தந்தை பெரியார் என்னும் சமுதாய மருத்துவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

தந்தை பெரியார் என்னும் சமுதாய மருத்துவர்

- இறைவி, தலைவர், பெரியார் களம்

இந்தியாவில், 2000 ஆண்டுகளில் இல்லாத மகத்தான சமுதாய புரட்சியினை தமிழ்நாட்டில் நிகழ்த்தி காட்டியவர் தந்தை பெரியார். தன் காலத்திலேயே தன் கொள்கை வெற்றியை கண்ட பெருமை பெற்றவராக உலகத்து அறிஞர்களாலே ஒப்புக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டவர். அந்தப் புரட்சியினை உருவாக்க ஆற்றிய அரும்பெரும் பணிகளை படிக்கும் தோறும், கேட்கும் தோறும் நம்மை பெரு வியப்பில் ஆழ்த்துகிறது.

தன்னை ஒரு மகா பேராசைக்காரன் என்று கூறிக் கொள்கிறார் ஒரு கட்டுரையில். 

“எனக்குச் சுய நலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுய நலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்தச் சுயநலமாக எண்ணி இருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும் பதவியும் என்றிவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே  உழைக்கிறேன்” என்கிறார்.

என்னுடைய உயிரை ஒரே இலட்சியத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கத் துணிந்தவன் நான் எப்படியோ என்னுடைய வாழ் நாளிலேயே என் லட்சியம் நிறைவேற என் உயிரைப் பலியாக்கத்தான் போகிறேன். சாகும் வரை என்னுடைய பணியைச் செய்தே தீருவேன் என்கிறார்.

பேராசை திராவிடர் சமுதாய நலனையே அதற்காக உழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டது என்பதை உணரும் போது எத்தகைய சுயநலமற்ற ஒரு மனிதரை நாம் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி நம்மை இறுமாப்படைய செய்கிறது.

தன் 94 வயது வரையிலும் பல உடல் நோய்களுடன் போராடிக் கொண்டே தன் உழைப்பினாலும் உரைகளாலும் எழுத்துகளாலும் சமுதாய நோய்களுக்கு மருந்திடும் மருத்துவராக வாழ்ந்திருக்கிறார்.

 “தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்கு கண் வலியாக இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்நோய்க்கு பரிகாரம்“ என்கிறார்.  (விடுதலை 15.10.1967)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்  விலங்குகள் போல் அடிமை நிலையில் இருப்பதை தன் ‘கண் வலி’யாக உணர்வதாக கூறுகிறார். அந்த நோய்க்கு மருந்து அவர்களை சமமான மனிதர்களாக ஆக்குவது தான் என்றும் அதற்காக தன் உயிர் உள்ளவரை போராடுவேன் என்று உறுதியேற்று எந்தவித நன்றியும் எதிர்பார்க்காமல் வலிய போய் வழக்குரைத்து இருக்கிறார்.

சட்டப்படியே நாம் சூத்திரர்கள் தான் எனும்போது பார்ப்பனர்களின் வேசி மக்களாக இழிவுப்படுத்தப்படுகிறோமே என்று அவர் சினந்த போது அப்படியெல்லாம் இல்லையே என சட்ட வல்லுநர்களே கூறினார்கள். அப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்து சட்டத்திற்கு மனுதர்ம சாஸ்திரம் தான் அடிப்படையானது என்னும்போது அதில் சூத்திரன் என்பவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள் தானே பொருந்தும் என விளக்கம் அளித்தார்.

செங்குந்தர், நாடார், ஆதிதிராவிடர், விஸ்வகர்மா, நாட்டுக்கோட்டை செட்டியார் போன்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டிய மாநாடுகளில் கலந்துகொண்டு அவர்களின் இழிவு நீங்க ஆற்ற வேண்டிய செயல்கள் பற்றியும் அவர்கள் உழைப்பின் உயர்வு பற்றியும் அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையாக சேர வேண்டிய கட்டாயம் பற்றியும் உரையாற்றினார். அவ்வாறு  அய்யா அவர்கள் ஆற்றிய உரைகள் தானே இன்று நம் மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தொழில்களிலும் உலகளாவிய அளவில் முன்னேறுவதற்கு உறுதுணையாய் அமைந்துள்ளது என்பதனை நன்றியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஜாதி ஒழிப்புக்காக அரசமைப்புச் சட்டப்பிரிவுகளின்  நகலை கொளுத்திய போதும், இந்தி எதிர்ப்புக்காக தேசியக் கொடி எரிப்பு போராட்டம் அறிவித்ததும், ஒன்றிய மாநில அரசுகளின் சார்பில் அய்யா விரும்பிய படியே உறுதிமொழி அறிக்கை தரப்பட்டதால் அதனை கைவிட்டதும், வர்ணாசிரமம் முறை ஒழிப்புக்காக பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தியதும் அமைதியான முறையில் ரத்தம் சிந்தாமலும் புரட்சியினை உருவாக்க முடியும் என்று நிரூபித்த தலைவராக திகழ்கிறார் அய்யா!

அவர் கையில் வைத்திருந்த நுண் பெருக்காடி தான் எத்தனை எத்தனை செய்திகளை நமக்கு அறிவு புகட்டி உள்ளது!

பெண்களுக்கு உரிய சிறப்பு குணங்கள் என்று கூறப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பனவற்றை சரியான பொருளினை அறியாமலேயே படித்தவர்களும் புலவர்களும் வலியுறுத்தி வந்த பொழுது, அந்தச் சொற்களுக்கான விளக்கங்களை குறிப்பாக பயிர்ப்பு என்ற சொல்லுக்கான அருவருக்கத்தக்க என்னும் பொருளினை விளக்கிச் சொல்லி, அவற்றை தூக்கி எறியச் சொன்னார். 

திருக்குறளுக்காக பல மாநாடுகள் கூட்டி அதனை பரப்பிடச் செய்தாலும்,” தற்கொண்டான் பேணி”,” பெய்யெனப் பெய்யும் மழை” போன்ற குறள்களில் காணப்படும் கருத்துகளுக்காக வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்தால் இப்படி எழுதி இருப்பாரா என்று சாடுகிறார். 

அடுப்பங்கரையை விட்டு வெளியேறி, அறிவுலகைக் காண கல்வி பெற வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை புகட்டினார். அவர்கள் நகைப் பைத்தியங்களாக இருப்பதாலேயே ஆண்களின் அடிமைகளாக நடத்தப் பெறுவதை உணர்த்தியும், ஜாதி, மதம், வயது, குலம், சுற்றம், கோத்திரம், பணம், பதவி, அந்தஸ்து, பெற்றோர் கட்டாயம் ஆகிய அர்த்தமற்ற கட்டுப்பாடுகளுக்காக திருமணம் என்ற பெயரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை பலி கொடுப்பதை ஒழிக்கவும் அவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது அந்த நுண்பெருக்காடி தானே!

சித்திரபுத்திரன் என்ற பெயரில் அவர் விளக்கியுள்ள பல ஆய்வு பூர்வமான செய்திகளில் ஆரிய மதக் கடவுளர் கதைகளையும், ராமாயணம், பாரதம், பாகவதம், காஞ்சிபுராணம், தேவாரம், பக்த லீலா மிருதம், பெரிய புராணம் போன்றவற்றிலிருந்து செய்திகளை எடுத்து சைவ வைணவ போராட்டங்களையும், சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் எவ்வளவு கேவலமாக இழிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அப்படி கூறப்படும் கடவுள்களை இன்றும் மக்கள் சட்டத்தால் இந்துக்களாக இருக்கின்றபடியால் ஏற்றுக் கொண்டிருக்கிற அவல நிலையையும் விளங்கச் செய்திருப்பது அந்த நுண் பெருக்காடியின் உதவியால் தானே!

சுயமரியாதை திருமணம் என்ற பண்பாட்டுப் புரட்சியின் மூலம் சூத்திர இழிவு நீக்கம் என்பது மட்டுமல்லாமல், சடங்குகள் ஒழிப்பு பொருள் சிக்கனம் நேர சிக்கனம் என்பது மட்டுமல்லாமல் பெண்ணின் தன்மானம், மொழியின் தன்மானம், இனத்தின் தன்மானம் காப்பாற்றப்படுவதை நமக்கு உணர்த்துவதும்,  அந்த நுண்பெருக்காடி கொண்டு நாம் பார்ப்பதற்கு கற்றதால் தானே?

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த போது, பார்ப்பனரல்லாத மக்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்ட போது, “உங்க ஆட்களில் இந்த மாதிரியான உத்தியோகங்களை பார்ப்பது போல படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டதாக தந்தை பெரியார் கூறியதாக படித்திருக்கிறோம்.

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல. ஒரு முறை வெள்ளைக்கார ஆளுநரும் இதைக் கூறியதுண்டு.

ஒரு பார்ப்பன தலைமை பொறியாளர் ஓய்வுப்பெற்ற நிலையில் பார்ப்பரைல்லாத யாரையாவது அந்த இடத்தில் நியமிக்க தந்தை பெரியார் கோரிக்கை வைத்த போது, பார்த்துவிட்டு அதற்கு தகுதியான பார்ப்பனரல்லாத பொறியாளர் கிடைக்கவில்லை என்று பதிலளித்தார்.

இந்த நிலை அய்யாவின இறுதிநாட்களில் மாற்றம் பெற்றது அவரது தொண்டின் வெற்றியாகும்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவரை நியமிக்க முயன்ற உடனே அதற்கான தகுதியானவர்கள் கிடைத்தார்கள்.

வாழ்க்கையில் எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரங்குவதையும், யாருக்கும் துரோகம் இழைக்காமல் இருப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு, சுயநலம் சிறிதும் இல்லாதவராக, தனக்கு பின்னாலும் தாம் உருவாக்கிய இயக்கம் தொடர்ந்து மக்களுக்கு பணி செய்வதற்கான அமைப்புகளையும் உருவாக்கி, அவற்றைக் கட்டி காப்பாற்றுவதற்கான அறிவும் திறமையும் பெற்ற ஒரு தலைவரையும் நமக்கு அடையாளம் காட்டி சென்றிருப்பதால் அவரை, அவர் தம் கொள்கைகளை, இயக்கத்தை அணைத்து அழிக்கவோ, மிரட்டி அழிக்கவோ இயலாத வகையில் வலிமையான இயக்கமாக தொடர்ந்து நடைபெறுகிறது. 

நாமும் அவர் காட்டிச் சென்றுள்ள வழியில் சிறிதும் விலகாமல் நடை போடும் நம் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் அவரின் நுண் பெருக்காடி கொண்டு எதனையும் ஆய்ந்து அவர் புகட்டியுள்ள அறிவினைப் பேராயுதமாகக் கொண்டு தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவோம்.

No comments:

Post a Comment