நான்யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

நான்யார்?

தந்தை பெரியார்

நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

(‘விடுதலை’, 15.7.1968)

* எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசி யலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத் தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம் போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

(‘விடுதலை’, 8.9.1939)

* அரசர்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், மக்களுடைய சுயமரி யாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றவன் நான். 

அரசர்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், குறுநில மன்னர்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள்கூட, மக்களை  அரித்துத் தின்னும் புழுக்களானதால், அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும்கூடச் சொல்லுகின்றவன் நான்.

(‘குடிஅரசு’ 6.10.1935)

* மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவுவாதி களாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925-ஆம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு.

. (‘விடுதலை’, 12.10.1967)

* நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயே தான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.

(‘குடிஅரசு’ 24.11.1940)

* என்னைப் பொறுத்தவரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.

(‘விடுதலை’, 1.6.1954)

* எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆத ரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.   (‘விடுதலை’, 2.10.1967)

* நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்.      (‘விடுதலை’, 15.10.1967)

* நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக் களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்று தான் நான் தொண்டாற்றுகிறேன். ஆனதாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களையும், நம் சமுதாய முன் னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக் கூடிய ஆட்சியாள ரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.   (‘விடுதலை’, 18.7.1968)

* நான் அரசியல், மதத்துறையின் பேரால் யோக் கியமற்ற - மூட - சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப் பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறி கொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

(‘விடுதலை’, 14.11.1967)

* இன்றையச் சுதந்திரத்திற்கு, “முதன் முதல் நானா கவே சிறைக்குப் போகிறேன்” என்று இந்த நாட்டில்,  ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது நானும் என் குடும்பமும் தானே. (‘விடுதலை’, 29.1.1968)

* எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த் துமே வந்திருக்கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற் காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.         (‘விடுதலை’, 4.3.1968)

* ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி சமாதான மாநாடு கூட்டி, காந்தியாரிடம் சங்கர நாயர், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டுப் பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது, காந்தியார் சொன்னார்: “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது தமிழ்நாட்டிலே ஈ.வெ.ராமசாமி அவர்களின் மனைவி, தங்கை ஆகிய வர்கள் கையில் உள்ளது” என்று. அந்த அளவுக்கு நானும் எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங் களுக்காகச் சிறை சென்றவர்கள்.                                                    

(‘விடுதலை’, 28.10.1968)

* என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரி யும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன். (‘குடிஅரசு’ 25.8.1940)

* நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில் லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.   (‘விடுதலை’, 20.1.1969)

* நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப் பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுப விக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இந்த இழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.

(‘குடிஅரசு’ 1.5.1948)

* “தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு” என்றார் காந்தியார். அப்போது நான், “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப் படுத்தும் இழிவுக் குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கி யமே தவிர, தண்ணீரல்ல” என்றேன். (‘விடுதலை’, 9.10.1957)

* இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின் சந்ததிக ளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலை முறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ் நாள் முழுவ தையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள் தனமல்ல; துவேச முமல்ல.  (‘விடுதலை’, 17.11.1957)

* ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் ஜாதிக் காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிர காரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?

(‘விடுதலை’, 25.10.1961)

* இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடு பட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்ப வர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.  (‘விடுதலை’, 4.11.1961)

* தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள் தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம். (‘விடுதலை’, 15.10.1967)

* எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத் தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும். (‘குடிஅரசு’ 24.11.1940)

* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண் டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை. (‘குடிஅரசு’ 7.8.1938)

* என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழவேண்டும்-அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்.

(‘விடுதலை’, 24.7.1968)

* எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுய நலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

(‘விடுதலை’, 15.1.1955)

* யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.  (‘விடுதலை’, 27.7.1958)

* என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா?  அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப் படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப் பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.(‘விடுதலை’, 28.9.1958)

* நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னு டைய 10-ஆவது வயதிலிருந்தே நாத்திகன். ஜாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர் களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என் பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத் துக்கு மதிப்புக் கொடுத்தவனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத் தையோ காட்டியிருக்கமாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும் பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன். இப்படிப் பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோ தமோ, குரோதமோ கொள்ளவேண்டும். நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரி கத்திற்கும் கொண்டுவரவேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத் திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமா னால், நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும். (‘விடுதலை’, 1.1.1962)

* நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.

(‘விடுதலை’, 2.9.1967)

* எனக்கு மக்கள் நலம்தான் இலட்சியம்.

(‘விடுதலை’, 15.10.1967)

* நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமுதாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக் கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதையும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக்கிறேன்.

(‘விடுதலை’, 2.5.1968)

* எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்று மில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங் கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.

(‘விடுதலை’, 8.8.1968)

* என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர்பற்று உடையவர் என்று கருதினால்,  நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடிகொண்டால் உயிர்க்கு உயிர்தான். இல்லா விடில் அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.

(‘விடுதலை’, 15.9.1968)

* நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும் தவுலாயிருந்தால் அடிப்பட்டுத்தானாக வேண்டும்; என்பது போல்-எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.   (பெ.சி. மிமி;  794)

* பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாகக் காணப்படுகிறது. நானோ பழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

(‘குடிஅரசு’ 2.8.1936)

* நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண் டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல.  இதுதான் எனது நிலை.

(‘குடிஅரசு’ 25.3.1944)

* என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத் துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

(‘விடுதலை’, 9.3.1956)

* நான் எனது கொள்கைக்கு-பேச்சுக்கு எந்த மேற் கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமையாகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்ன இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார். ஆகவே நானும் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது.       (‘விடுதலை’, 26.2.1961)

* ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்க ளுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி யடையச் செய்வது எதுவோ அதைப்பற்றியே பேசுவேன். (‘விடுதலை’, 20.4.1965)

* எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஓர் இயக்க சம்பந்த மான நட்புத் தவிர மற்றபடி உலக வழக்கமான நட்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லுகிறேன் என்றால், அநேக துறைகளில் மக்கள் அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர்நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான்.

(‘குடிஅரசு’ 6.12.1936)

* சாதாரண மொட்டை மரம் போன்றது என்னு டைய வாழ்க்கை. காய், பழம், பிஞ்சு இருக்குமானால் அம்மரத்தில் யாரும் கல்லெறியாமல் பாதுகாக்க வேண் டியது அவசியமாகும். அப்படியும் எனக்கு என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை. எதற்கும் கவலையற்ற எனக்கு யாரிடமும் பயமில்லை; தயவு வேண்டுமென்ற விருப்பமும் இல்லை.

(‘விடுதலை’, 3.2.1958) 

* பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள்; சிலர் அலங்காரத்திற்காகப் பேசுவார்கள்; மக்கள் சிரிக்க வேண்டும்-கைதட்ட வேண்டும் என்று சிலர் பேசு வார்கள். சிலர் தாம் கற்றவைகளை வெளியிடுவதே முக்கியம் என்று பேசுவார்கள்; சிலர் தம் கருத்தை வெளி யிடப் பேசுவார்கள். கடைசியில் சொன்ன ரகத்தினன் தான் நான். (‘விடுதலை’, 3.2.1963)

* நான் சொல்லுகிறவைகளை எல்லாம் நன்றாகக் கேட்டு, நல்லபடி சிந்தித்துப் பார்த்து உங்கள் அறிவிற்கு ஏற்றதாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதன்படி நடவுங்கள் அல்லது தள்ளிவிடுங்கள். நான் கடவுளின் அவதாரம், கடவுள் என்னுள்ளே இருந்து சொல்கிறார் என்றோ, நான் தலைவன், நான் சொன்னபடிதான் நீங்கள் கேட்கவேண்டு மென்றோ உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. (‘விடுதலை’, 3.11.1967)

* ஒரு தாய்  வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக் கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில்-உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தை களுக்கு அளிக்கிற போஜனையைவிட எப்படி அதிகமான போஜனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடு படுவானோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக் களிடமும் காட்டிக்  கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(‘விடுதலை’, 1.1.1962)

* நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு, வேத சாத்திரங்கள் துரும்பு, ஜாதி துரும்பு, அரசிய லும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்டவைத்துப் பிழிந் தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.   (‘விடுதலை’, 15.10.1967)


No comments:

Post a Comment