‘பெண்ணியம் போற்றுவோம்’ நிகழ்ச்சி நவ.25 முதல் டிச.10 வரை நடக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

‘பெண்ணியம் போற்றுவோம்’ நிகழ்ச்சி நவ.25 முதல் டிச.10 வரை நடக்கிறது

சென்னை,நவ.24- தமிழ்நாடு அரசின் ‘181’ மகளிர் உதவி மய்யம் சார்பில் நாளை முதல் டிச.10ஆம் தேதி வரை ‘பெண்ணியம் போற்றுவோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ‘181’ மகளிர் உதவி மய்யம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மய்யம் ஆகும். இதன்மூலம், குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு காவல் துறை, மருத்துவத் துறை, சட்ட உதவி, மனநல ஆலோசனை வழங்கப்படுகின்றன.

‘181’ இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மய்யத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் இதில் கேட்டறியலாம்.

இந்நிலையில், நவ.25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டு தினத்தையொட்டி ‘பெண்ணியம் போற்றுவோம் 2022' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் ‘181’ மகளிர் உதவி மய்யம் சார்பில், உதவி மய்யம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை முதல் டிச.10 வரை நடத்தப்படுகிறது.

இதில், திரைப்பட விழா, மகளிர் உதவி மய்யத்தின் விழிப்புணர்வு பயிலரங்கம், மிதிவண்டி பேரணி, மணல் சிற்பக்கலை, இணையதளம் வழியே கருத்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், ‘181’ மகளிர் உதவி மய்யத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் அதன் இயக்குநர் மெரின் ஆகியோர் நேற்று சந்தித்து, ‘பெண்ணியம் போற்றுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தனர்.


No comments:

Post a Comment