வியர்வைச் சொட்டுகளில்
விளைந்த நம்திராவிடமே,
சுரணையூட்டினார் பெரியார்
சுயமரியாதை கற்றுவிடு!
நெருப்பாய்ப் பெரியாரும்
நெஞ்சில் நிற்பதால்
எரிமலை எதிர்ப்பிலும்
எழுந்து விட துணிந்து விடு!
ஆதிக்க வடிவெடுத்து நமை
ஆட்டி வைக்கும் மேட்டிமைத்தனம்
ஆரியமோ ஆணவச்செருக்கோ
அத்தனையும் நொறுக்கி விடு!
கையாலாகாத கடவுள்களைக்
காட்டிக் காட்டி, பொய்கட்டி
தாழ்த்திவிடும் கயமைகளைத்
தூக்கியெறி அய்யா துணையோடு!
ஆளுந்திறன் கோபம் வலிமை
ஆணைப்போல் பெண்ணுக்குமென
அறைந்துச் சொன்ன அய்யாவின்
அடிச்சுவட்டில் நிமிர்ந்துவிடு!
மானமும் அறிவும் தந்த
மாமனிதர் நினைவு நாளில்
இழக்காமல் உரிமைதனை
இறுக்கிவைக்க உறுதியெடு!
ஆக்கம் : இசையின்பன்
No comments:
Post a Comment