உடற்பயிற்சியின் போது மரணிக்கும் இளம் வயதினர்! - நிபுணர்கள் கொடுக்கும் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

உடற்பயிற்சியின் போது மரணிக்கும் இளம் வயதினர்! - நிபுணர்கள் கொடுக்கும் எச்சரிக்கை!

ஆனந்த் சூர்யவன்ஷி என்ற தொலைக்காட்சி நடிகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆனந்த் சூர்யவன்ஷி என்று அழைக்கப் படும் நடிகர் சித்தாந்த் வீர்சூர்யவன்ஷி உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதினருக்கும், உடற்பயிற்சி செய்து உடலை பராமரிப்பவர்களுக்கும் மாரடைப்பால் திடீர் மரணம் ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.  இதுபோன்ற மரணங்கள் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இதய நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்? - இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான `க்குசும்' (Kkusum) , வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ண் ஆகியவற்றில் சித்தாந்த் நடித்த பாத்திரங்களுக்காக, அவர் நன்கு அறியப்பட்டவர். அவர் கடைசியாக சோனி எஸ்ஏபி ஷோ ஜித்தி தில் மானே நாவில் காணப்பட்டார். அவர் இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Kyun Rishton Main Katti Batti இல் நேஹா மர்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 46 வயதாகும் ஆனந்த் சூர்யவன்ஷியின் இறப்புக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதினருக்கு ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?

தினசரி உடற்பயிற்சி செய்து, உடலைக் கட்டுக் கோப்பாக பராமரித்து வந்தாலும், இளம்வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு ஏன் மாரடைப்பு ஏற் படுகிறது என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது என் னென்ன செய்ய வேண்டும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த பல விவரங்களை பகிர்கின்றனர் (இதய நிபுணர்கள்.டாக்டர் ஷிம்மி மனோச்சா, இதய நிபுணர் - அக்கார்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர்) கூறுகையில்,

"ஜிம்முக்கு சென்று தொடர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களுக்கும் ரெகுலர் ஹெல்த் செக்-அப் தேவை என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உடற்பயிற்சிக் கூடத்தில் சேருவதற்கு முன்போ அல்லது கடுமையான உடற்பயிற்சிகளை மேற் கொள்ளும் முன்போ, கட்டாயம் மருத்து வரை அணுகி ஆலோசனை பெறுவ துடன், உடலின் ஸ்ட்ரெஸ் அளவு எவ்வ ளவு இருக்கிறது, ஸ்டாமினா மற்றும் உடலின் தாங்கும் சக்தி எவ்வளவு இருக்கிறது போன்றவற்றையும் பரிசோ தித்து பார்த்துவிட்டு பயிற்சியில் இறங்க வேண்டும்” என்கிறார்.

டாக்டர் அமித் புஷண் ஷர்மா, (இதய நிபுணர் - பாராஸ் மருத்துவமனை இயக்குநர் மற்றும் யூனிட் தலைவர்) கூறுகையில்,

”எப்போது உடற்பயிற்சி செய்தாலும் உங்களுடைய போட்டி உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளருடனோ (மாஸ்டர்) அல்லது ஒரு பிரபலத்துடனோ அல்ல; போட்டி உங்களுடன்தான் இருக்க வேண்டும். எனவே அங்கு செல்லும்போது மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதீத பயிற்சி கூடாது. அதீத உழைப்பு கூடாது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் இடமானது நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது. உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு பிறகு ஆல்கஹால் எடுத்துக் கொள் ளக்கூடாது. இவை அனைத்தும் முறையாக கடைப் பிடிக்கப்படும்போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு’’ என்றார்.

டாக்டர் மனிஷ் ஹிந்துஜா,  (cardiothoracic & vascular surgery, ஃபார்டிஸ் மருத்துவமனை) கூறுகையில்,

“உடற்பயிற்சியின்போது திடீர் அல்லது அதீத உழைப்பானது மாரடைப்பை தூண்டும். ஏற்கெனவே இதய பிரச்சினை உள்ளவர்கள் உடலுக்கு அதிக உழைப்பு கொடுக்கும்போது அது சில தவறான விளை வுகளை ஏற்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம். உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் சில நேரங்களில் தங்கள் சக்திக்கு மீறி பயிற்சி செய்து விடுவர். இதனால் பல நோயாளிகள் என்ன இதய பிரச்சினை என்பதையே கண்டுபிடிக்க முடியாத அள விற்கு பாதிக்கப்படுவர். இது ஒருவருடைய அழுத்த அளவு, புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் நீரிழிவு நோயின் தொடக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

பொதுவாக சொல்லவேண்டுமென்றால்,

மிதமான உடற்பயிற்சியே இதயத்திற்கு நல்லது. ஆனால், கண்டுபிடிக்கப்படாத தமனி அடைப்புகள், இதய துடிப்பில் பிரச்சினை, ரத்த ஓட்டத்தில் தடை அல்லது வால்வுகளில் பிரச்சினை போன்றவற்றால் இன்றைய இளம் தலைமுறையினரும்கூட இதய பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பயிற்சி கூடத்தில்  உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது இதயத்தில் கனம், தலைசுற்றல், தாடையில் வலி அல்லது தோள்பட்டை வலி போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. ட்ரெட் மில்லில் பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பை 

ட்ராக் செய்யவும். அது உங்களுடைய அதிகபட்ச இதயத் துடிப்பில் 70 சதவீதத்தை ( 220 age per minute) தாண்டக் கூடாது. இதயத்துடிப்பு  140/mins  அளவில் வைத்துக் கொள்வதே பரிந்துரைக்கப்படுகிறது” என்கிறார்.

டாக்டர் சஞ்சய் மித்தல், (சீனியர் டைரக்டர் - க்ளினிக்கல் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச்) கூறுகையில்,

”உடற்பயிற்சி ஆரோக்கியமானதுதான். ஆனால் அதீத பயிற்சி ஆபத்து. ஒரு வாரத்திற்கு 300 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வது காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

உடற்பயிற்சியில் அதீத உடலுழைப்பை கொடுக்கும் போது இதய நோய்களுக்கான நுட்பமான அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடவேண்டாம்.

புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்வது இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

40 - 50 வயதுகளில் நீரிழிவு, அதீத ரத்த அழுத்தம் (ஹைபர் டென்சன்) மற்றும் அதிக கொழுப்பு (கொலஸ்ட்ரால்) போன்ற இதய நோய்களுக்கான கமுக்கமான காரணிகளை தொடர் கண்காணிப்பில் வைக்கவேண்டும்.

அதீத அழுத்தம் (வேலை, போட்டி, குடும்பம் மற்றும் பிற) நோய்களுக்கு பாலம் அமைப்பதோடு, மாரடைப்புக்கும் நேரடியாக வழிவகுக்கும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வர்களுக்கு, 60 சதவீதம் அதிகமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றும் 2.5 மடங்கு திடீர் இதய துடிப்பு நிற்றலுக்கான வாய்ப்புகள் உள்ளது’’ என எச்சரிக்கிறார்.

No comments:

Post a Comment