அழுக்குருண்டைப் பிள்ளையாரைத் துதிக்க வேண்டாம்
அய்யப்பனுக் கிருமுடிநீ கட்ட வேண்டாம்
வெளுத்ததெலாம் பாலென்று நம்ப வேண்டாம்
வைகுந்தம் சிவலோகம் மோகம் வேண்டாம்
அமாவாசை பித்ருகடன் கொடுக்க வேண்டாம்
அக்னியில் நெய்யைநீ ஊற்ற வேண்டாம்
நாமாகச் சிந்திக்க வேண்டும் என்ற
உயர்எண்ணப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
பார்ப்பானை பிராமணனென் றழைக்க வேண்டாம்
பதிபக்தி மூடத்தனம் வளர்க்க வேண்டாம்
ஏய்ப்பானை என்றைக்கும் மதிக்க வேண்டாம்
இயன்றவரை அறஞ்செய்ய மறக்க வேண்டாம்
பொருள்செய்ய குறுக்குவழி காண வேண்டாம்
பட்டறிவே நாகரிகம் மறுக்க வேண்டாம்
தெருவெல்லாம் பகுத்தறிவை பரப்பி நின்ற
நேயர்நம் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
மனுநீதி எந்தநாளும் படிக்க வேண்டாம்
மாற்றானாம் பார்ப்பானைச் சேர்க்க வேண்டாம்
தினகாலம் பூஜைநீ செய்ய வேண்டாம்
திருப்பதிக்கு திருமொட்டை அடிக்க வேண்டாம்
காளியம்மன் மாரியம்மன் போற்றி வேண்டாம்
கண்ணியமும் காத்திடநீ மறக்க வேண்டாம்
அறிவியல் வளர்ச்சியின் பாதைசெல்ல
அழைத்திட்ட பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
ஜாதிமத பேதம்கடைப் பிடிக்க வேண்டாம்
சனாதன தர்மத்தைப் போற்ற வேண்டாம்
ஆதிகவி பாகவதம் ஓத வேண்டாம்
ஆதிமூலம் யானைகதை கேட்க வேண்டாம்
வாதாடும் ஆன்மீகர் உறவு வேண்டாம்
வஞ்சம்பொய் களவுசூது என்றும் வேண்டாம்
தூயநெஞ்சத் தொண்டுமனம் வேண்டும் என்ற
துணிச்சல்மிகு பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
- பாவலர் தமிழ் அன்பன், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment