்பில், அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமையில் நடைபெற்ற அந்த இயக்கத்தின் சார்பில் முன்னெடுத்து வைக்கப்பட்டன.

ஏனென்றால், அது ஆளும் அதிகாரமும், படிக்கும் அதிகாரமும் தமக்கு மட்டும்தான் உண்டு என்கின்ற எண்ணத்தின் காரணமாக.

ஹிட்லர், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் -  கோயபல்சும் ஆரியர்

இங்கே என்னுடைய பேராசிரியர் ஜெகதீசன் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு விஷயத்தைச் சொன்னார்; ஹிட்லர், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர். அவரைப்பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்து, அவரை பெரிய தலைவராக ஆக்கிய கோயபல்சும் ஆரியர் என்று சொன்னார்.

அந்தப் போராட்டத்திற்கும் ஓர் அடிப்படை உண்டு; இதே போராட்டம்தான் அங்கே. ஆரியர்கள்தான் ஆளப் பிறந்தவர்கள் என்று ஹிட்லரின் ஆசிரியர்கள் அவருக்குச் சொல்லித் தந்திருக்கின்றார்கள்.

எனவே, என்ன செய்தார் என்றால், ஆரியன் நான் ஆளப் பிறந்தவன்; யூதர்களுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லி, அவர்களையெல்லாம் ஒரு பெரிய அறையில் பூட்டி வைத்து, விஷ வாயுவைச் செலுத்திக் கொன்றான்.

நல்லவேளையாக, நாங்கள்தான் ஆளப் பிறந்தவர்கள் என்று நம்மை யாரும் எந்த அறையிலும் தள்ளி கொலை செய்யவில்லை; அந்த நிலைமைக்குப் போகவில்லை.

ஆனால், ஹிட்லர் என்ன நினைத்தானோ, ஹிட்லர் ஏன் யூதர்களைக் கொன்றானோ அத்தகைய ஒரு நிலையை நமக்கு எதிராக உருவாக்குவதற்கு, இந்தப் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை அன்றைக்கு அவர்களுக்குப் பயன்பட்டது- அச்சத்தின் காரணமாக.

அடிமைகளாக இருக்கவேண்டியவர்களைப் படிக்கச் சொல்கிறார்களே என்பதால்தான் அவர்களுக்குக் கோபம்!

எங்கே இவர்கள் முன்னேறுவதற்கு இந்தத் தலைவர்கள் எல்லாம் அவர்களைத் தூண்டி விடுகிறார்களே! படிக்கச் சொல்கிறார்களே! நமக்குப் பணிவிடை செய்யவேண்டியவர்களைப் படிக்கச் சொல்கிறார்களே, நமக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களைப் படிக்கச் சொல்கிறார்களே என்கிற அந்தக் கோபத்தின் விளைவாக அந்த அறிக்கைக்கு மிகப்பெரிய கண்டனங்கள்.

என்ன பெரிய அறிவாளிகள்?

நாம் நாமம் போட்டவர்களைக் கண்டு கொஞ்சம் ஏமாந்து போய்விட்டோம்!

இந்த நாட்டின் வளர்ச்சியிலே யாருடைய பங்கு அதிகமாக இருக்கிறது?

மகாபலிபுரத்தில் ஒரு கல் இருக்கும்; ஒற்றைக் கல் - அந்தக் கல்லின் அருகே நாம் சென்றால், உருண்டு விழுந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றும். அதை ஒரு ‘‘இஞ்ஜினியரிங் மார்வல்’’ என்று சொல்லலாம். அந்தக் கல்லை உருவாக்கியவன் பார்ப்பனன் அல்ல!

நாட்டின் வளர்ச்சியில் பார்ப்பனர்களின் பங்கு என்பது இல்லை!

தமிழ் மொழியில் பல இலக்கியங்கள் இருக்கின்றன 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். பழமொழிகளும் இருக் கின்றன. இந்தத் தமிழ் இலக்கியங்களை உருவாக்கியதில், பார்ப்பனர்களின்  பங்களிப்பு அரை சதவிகிதம்தான் இருக்கிறது.

உலகமே வியந்த பார்க்கக்கூடிய தாஜ்மகாலை உரு வாக்கியதில், பார்ப்பனர்களின் பங்களிப்பு இல்லை.

இந்த நாட்டில் அறிவார்ந்த எந்த செயலிலும் அவர் களுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரியவில்லை, ஒன்றைத் தவிர! அந்த ஒன்று என்னவென்றால், வடமொழியில் எழுதப்பட்ட வேத புத்தகத்திலிருந்து 10 பாடல்களைப் பாராயணம் செய்துகொண்டு, இங்கே வந்து ஒப்பிப்பதைத் தாண்டி அவர்களுடைய அறி வாற்றல் பயன்பட்டு, இந்த நாட்டின் வளர்ச்சி இருந்தது என்று சொல்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

என்ன தகுதி - திறமை 

குறைந்து போய்விடுகிறது?

இட ஒதுக்கீடு என்று வரும்பொழுது, தகுதி - திறமை குறைந்து போய்விடுகிறது என்கிறார்கள். என்ன தகுதி - திறமை குறைந்து போய்விடுகிறது?

நீங்கள் படித்ததே வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு தான்; அதற்கு முன்பு நீங்கள் படிக்கக் கூட வரவில்லை. மந்திரங்கள் சொல்வதற்காகத்தான் நீங்கள் இருந்தீர்கள்.

ஆனால், வெள்ளையர்களை எதிர்த்துப் போராடும் பொழுது, நீதிக்கட்சி இங்கே பாதிக்கப்பட்ட பெரும் பான்மை மக்களுக்கு ஆதரவாக இந்த அறிக்கையை வெளியிட்டதால், அவர்களுக்குக் கோபம் வந்தது; ஆகவே அதனைத் தாக்கிப் பேசினார்கள்.

அதன் விளைவாக, இன்று அந்த நிலை மீண்டும் வந்துவிடுமோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது.

ஏனென்றால், பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்த் துறைகளாக மாறி வருகின்றன.

அண்மையில் வந்த செய்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு ஒன்றிய அரசாங்கம் கொடுக் கிற சலுகை, உரிய அளவில் கொடுக்கப்படவில்லை என்பதுதான்.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால், வேலை வாய்ப்புகள் 

நம்மிடையே இருந்து பறிபோகிற நிலை!

ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்கு சிரமமப் படக்கூடிய ஒரு நிலை. 

இட ஒதுக்கீடு தனியார்த் துறையில் இல்லாத காரணத் தினால், வேலை வாய்ப்புகள் நம்மிடையே இருந்து பறிபோகின்ற ஒரு நிலை.

மீண்டும் இந்த அறிக்கைக்கு முந்தைய காலத்திற்கு நாம் சென்றுவிடுவோமோ என்று அச்சப்படுகிற ஒரு நிலை வந்திருக்கிறது.

காந்தியாரைப்பற்றி சொன்னார்கள்; காந்தியார் நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தச் சொல்லி, நடத்தினார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களோடு அவர் நெருக்கமாக இருக்கிறார் என்பதைக் காண்பித்துக் கொள்வதற்காக தீண்டாமை ஒழிப்பு மாநாடு.

தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்த சொன்ன காந்தியார் வைக்கம் போராட்டத்தைக் கண்டிக்கிறார்!

அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், வைக்கத்தில் கோவில் இருக்கின்ற தெருக்களில், நம்மு டைய சகோதரர்களான தாழ்த்தப்பட்டவர்களை, பிற் படுத்தப்பட்டவர்களை அனுமதிக்கவில்லை என்பதற் காக வைக்கம் போராட்டம் நடத்தினார்.

அந்தப் போராட்டத்தைக் கண்டித்து காந்தியார் எழுதுகிறார். காங்கிரஸ்காரர்களை தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்துங்கள் என்று சொன்ன காந்தியார், தந்தை பெரியார் வைக்கத்து வீதிகளில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்பதை எதிர்த் துப் போராட்டம் நடத்தினால், அதைக் கண்டிக்கிறார்.

இப்படித்தான் நாடு இருந்தது.

5 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்து, அந்தப் பணத்தில்தான் சேரன்மாதேவியில் குருகுலம் நடைபெற்றது. அந்தக் குருகுலத்தில், பார்ப்பனர்களுக்கு ஒரு பந்தி; மற்றவர்களுக்கு ஒரு பந்தி; பார்ப்பனர்களுக்கு ஒரு குவளை; மற்றவர்களுக்கு ஒரு குவளை இருந்தது. அதை பெரியார் கண்டித்தார்.

சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையைக் கண்டித்தார் பெரியார்!

காந்தியார், தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்; இங்கே காங்கிரஸ் கட்சியின் பணத்தில் நடைபெறுகிற இந்தக் குருகுலத்திலே தீண்டாமை இருக்கிறது; இது என்ன நியாயம்? என்று தந்தை பெரியார் கேட்கிறார்.

தந்தை பெரியார் 1939 ஆம் ஆண்டுதான் நீதிக்கட்சி யின் தலைவராகிறார். அவர் பெல்லாரி சிறையில் இருக்கும்பொழுது, நீதிக்கட்சி தேர்தலில் தோற்றுப் போய்விடுகிறது. அந்தக் கட்சியை நடத்துவதற்கு அவர்களுக்குத் தலைவர்கள் இல்லை; பெரியாரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் போய்விடுகிறார்கள்.

அதற்கு முன் தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தை நடத்தி வந்தார், அந்த நேரத்தில் நீதிக்கட்சி செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார். 1925 ஆம் ஆண்டு வரை காங்கிரசில் இருந்து, ஜாதி ஒழிப்பு முயற்சிகள், சமத்துவ முயற்சிகளுக்கு காங்கிரசில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அதிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பிறகு 1939 ஆம் ஆண்டில், நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்; பிறகு 1944 ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றம் நடைபெற்றது. இந்த வரலாறுகள் எல் லாம் இங்கே இருப்பவர்களுக்குத் தெரியாதது ஒன்று மில்லை.

ஒருவனைப் படியுங்கள் என்று சொல்வதே 

குற்றம் என்று சொன்னார்கள்

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பார்ப்பனரல்லாத மக்களே, நீங்கள் படியுங்கள் என்று ஓர் அறிக்கை வெளியிட்டால், அந்த அறிக்கை தவறு என்று அன் றைக்கு ‘இந்து’ பத்திரிகை எழுதுகிறது;  ‘நியூ இண்டியா’ பத்திரிகை எழுதுகிறது; அதற்கு எதிராக வேகமான எதிர்ப்புகள் கிளம்பின; அதில், பல பார்ப்பனரல்லாத மக்களையும் இணைத்துக்கொண்டு அவர்களையும் வைத்துத் திட்ட வைத்தார்கள். இது எவ்வளவுக் கொடு மையான ஒன்று பாருங்கள். ஒருவனைப் படியுங்கள் என்று சொல்வதே குற்றம் என்று சொன்னார்கள்.

திருவையாறு கோவிலில் மார்கழி மாதம் கச்சேரி நடக்கும்; அப்படி நடைபெற்ற ஒரு கச்சேரியில், தண்டபாணி தேசிகர், மிகப்பெரிய இசைக் கலைஞர், சிறந்த பாடகர். அவர் அந்தக் கச்சேரியில் அமர்ந்து, விநாயகர் துதி பாடினார்; அங்கே இருக்கிற ஆட்களுக்குக் கோபம் வந்தது; குறிப்பாக அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் என்பவர் பெரிய பாடகர், அவர் அங்கே வந்து பாடவேண்டும்.

தமிழில் பாடியதால் தீட்டாகிவிட்டதாம்!

என்னடா இது அயோக்கியத்தனமாக இருக்கிறது? கோவிலில் ஒருவர் வந்து தமிழில் பாட்டுப் பாடுவதா?

கோவிலில் ஒருவர் தமிழில் பாட்டுப் பாடி, கோவிலைத் தீட்டாக்கிவிட்டார் என்று சொல்லி, அந்தக் கச்சேரியில் பாடாமல் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் போய்விட்டார்.

அப்பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் ‘குடிஅரசு' இதழில் துணை ஆசிரியராக இருந்தார்; அவர் ‘‘தீட்டாயிடுத்து'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையே எழுதினார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்,  தமிழ்நாட்டில், தமிழர் கோவிலில், சிறந்த பாடகரான தண்டபாணி தேசிகர் அவர்கள் தமிழில் பாட்டுப் பாடினார் என்கிற ஒற்றைக் காரணத்திற்காக, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் அந்த மேடை தீட்டாகிவிட்டது என்று சொன்னார் என்றால், நாம் எந்த அளவிற்கு அவமதிக்கப் பட்டோம்; நாம் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்டோம், புறந்தள்ளப்பட்டோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கின்றோம்.

இந்த மீள்வை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். எனக்கு இப்பொழுது இருக்கின்ற அச்சமெல்லாம், இந்த மீள்வை நிலைக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விதான். அதற்குக் காரணம், இப்பொழுது இருக் கின்ற ஒன்றிய அரசு, அதற்கு எதிரான திட்டங்களைத் தீட்டி வருகிறது.

எங்களைப் பார்த்து ‘இந்து விரோதி’ என்று சொல்கிறார்கள்!

தமிழ்நாட்டில் 90 சதவிகித மக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள். இந்த 90 சதவிகித மக்கள் படிக்கவேண்டும், முன்னேறவேண்டும்; அவர் களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் போராடினார். இந்த 90 சதவிகித மக்களின் சான்றிதழ்களில் இந்து என்றுதான் இருக்கும். அவர்களின் முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டவர்கள் நாங்கள். அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய சுயமரி யாதைக்காக உழைக்கின்ற எங்களைப்  பார்த்து ‘இந்து விரோதி’ என்று சொல்கிறார்கள்.

எப்படியாவது ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் அவர்கள் சொல்வார்கள்.

மறுபடியும் அவர்களுக்கு சூத்திரப் பட்டம்தான் கிடைக்குமே தவிர, சுயமரியாதைப் பட்டம் கிடைக்காது

எப்படியாவது மதத்தின் பெயரால் மக்களை மாற்ற முடியுமா? என்று முயற்சிக்கிறார்கள்; மதத்தின் பெயரால் மக்களை மாற்றினால், மறுபடியும் அவர்களுக்கு சூத்திரப் பட்டம்தான் கிடைக்குமே தவிர, சுயமரியாதைப் பட்டம் கிடைக்காது.

இதை நன்றாக நம் மக்கள் உணரவேண்டும். நாம் போய் சொல்லவேண்டும்; இதில் நம்முடைய கடமையும் இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் இதைச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அன்புச் சகோதரர் சிவசங்கர் சொன்னதைப்போல, இதை ஒரு தொடக்க விழவாக வைத்து, இதைத் தொடங் குவோம், சொல்வோம்.

எல்லாவற்றிலும் ஏமாற்றுவேலை, பித்தலாட்டம்; ஆனால், பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.

ஆளுநர் சொன்னதில் வேடிக்கையான நகைச்சுவை என்னவென்றால், ஜி.யு.போப், திருக்குறளை தவறாக மொழிப் பெயர்த்து விட்டார் என்றார்.

யாரோ எழுதிக் கொடுப்பதைப் 

படிப்பவர் ஆளுநர்!

எனக்கு ஒரே ஆச்சரியம்; இவர் பெரிய தமிழ்ப் புலவர் போலிருக்கிறதே, மொழி பெயர்ப்பு தவறு என்கிறாரே, மூல மொழி தெரிந்தால்தானே, மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்று சொல்ல முடியும்? அவர் பெரிய தமிழ் அறிஞரா? என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அவருக்குத் தமிழ் தெரியாது என்று. யாரோ எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு போகிறவர்தானே - சொந்தப் புத்தியில் பேசுவது இல்லை.

இப்படி ஒரு நகைச்சுவை இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை நகைச்சுவையாகப் பார்க் காதீர்கள். இதற்கு ஒரு பெரிய பின்னணி இருக்கிறது. அந்தப் பின்னணி ஆபத்தான பின்னணி! நாம் என்றைக்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

திராவிடர்களாக வாழ, 

சுயமரியாதையோடு வாழ...

105 ஆம் ஆண்டு விழா என்பது, நம்மை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு,

திராவிடர்களாக வாழ -

சுயமரியாதையோடு வாழ -

கல்வி, வேலை வாய்ப்புகளில் நம்முடைய உரிமை களை, வலிமையாகப் பற்றிக்கொள்ள உறுதி மேற் கொள்கின்ற நாளாக -

இந்த வந்தேறிகளின் ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காத ஒரு நாளாக இருக்கவேண்டும்.

ஆரியமாவது, திராவிடமாவது என்பார்கள்; பொய் சொல்கிறார்கள், ஆரியம் - திராவிடம் என்றெல்லாம் எங்கே இருக்கிறது என்பார்கள்.

திராவிடம் என்பது வெள்ளைக்காரன் சொன்னது என்கிறார்கள். 10 நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ஆதி சங்கரர் என்கிற ஓர் ஆள். அவர் பிரிட்டனில் இருந்து வந்தவரா? அவர்  கேரளாவில் இருந்த வந்ததாகக் கேள்விப்பட்டேன்.

அவர் திருஞானசம்பந்தரைப் பார்த்து, ‘‘திராவிட சிசு'' என்று சொன்னார்.

‘ஆரியப்பட்டா’ என்று ராக்கெட் விடுகிறார்கள்; பிறகு ஆரியமாவது - திராவிடமாவது? என்று சொல்கிறார்கள்.

ஊடகங்களும் ‘அவாளு’க்குத்  துணை நிற்கின்றன!

இப்படி பொய்யைச் சொல்லி, அதைப் பிரச்சாரம் செய்வதற்கு, அந்தப் பொய்யை வெளியே மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, மிகப்பெரிய அளவில் ஊடகங்களும் பணியாற்றுகின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

நம்முடைய உள்ள உறுதி ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். இதை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்தப் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாளான இந்த நாளில், நாம் இந்த உறுதியை மேற்கொண்டு, நம்முடைய ஆட்களை எந்தவிதத்திலும் தளர்ந்து போகச் செய்துவிடக் கூடாது என்கிற உறுதியை மேற்கொள்வோம்.

நமக்குத் துணையாக ஆசிரியர் அவர்கள் இருக் கிறார்கள். எங்கு சென்றாலும் சரி, அவர் இன்னும் நமக்கு ஆசிரியர். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக்கொண்டால், நாம் இன்னும் வேகமாகப் பேசக்கூடிய ஆற்றல் பெறுவோம், வலிமை பெறுவோம்!

ஆசிரியரின் வழியில் செல்வோம்!

எனவே, அவருடைய பணி இன்றைக்கு நமக்கு மேலும் தேவைப்படுகிறது. அந்த வகையிலே, அவரைப் பின்பற்றுபவர்களாக நாம் இருப்போம். இங்கே ஓர் ஆட்சி அமைந்திருக்கிறது; முதலமைச்சர் மிகத் தீவிர மாக ‘திராவிட மாடல்’ கொள்கைகளை எடுத்துச் சொல்கிறார்; அதைக் கடைப்பிடிப்போம் என்ற உறுதியோடு இருக்கிறார். நாம் அவருக்கு ஆதரவாக நிற்போம்! ஆசிரியரின் வழியில் செல்வோம்! நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் எதிரிகளிடம் ஏமாந்துவிடாமல் நிற்போம் என்று சொல்லி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் கருத்துரையாற்றினார்.


No comments:

Post a Comment