மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லையாம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லையாம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு

புதுடில்லி,நவ.12- மதம் மாறிய தாழ்த்தப் பட்ட சமூக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தீண் டாமை போன்ற சமூக இழிவு நிலை இல்லை என்றும், எனவே இந்த மதங்களில் உள்ளவர் களுக்கு பட்டியல் வகுப்பினருக்குரிய தகுதி சலுகைகளை அரசியல்சாசனம் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அனைத்து மதங்களிலும் உள்ள பட்டிய லினத்தவருக்கும் எஸ்.சி தகுதி வழங்கலாம்' என்று 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ரங்கநாதன் குழு அறிக்கை குறைபாடானது என்றும், முழுமையான கள ஆய்வு செய்யப் படாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ள தால், அதனை அரசு ஏற்கவில்லை என்றும் ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 நபர்கள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள தாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வழக்கு இந்தமாத இறுதியில் மீண்டும் விசா ரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 18 ஆண்டுகளாக உச்சநீதி மன்றத் தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் ஏற்படும் இதய பாதிப்பை குணமாக்கும் இந்திய ‘2டிஜி’ மருந்து

புதுடில்லி,நவ.12- கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, நெஞ்சில் எரிச்சல், குருதி உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் குறைந்தது ஓராண்டுக்கு ஏற்படுகிறது. கரோனா வைரசில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரோட்டீன், இதய திசுக்கள் பாதிப்புக்கு காரணம் என்பதை அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த பாதிப்பை குணப்படுத்த இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபரெட்டரி, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மய்யத்துடன் (டிஆர்டிஓ) இணைந்து ‘2டிஜி’ (2-டியாக்சி - டி-குளுக்கோஸ்) என்ற பவுடர் மருந்தை உருவாக்கினர். இதை வாய் வழியாக சாப்பிட வேண்டும். இந்த மருந்து, உடலில் சக்திக்கு காரணமான குளுக்கோஸ் உடைவதை தடுத்து, வைரசின் வளர்ச்சியை தடுக்கிறது.

இந்த மருந்தை மேரிலேண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பயன்படுத்தி எலிகள் மற்றும் பழ ஈக்கள் ஆகியவற்றிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கரோனா வால் ஏற்பட்ட இதய பாதிப்பு குணமாவதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment