நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டில் சமூக நீதி காக்க சூளுரைப்போம்! : வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டில் சமூக நீதி காக்க சூளுரைப்போம்! : வைகோ

சென்னை,நவ.20- மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது, 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் நவம்பர், 20, 1916 இல் தோன்றியது.

நவம்பர்-20, 2022 அன்று நீதிக் கட்சியின் 107 ஆவது ஆண்டு தொடங் குகிறது.

அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாட்டு நிலைப் பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை  நடைமுறைக்கு வந்தது.

இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கே சமூக நீதி வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம் என்ற பெருமை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920, ஆண், பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத் தியது. பெரும்பாலான அரசுக்  கல்லூரி களில் பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கு இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணி களில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என  மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க குழுக்களை நியமித்தது.

ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக் களை அமைத்து, அதன் மூலமே மாண வர் சேர்க்கை நடைபெற வேண்டும்; கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற ஆணைக்குப் பின்னர் தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காகப் பெண்களுக் கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டண மில்லாமல் இலவசக் கல்வி வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணப் பெண்கள் 1921 முதல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.

இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறையில் தாழ்த்தப்பட் டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன..

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற் றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கு உதவித் தொகையைப் பெறுவ தற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும், கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் தான் அற நிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறை வேற்றப்பட்டது. தேவதாசி முறை ஒழித்துக்கட்டப்பட்டது.

பணியாளர் தேர்வு வாரியம் 1924-இல் ஏற்படுத்தப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல்பொதுப்பணித் தேர்வாணையமாகும்.

1924இல், பனகல் அரசர் காலத் தில்தான் சென்னை மாகாண அரசுக் கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும்,  இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட் டூர் அணைகட்டத் திட்டம் உருவாக் கப்பட்டு, இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று, மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மையில் செழிக்க வழி வகை செய்தது நீதிக்கட்சி அரசு.

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதற்கு அடித்தளம் அமைத்தது நீதிகட்சி அரசுதான்.

திராவிட பேரியக்கத்திற்கு அடித் தளம் அமைத்த டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக் டர் கலைஞர் மற்றும் திராவிட இயக்க மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்.

சமூக நீதிச்சுடர் அணையாமல் காப்பதற்கு உறுதி ஏற்போம்.

-இவ்வாறு வைகோ குறிப்பிட் டுள்ளார்.


No comments:

Post a Comment