"குழந்தை வதை!" தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளைப் பயன்படுத்தும் பா.ஜ.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

"குழந்தை வதை!" தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளைப் பயன்படுத்தும் பா.ஜ.க.

 புதுடெல்லி, நவ.23 குஜராத்தில்  தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடிமீது காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரதமருக்கு அருகே சிறுமி ஒருவர் நின்று கொண்டு குஜராத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியை குறித்து விவரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சிப் பதிவை ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜனதா தலைவர்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு சிறிய குழந்தையை பிரதமர் பயன்படுத்தி இருக்கிறார். இது அப்பட்டமான சட்ட மீறல். தேர்தல் ஆணையம் எங்கே? தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எங்கே?' என கேள்வி எழுப்பி இருந்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நடைப் பயணத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாக பா.ஜனதா கூறி வந்த நிலையில், காங்கிரசின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

'கடவுள் சக்தி இதுதான்!'

'கடவுளர்' சிலைகள் சிக்கின 

சென்னை,நவ.23- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 அய்ம்பொன் சிலைகளை வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 பேர் அய்ம்பொன் சிலைகளை விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர், சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது இருவரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் 1.5 கிலோ எடை கொண்ட அய்ம்பொன் பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும், 300 கிராம் எடை கொண்ட சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.

பிடிபட்டவர் கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் (வயது 32) என்பது விசாரணையில் தெரியவந்தது. ‘‘திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், இந்த சிலைகளை எங்களிடம் கொடுத்தார். இந்த சிலைகளை சென்னையில் உள்ள ஒருவரிடம் கொண்டு சென்று தர வேண்டும். அவரிடம் நான் தரும் பழைய 2 ரூபாய் நோட்டுகளை காட்டினால், அவர் ரூ.3 லட்சம் பணம் கொடுப்பார். அதை வாங்கி வந்து தந்தால் உங்களுக்கு பணம் தருகிறேன்’’ என அந்தப் பெண் கூறியதாக சுதாகர் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர். 

இதையடுத்து, சிலைகளை கொடுத்தனுப் பிய பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய தினேஷ்(வயது 27) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட கடவுளர் சிலைகள் மீட்பு

சென்னை,நவ.23-சென்னையில் ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் பழைமை வாய்ந்த சிலைகள் விற்பனை செய் யப்பட உள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் சிலைகளை வாங்குவது போல் நடித்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தரகர் சுரேந்திராவிடம் பேசியுள்ளனர். அவர் கூறியது போல் திரு வான்மியூர் ஜெயராம் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சிலைகளை வாங்க காவல்துறையினர் சென்றனர்.

காவல்துறை படையைப் பார்த்தவுடன் அங்கிருந்த தரகர் சுரேந்திரா தப்பிச்சென்றார். அவர் கொடுத்த முகவரியில் வசித்து வந்த ரத்தினேஷ் பாந்தியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அத்துடன் அவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் நீதிமன்ற உத்தரவு பெற்று ரத்தி னேஷ் பாந்தியாவுக்குச் சொந்தமான இடங் களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்கால உலோக சிலைகளை மீட்டனர். ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சிலைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இந்த சிலைகள் தமிழ்நாடு கோயில்களில் திருடப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளனர். ரத்தினேஷ் பாந்தியாவிடம் தொடர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வரும் காவல்துறையினர், தப்பி ஓடிய தரகர் சுரேந் திராவை தீவிர தேடிவருகின்றனர். 


No comments:

Post a Comment