டார்பிடோ ஏ.பி.சனார்த்தனம்
பெரியார் மறைந்து ஓராண்டாகிறது, நாம் இனி இரட்டை ஊக்கத்துடன் பணியாற்ற வேண்டும். பெரியார் படங்கள், சிலைகளோடமையாமல் அவரது கருத்துக்களைப் பரப்பி, கைக்கொண்டு, பெரியார் வழியினர் என்ற மகத்தான பாரம்பரியத்தை ஏற்படுத்த நாம் துடிக்கிறோம். பெரியாருக்கு நாம் ஆற்ற வேண்டிய பயனுள்ள பன்னிரெண்டு கடமைகள் எவை என்பதை ஆழ்ந்து சிந்தித்து கீழே தந்திருக்கிறேன். இவைகளைக் கையாண்டால் பெரியார் கருத்துகள் தொண்டின் சிறப்பு, இவைகளை நாம் நிலைநாட்டியவர்களாவோம்.
பெரியார் இல்லாவிட்டால்...
1. பெரியார் திராவிட எழுச்சிக்கு பாடுபட்டிராவிட்டால் இன்று நாம் எந்த நிலையில் இருந்திருப்போம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.
2. பெரியாரின் சிந்தனைத்திறன், அஞ்சாமை, உண்மைக் குழைத்தல், சூது கலவாத நேர்மை இவைகளை நாமும் கைக்கொள்ள வேண்டும்.
3. வீண் செலவு, ஆடம்பரம், இவைகளை விட்டு பெரியார் போல் எளிமையாக வாழப் பழக வேண்டும்.
4. குழந்தைக்குப் பெயரிடுவது முதல் இயற்கை எய்தினவர்களை அடக்கம் செய்வது வரை பெரியார் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கல்வி புகட்டு முறை
5. குழந்தைகளுக்கு உலக அறிவை ஊட்டி, மனிதன் தான் எவற்றினுக்கும் மேல் என்பதை உணர்த்தும் வகையில் பெரியாரின் ‘இனி வரும் உலகம்‘ அடிப்படையில் கல்வி புகட்ட வேண்டும்.
6. எதற்கும் ஏன் என்று கேட்டு, கண் மூடித்தனமான நம்பிக்கைகளைக் கைவிடச் செய்ய வேண்டும்.
7. பெரியார் போதித்த சுயமரியாதை, சமதர்ம வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
8. ஜாதி பேதமற்ற கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆண் - பெண் சம உரிமை
9. பெண்களும், எல்லா உரிமை பெற்ற ஆண்களுக்குச் சரி நிகர் வாழ்க்கை நடத்த வழிசெய்ய வேண்டும்.
10. ஊர்தோறும் குடும்பம் குடும்பமாக பெரியார் வழி நிற்பவர்கள் அடிக்கடி கூடி பெரியார் மன்றம் அமைத்து அதில் உரையாடல், விருந்து, திருமணம், நூலகம், சிந்தனை, பட்டிமன்றம், பெரியார் கருத்து வெளியீட்டகம் இப்படி எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.
பெரியார் தொண்டர்கள் உயர்ந்தவர்கள்
11. தவறுகளை அஞ்சாமல் சுட்டிக்காட்டி, பொது வாழ்வில் தூய்மை வளர்த்து, இன்றைய நிலைக்கேற்ப அறிவியக்கப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
12. நாணயம், ஒழுக்கம், நேர்மை இவைகளை நன்கு கடைப்பிடித்து பெரியார் தொண்டர்கள் மிக உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்ட வேண்டும்.
No comments:
Post a Comment