மும்பை, டிச. 15 - மகாராட்டிரா மாநிலத்தில் ஜோதிபா பூலே, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக அமைச்சர் சந்திரகாந்த் (பாட்டீல்) மீது கறுப்புச் சாயம் வீசப்பட்டது.
மகாராட்டிரா மாநிலத்தில் ஏக்நாக் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்ப வர் சந்திரகாந்த். பாஜக தலைவரான இவர், சில நாள்களுக்கு முன்பு மாகாரட்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற பள்ளி விழாவில் பேசினார்.
அப்போது, “அம்பேத்கரும், சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலேவும் கல்வி நிலையங்களை நடத்துவதற்காக அரசிடம் நிதி கோரவில்லை. மக்களிடம் ‘யாசகம்' கேட்டு, அதன்மூலம் நிதி திரட்டித்தான் பள்ளி, கல்லூரிகளைத் தொடங்கினர்” என்று அவர் கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. டாக்டர் அம்பேத்கரும், பூலேவும் மக்களிடம் பிச்சை எடுத்தனர் என்ற பொருள்படும் வகையில் பேசிவிட்டதாக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், 11.12.2022 அன்று பிம்ரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக அமைச்சர் சந்திரகாந்த் மீது அம்பேத்கர் அமைப்புகளான சமதா சைனிக் தள், வஞ்சித் பகுஜன் அகாதி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் கறுப்புச் சாயத்தை ஊற்றி தாக்குதல் நடத்தினர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், சாயம் வீசிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், “’யாசகம்’ என்ற வார்த்தையை பயன் படுத்தி இருக்கக் கூடாதுதான். ஆனால் கிராமப்பகுதியில் இயல்பாக பேசும் வார்த்தை என்பதால் புரிவதற்கு அவ்வாறு பேசினேன். மன்னிப்பு கேட்டும் இப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது” என்று பாஜக அமைச்சர் சந்திர காந்த் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment