தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசினை செயல்படுத்திட வற்புறுத்தவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசினை செயல்படுத்திட வற்புறுத்தவேண்டும்!

 *       2005 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 

அரசியல் காழ்ப்புணர்வால் முடக்கப்பட்டது!

* ஒன்றிய அரசின் அமைச்சரே இராமர் பாலத்துக்கு ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டாரே!

2005 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அரசியல் காழ்ப்புணர் வால் முடக்கப்பட்டது. ஒன்றிய அரசின் அமைச்சரே இராமர் பாலத்துக்கு ஆதாரம் இல்லை என்று  நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டாரே! தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசினை செயல்படுத்திட வற்புறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரமும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும், பொதுவான வகையில் தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும் வகையில் வெகுநீண்ட காலமாக, டாக்டர் சர்.ஏ.இராமசாமி (முதலியார்) போன்ற அரசியல் ஆய்வறிஞர்கள் அறிக்கை தந்தும், 100 ஆண்டுகளுக்குமேல் கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், செயல்வடிவம் பெறவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் நிலுவையாகும்.

2005 ஆம் ஆண்டிலேயே செயலுரு கொள்ள ஆரம்பித்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்!

கடந்த 2004 ஆம் ஆண்டில், தி.மு.க.வின் பங்களிப் போடு காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய ஆட்சி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக பொறுப்பேற்ற நிலையில், 2005 ஆம் ஆண்டு, தி.மு.க.வின் தலைவர் கலைஞரால் இத்திட்டம் வற்புறுத்தப்பட்டு செயலுரு கொள்ள ஆரம்பித்தது.

தி.மு.க.வின் சார்பில், அன்றைய கப்பல் துறை அமைச்சரான நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பேற்று,  மிக வேகமாக செயல்பட்டார்.

அதன் தொடக்க விழா கூட ஜூலை 2 ஆம் தேதி, 2005 ஆம் ஆண்டு மதுரையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அனைத்துத் தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மக்கள் பெருந்திரள் விழாவாக நடத்தப்பட்டது. (2005, மே 19 ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது).

ரூ.2,427.40 கோடி ரூபாய் பாழ்!

2,427.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெற்று, அதன் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக - போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.

பாக். நீரிணையில் 167 கி.மீ. கால்வாய் வெட்டப்பட்ட நிலையில், இந்தியா - இலங்கைக்கு இடையே இது அமைவதால், மேற்கே செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிப் போகாமல், பயண நேரம் 30 மணிநேரம் குறையவும் கூடும்.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ)  ஒன்றிய அரசின் அமைச்சரான டி.ஆர்.பாலு அவர்களது சீரிய செயல்வேகமும், அன்றைய முதலமைச்சர் கலைஞரின் இடையறாத கண்காணிப்பும், தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஊக்கத்தாலும், சேதுக் கால்வாய் அமைக்கும் பணி புயல்வேகத்தில் நடைபெற்று, ஒரு சிறு பகுதி சுமார் 12 கிலோ மீட்டர் அளவில்தான் பணிகள் எஞ்சியிருந்தன.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே முடக்கப்பட்டது

2009 பொதுத் தேர்தலுக்குமுன் இப்பணி நிறை வடைந்து கப்பல்கள் ஓட ஆரம்பித்தால், அந்த முழுப் பெருமையும், அரசியல் பயனும் தி.மு.க. - காங்கிரஸ் (அய்க்கிய முற்போக்கு)கூட்டணிக்கே போய்ச் சேரும் என்பதால், தமிழ்நாட்டில் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ஜ.க., சோ போன்ற பார்ப்பனர்கள், அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி என்கிற பார்ப்பனரை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, இத்திட்டத்தின் பெரும் பகுதி முடிந்த நிலையில்,  இதற்கு முட்டுக்கட்டை போட்டு, அரசியல் தடுப்பணை எழுப்பியது - கொடுமையிலும் கொடுமை; தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இக்கூட்டம் இழைத்த மாபெரும் துரோகமாகும்!

ஆதாம் பாலம் என்ற சுண்ணாம்புப் பவளப் பாறைகள் ஒரு சிறு பகுதியில் இருப்பதை உடைத்து, வழித் தடத்தின் கட்டுமானம் தொடர இருந்த நிலையில், அதற்குப்  ‘புனித' மதச் சாயம் பூசி, ‘‘ஆகா, இராமர் கட்டிய பாலம், அதை உடைப்பதா?'' என்று பல பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினர்!

பாமர மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்திக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தடையாணை என்ற வாய்ப்பின்மூலம், சுமார் 2400 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை செலவழித்து முடியும் நிலையில் இருந்த திட்டத்தை நிறுத்தினர்.

இராமர் பாலம் - சேதுக் கால்வாய் வழக்கு இன்ன மும்கூட நிலுவையில்தான் இருக்கிறது.

ஒன்றிய அமைச்சரே ஒப்புதல்!

அன்றைய முதலமைச்சர் கலைஞரும், முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் போன்ற பொது அமைப்புகளும்கூட நாடு தழுவிய அளவில் கண்டனக் கூட்டங்கள் போட்டு, மக்களிடையே ‘‘இராமர் பாலம் என்பது ஒரு புனைவு - கற்பனை - அதற்குப் புவியியல் ரீதியாக எந்தவித சான்றாவணமும் கிடையாது'' என்று சென்னை உள்பட பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்தனர்.

இந்த மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், சேதுக் கால்வாய் - இராமன் பாலம் பற்றி மாநிலங்களவையில் கார்த்திகேய சர்மா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்,

‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பழங்கால இராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள், தீவுகள், சுண்ணாம்புக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பாலத்தின் எச்சங்கள் எனத் துல்லியமாகக் கூற முடியாது.

மேலும், வரலாறு 18,000 ஆண்டுகளுக்கு மேலானது என்பதாலும், பாலம் 56 கி.மீ. கொண்டது என்பதாலும், அந்தப் பாலம் இருந்ததற்கான சரியான கட்டமைப்பைக் கூற முடியாது'' என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார்.

இதை அன்றே தி.மு.க., திராவிடர் கழகம், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை போன்ற கட்சிகளும், அமைப்புகளும் தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தன!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தாயுள்ளத்தோடு...

இத்திட்டத்தினால் ஏற்படவிருக்கும் தமிழ்நாட்டு வளர்ச்சியைக் கருதி, கலைஞர் அவர்கள் தாயுள்ளத் தோடு, ‘‘இராமர் பாலம் எனப்படும் பகுதியை விட்டு விட்டு, அதற்குப்பின் பொறுப்பேற்ற பா.ஜ.க. ஆட்சி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல் படுத் தட்டும்; அதைக்கூட வரவேற்கத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது'' என்று கூறினார்.

இன்றுள்ள ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி அவர் களும் இத்திட்டத்தைக் கைவிடவில்லை, செயல்படுத்து வோம் என்று உறுதியளித்தார், நாடாளு மன்றத்தில் - மக்கள் மன்றத்தில். ஆனால், இதுவரை பிரதமர் மோடி அரசில், ‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்'' முழக்கம்  - வளர்ச்சிக் குரல் வந்தும், அத்திட்டத்தைச் செயல்படுத்த ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே!

இப்போதோ, அதே அரசின் அமைச்சர், இராமன் பாலம் இருந்ததற்கு எவ்வித முகாந்திரமோ, சான்றோ இல்லை என்று கூறிவிட்ட நிலையில், சேதுக் கால்வாய் என்ற தமிழன் கால்வாய் (ஆதித்தனார் வைத்த பெயர் இது) பணியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்து, சாதிக்க வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!

தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது....

உண்மையாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பு பவர்கள் ஓரணியில் நிற்காவிட்டாலும், ஓங்கியாவது குரல் எழுப்பட்டும்!

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பயன்மிகு சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டு மென்பதை - வரும் 9.1.2023 இல் தொடங்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் கூட்டத்தில், ஒரு தனித் தீர்மானத்தை - ஒன்றிய அரசினை வற்புறுத்திடும் வகையில், நிறைவேற்றி அனுப்பி வைத்து, அதை மக்கள் மன்றத்திலும் விரிவாக எடுத்து விளக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.12.2022

No comments:

Post a Comment