கேள்வி: தமிழ்நாட்டில் கூட தொடர்ந்து இறைச்சி விற்பனையாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்களே, என்ன தான் தீர்வு?
- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை
பதில் : தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இம்மாதிரி வன்முறைகளை உடனடியாக முன்வந்து தடுப்பதோடு, குற்றம் இழைக்கும் காவிகளுக்கு - காலிகளுக்கு தக்க தண்டனை வழங்கிட நீதிமன்றங்கள் முன்வரும் வகையில் சரியான குற்றச் செக்ஷன்களைப் போட முன்வருவது முக்கியம்.
இன்றேல், மற்றவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள திருப்பித் தாக்கினால் அமைதிப் பூங்கா கெடும் ஆபத்து வருமே! எனவே, இதில் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.
- - - - -
கேள்வி: இந்திய ராணுவ வாகனத்தில் ஹிந்துத்துவ அமைப்பின் கொடி பயன்படுத்தப்படுவதைக் கேள்வி கேட்க வட இந்தியாவில் அமைப்புகளோ ஊடகங்களோ இல்லையா?
- செல்வி, பொன்னேரி
பதில் : பச்சை இந்துத்துவா பகிரங்கமாக ராணுவ வாகனத்தில் - சாவர்க்கரின் "இந்துவை ராணுவமயமாக்கு; ராணுவத்தை இந்து மயமாக்கு!" என்னும் கோஷம் செயல்பாட்டுக்கு வருவதை உச்சநீதிமன்றம் போன்றவை, தாமே முன்வந்து வழக்காக்கி, சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்து - தடுப்பில் ஈடுபட வேண்டும். இது மதச்சார்பற்ற நாடு "இந்து ராஷ்டிரம்" அல்ல என்பதை உணர்த்திட வேண்டும்.
- - - - -
கேள்வி: ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு இயலாமல் பழங்குடியினத் தோழர் ஒருவர் நீதிமன்றத்திலேயே தீ வைத்துக் கொண்டாரே, அதற்கு யார் காரணம்?
- சசிக்குமார், பெரியார் நகர்
பதில் : யார் காரணம் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அந்த அதிகாரியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.
- - - - -
கேள்வி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பாஜகவை எதிர்க்க நம்பகமான தலைவராகப் பார்க்க முடியுமா?
- பாபு, பட்டாபிராம்
பதில் : இப்போதைக்குப் பார்க்க முடிகிறது!
- - - - -
கேள்வி: திராவிட மாடல் என்றால் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறுகிறார்களே... திராவிட மாடலில் இறைநம்பிக்கைக்கு இடம் உண்டா? இல்லையா?
- பழனிவேல், ஆதிவராகநல்லூர்
பதில் : திராவிட மாடல் ஆட்சியில் இறை நம்பிக்கைக்கும் இடமுண்டு; இறை மறுப்புக்கும் இடமுண்டு. இதில் ஏன் குழப்பம்?
- - - - -
கேள்வி: சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி வெற்றிபெற்றதாகக் கருதுகிறீர்களா?
- அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் : மகத்தான வெற்றி! தானே திரண்ட கொள்கை வீரர்களின் கோட்டமாக மனிதச் சங்கிலி அமைந்தது. எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மற்றும் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுக்கும் - கலந்துகொண்ட தோழர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நமது பாராட்டு கலந்த நன்றி!
----
கேள்வி: பண மதிப்பிழப்பு பற்றி உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதே, விளைவுகள் பற்றிய ஏதேனும் உண்மைகள் வெளிவருமா?
- செல்வம், பிலாக்குறிச்சி
பதில் : வர வாய்ப்பிருக்கிறது! உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குறுக்குக் (துவக்கம்) கேள்விகள் அதனைத் தருகிறது.
----
கேள்வி: மீண்டும் ஆ.ராசா மீது சிபிஅய் சொத்துக் குவிப்பு வழக்கு தொடுத்துள்ளதே?
- தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்
பதில் : எப்போதோ போடப்பட்டுக்கிடந்த குற்றப் பத்திரிகையினை இப்போது தூசி தட்டி உலா வருகிறது. முன்புபோல இதிலும் வெற்றி வீரராக அவர் வெளியே வருவார்!
இட்டுக்கட்டிய பழிவாங்கும் நடவடிக்கைகள் ஒருபோதும் இறுதிவரை நிற்காது! அவரே வாதாடும் அளவிற்கு சட்ட ஞானம் உடையவர். மேலே படியும் தூசிகளைத் தட்டிவிட்டு நடைபோடுவார்!
----
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். வருண தர்மத்தை விட்டொழிக்க வேண்டும் என்கிறதே ... அப்படியானால் பிராமணர் சங்கம் வருண அடிப்படையில்தானே அமைக்கப்பட்டுள்ளது? அது தடைசெய்யப்படுமா?
- மதன், சைதாப்பேட்டை
பதில் : மில்லியன் டாலர் கேள்வி! ஆர்.எஸ்.எஸ். தலைவரிடமே கேட்க வேண்டிய கேள்வி.
----
கேள்வி: இந்துமத இழிவிலிருந்து விடுதலை பெற வள்ளலாரின் போதனைகள் பயன் தருமா?
- டி. அறிவு, புதுச்சேரி
பதில் : வெறும் போதனைகள் மட்டும் போதாது. அவை செயல் வடிவத்தில் மக்களிடம் வந்தால் நிச்சயம் பெரும் பயன் தரும்.
No comments:
Post a Comment