பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் எச்சரிக்கை

 எழுத்திலே, இலக்கணத்திலே ஜாதி. இன்றைக்கு நடைமுறையில் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்; நாங்கள் இருக்கிறோம்; பெரியார் வந்தார், அதனால் நடைமுறைப்படுத்த முடியவில்லை

நாளைக்குக் காவி வந்தால் என்னாகும்? எதேச்சதிகாரம், பாசிசம் முழுமையாக வந்தால் என்னாகும்?

சென்னை, அக்.5  எழுத்திலே, இலக்கணத்திலே ஜாதி. இன்றைக்கு நடைமுறையில் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்; நாங்கள் இருக்கிறோம்; பெரியார் வந்தார், அதனால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. நாளைக்குக் காவி வந்தால் என்னாகும்? எதேச்சதிகாரம், பாசிசம் முழுமையாக வந்தால் என்னாகும்? என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய 

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழா

கடந்த 3.10.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூலினை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


இது எவ்வளவு பெரிய கொடுமை - எவ்வளவு பெரிய சூழ்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நாங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றோம்!

மயக்க பிஸ்கெட்டுகளை சாப்பிட்டவர்கள் தங்களு டைய சுய நினைவை இழந்து, பொருள்களை இழந்து, தங்களுக்கு நினைவு வந்தபொழுதுதான், அய்யோ நாம் சாப்பிட்டது மயக்க பிஸ்கெட் என்று உணர்வதைப்போல, இன்றைக்கு அவர்கள்  உணரக்கூடிய அளவிற்கு நாங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.

அவன் உயர்ந்த ஜாதியாக இருந்துவிட்டுப்போகட்டும்; கீழ்ஜாதி என்பது மட்டுமல்ல, எங்களைத் தாழ்த்தப் பட்டவர்களாக, எங்களை ஒடுக்கப்பட்டவர்களாக, எங்களை மிதிக்கப்பட்டவர்களாக, படிக்காதவர்களாக இருப்பது மட்டும் போதாது - மனிதர்களாகவே நீங்கள் இருக்கக்கூடாது என்கிறார்கள்.

மிருகத்தைக்கூட அவன் கொஞ்சுகிறான், அதைத் தொட்டால் தீட்டு கிடையாது. நாயை வளர்க்கிறான்; பூனையை வளர்க்கிறான்; ஆட்டை வளர்க்கிறான், மாட்டை வளர்க்கிறான்.

காட்டுமிராண்டித்தனமான சனாதனம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்கே இருக்கிறது?

ஆனால், என்னுடைய சகோதரன் - அவனுடைய உழைப்பு இல்லையென்றால், நீ வாழ முடியாது. அவனை நீ தொடாதே, பார்க்காதே, நெருங்காதே என்று சொன்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான சனாதனம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்கே இருக்கிறது?

பாதிக்கப்பட்ட நாங்கள் இதைக் கேட்பதற்கு எங்களுக்கு உரிமையில்லையா?

நீ எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துக்கொண்டு, அதை சட்டமாக ஆக்கியிருக்கிறாயே!

மனுதர்மம்தானே 

இந்து லாவிற்கு அடிப்படை

நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள், சட்டம் படித்திருக்கிறோம் - சட்டத்தை ஒழுங்காகப் படித் திருக்கின்றோம். சட்டத்தை சரியாகப் படித்திருக் கிறோம். உன்னுடைய இந்து லா என்ற சட்டத்தைப் படித்திருக்கிறோம். இந்த மனுதர்மம்தானே இந்து லாவிற்கு அடிப்படை!. இல்லை என்று யாராவது மறுக்கட்டும் பார்க்கலாம்.

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி.”

ஆகா, இப்படி பேசிவிட்டாரே? என்று  

எகிறி எகிறி குதித்தார்களே!

எந்த அளவிற்கு அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்? இதே மேடையில்தான் ஆ.இராசா அவர்கள் பேசினார். அதை சில பேர் அவருடைய உரையை வெட்டி, ஒட்டி, ஆகா, இப்படி பேசிவிட்டாரே? என்று  எகிறி எகிறி குதித்தார்களே!

அப்படித்தான் மனுதர்மத்தில் எழுதியிருக்கிறதே, அது அவமானம் இல்லையா என்று கேட்டால், அதை விட்டுவிட்டான் - ஆகா, இது இராசா சொன்னார் என்கிறான்.

இது எப்படி இருக்கிறது என்றால், மருத்துவர் அறிவுரைப்படி நமது உடலை ஸ்கேன் எடுக்கிறோம்; அந்த ஸ்கேனைப் பார்த்த மருத்துவர், இந்த இந்த இடத்தில் எலும்பு உடைந்திருக்கிறது; அதற்காக சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னால், அதற்குரிய சிகிச்சையைத்தானே மேற்கொள்ளவேண்டும்.

அதை விட்டுவிட்டு, ஸ்கேன் மிஷினை உடைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஸ்கேன் மிஷின் இப்படி காட்டிவிட்டதே, அது என்ன அநியாயம் பாருங்கள்? என்று சொல்கிறார்கள்.

அந்த ஸ்கேன் மிஷின்தான் இராசா - 

அந்த ஸ்கேன் மிஷின்தான் திருமாவளவன் -

அந்த ஸ்கேன் மிஷினை உருவாக்கியவர் தந்தை பெரியார் - அதை எடுத்துக்காட்டுகிற டெக்னிஷியன் கள்தான் நாங்கள்.

அதற்காக நீ ஏன் எங்கள் மேல் கோபப்படுகிறாய்?

அதற்கான மருந்தை நாங்கள் தருகிறோமே, அந்த மருந்தை சாப்பிடுவதற்கு நீ ஏன் தயாராக இல்லை?

அண்ணாவின்  ‘ஆரிய மாயை!'

எவ்வளவு காலத்திற்கு இந்த ஏமாற்று வேலையை செய்வீர்கள்? எந்த அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் நண்பர்களே, அண்ணா அவர்கள் எழுதிய  ‘‘ஆரிய மாயை''  நூலை எல்லா கட்சி இளைஞர்களும் படிக்கவேண்டும். 

அந்த ஆரிய மாயை நூலில், அண்ணா அவர்கள் கவிதை எழுதுகிறார் பாருங்கள்,

‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி!

சிரித்திடும் நரியே போற்றி!''

இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், இன்றைய ‘தினமலர்' நாளிதழை எடுத்துப் பாருங்கள்.

திருமா அவர்களைப்பற்றி இதற்குமுன் என்ன சொன் னான்? - ‘திருமா பெரிய கலவரத்தை உண்டாக்குகிறவர்' என்றான்.

‘‘அடங்க மறு -

அத்துமீறு -

திமிறி எழு -

திருப்பி அடி'' என்று சொன்னார்.

ஆசிரியருக்குக் கடிதம் அல்ல - 

ஆசிரியர் கடிதம்

இன்று வந்த ‘தினமலர்' நாளிதழில் ஆசிரியர் கடிதம் பகுதியில் அவர்களே எழுதிக் கொள்கிறார்கள்.

அது ஆசிரியருக்குக் கடிதம் அல்ல - ஆசிரியர் கடிதம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மற்ற பத்திரிகைகளில் வந்தால், அது ஆசிரியருக்குக் கடிதம்  - அவாள் பத்திரிகையில் வந்தால், ஆசிரியர் கடிதம். அதில் ஒரே ஆள் மூன்று, நான்கு பெயர்களில் எழுதுவார்கள்.

அதில்,

‘‘திருமாவளவன் அவர்களே, நீங்கள் எவ்வளவு வீரத்தோடு பேசினீர்கள்; நீங்கள் போய் தி.மு.க.வை ஆதரிக்கலாமா? நீங்கள் போய் வீரமணி பக்கம் இருக்கலாமா? அடங்க மறு என்று வரவேண்டாமா?'' என்று எழுதியிருக்கிறார்கள்.

இதே ஆள்கள்தான், இந்த மேதாவிகள்தான் முதலில் சொன்னபொழுது, அவர் தூண்டி விடுகிறார் என்று சொன்னான். வன்முறையைத் தூண்டுகிறார் என்று சொன்னான். இப்பொழுது என்ன சொல்லுகிறான்?

‘‘நீ ஏன் தி.மு.க.வை ஆதரிக்கிறாய்?'' என்று கேட்கிறான்.

இதற்கு அண்ணா அவர்கள் தெளிவாக பதில் சொல்லுகிறார்.

எவ்வளவு தெளிவாக நாங்கள் இருக்கிறோம் - எங்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதே!

‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன்

புலி வேஷம் போடுகின்றான்! பொது மக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?''

என்று புரட்சிக்கவிஞர் எழுதினார்.

ஆரிய மாயையில் அண்ணா அவர்கள் எழுதுகிறார்:

‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி!

சிரித்திடும் நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!''

இராசா பேசினால், திருமாவளவன் பேசினால், நாளைக்குக் காலையில்கூட ஒட்டு வித்தைப் பேசுவான்.

நீ வெட்டினாலும், ஒட்டினாலும், கொட்டினாலும் கதை நடக்காது. தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்; ஏமாறவிடமாட்டோம்.

அதற்குரிய ஆவணங்களோடு, 88 வயது இளைஞராக இருக்கின்ற பேராசிரியர் செகதீசன் அவர்கள்கூட  இந்த வயதில் களத்தில் நிற்க வந்திருக்கிறார். ஓய்வு பெற்று மூலையில் உட்காரவில்லை அவர். 

ரத்தம் கொதிக்கக் கூடிய அளவிற்குப் புலவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சொல்ல வில்லை நண்பர்களே!

‘ஆரிய மாயை'யில் உள்ள ஒரு செய்தியை வேகத்தோடு சொல்லுகிறார்.

இலக்கணத்தில் பார்ப்பனியம், ஜாதியம், வருணாசிரம தர்மம், சனாதனம், மனுதர்மம் உள்ளே நுழைந்துவிட்டது.

யார் கேட்டார்கள்?

திராவிட இயக்கத்தைத் தவிர வேறு யாராவது சொன்னார்களா?

எத்தனைப் புலவர் பெருமக்கள்?

கம்பராமாயணத்தினுடைய பெருமை என்றெல்லாம் சொன்னார்கள். அந்தக் கம்பனுக்கே உரைத்திருக்கிறது.

அதனால்தான்,

‘‘வையம் என்னை இகழவும்

மாசு எனக்கு எய்தவும்'' என்றார் கம்பன்.

உரைப்பாயத்திலேயே எடுத்தவுடன், ‘‘எனக்கு நல்ல பெயர் வந்தாலும் வரும், கெட்ட பெயர் வந்தாலும் வரும்'' என்று சொல்கிறார். அவருக்குக் குற்ற உணர்வு இருக்கிறது.

ரத்தம் கொதிக்கவேண்டாமா தமிழர்களுக்கு?

‘ஆரிய மாயை' நூலில் அண்ணா கேட்கிறார்,

‘‘பாட்டியலில், பன்னீராயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம்''

இதைக் கேட்டவுடன் ரத்தம் கொதிக்கவேண்டாமா? தமிழர்களுக்குக் கொதிக்க வேண்டாமா?

இந்த 88 வயதில், ஒரே ஒரு பேராசிரியர் செகதீசனுக்கு ஏன் இந்த ஆத்திரம் வருகிறது?

இதைப் படித்திருக்கிறார். நல்ல ரத்தம் யார் யாருக்கு ஓடுதோ, அத்தனை பேருக்கும் இந்த உணர்வு வரவேண்டாமா?

எங்களுக்கு ஏன் அந்த உணர்வு வருகிறது?

எங்களுக்கு ஏன் கோபம்?

ஏன் மனித சங்கிலி, மனித சங்கிலி என்று அத்துணை பேரையும் திரட்டி வைத்திருக்கிறோம்? வேறு வேலை இல்லையா?

பெரியாருடைய தொண்டர்களுக்கும் மரியாதை இருக்கிறது!

நம்முடைய எழுச்சித் தமிழர் அரசு பணியை விட்டு விட்டு, பொதுநலத்திற்கு வந்தவர். உழைக்க வந்து, போராளியாக மாறியிருக்கிறவர் என்னுடைய சகோதரர்.

இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியாருடைய சிந்தனைக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறதோ - அதேபோல், பெரியாருடைய தொண்டர்களுக்கும் மரியாதை இருக்கிறது.

தமிழர்களுக்கே புரியவில்லை. இன்னமும் கம்ப ராமாயணத்திற்கு விரிவுரை, பெரிய புராணத்திற்கு இன்னொரு உரை என்று எழுதிக் கொண்டிருக்கின்ற, அந்த உணர்வு படைத்தவர்களுக்கும் சேர்த்தே சொல்லிக் கொள்கிறோம் - ஏன் மேலே மேலே பக்தி, பக்தி என்று அந்தப் போதையை ஊற்றிக்கொண்டே, ஒருவன் எழுந்திருக்க முடியாத அளவிற்கு பக்தி போதையை ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈரோட்டு மருந்தைத் தவிர 

வேறு எந்த மருந்து இருக்கிறது?

தொற்று நோயைப்பற்றி சொன்னாரே, அந்தத் தொற்றுக்கெல்லாம் பெரிய தொற்று, கோவிட் தொற்று. அதற்கு மருந்து இருந்ததினால்தான், நாமெல்லாம் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், மத நோய்க்கு மருந்து இல்லையே. ஒரே ஒரு மருந்து, ஈரோட்டு மருந்தைத் தவிர வேறு எந்த மருந்து இருக்கிறது?

அதுமட்டுமல்ல நண்பர்களே, மேலும் அண்ணா தொடருகிறார்:

 ‘‘அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது.''

எதேச்சதிகாரம், பாசிசம் முழுமையாக வந்தால் என்னாகும்?

எழுத்திலே, இலக்கணத்திலே ஜாதி. இன்றைக்கு நடைமுறையில் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்; நாங்கள் இருக்கிறோம்; பெரியார் வந்தார் அதனால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. நாளைக்குக் காவி வந்தால் என்னாகும்? எதேச்சதிகாரம், பாசிசம் முழுமை யாக வந்தால் என்னாகும்? இப்பொழுதே திருக்குறளுக்கு ராஜ்பவனிலிருந்து விளக்கம் வருகிறதே! திருக்குறள் சனாதனி என்று சொல்லக்கூடிய நிலை வருகிறதே, நாம் இருக்கும்பொழுதே!

கொஞ்சம் ஏமாந்தால் என்னாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

மேலும் அண்ணா தொடருகிறார்: 

‘‘ஆரியருடைய பிராமண - க்ஷத்திரிய - வைசிய - சூத்திர என்ற ஜாதிப் பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட் டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும், எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார்.''

நன்றாக கவனியுங்கள் தோழர்களே! 

ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் 

அது முடியும்!

தந்தை பெரியார் சொல்வார், கையிலே போட்ட விலங்கு பளிச்சென்று தெரியும்; அதை உடைக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள்; நினைக் கிறார்களோ இல்லையோ, அது நன்றாகப்  புரியும். பொருளாதாரத்தில் போட்ட விலங்கு காலில் போட்ட விலங்கு - அதுவும் நன்றாகப் புரியும். ஆனால், பண் பாட்டுப் படையெடுப்பு இருக்கிறதே, அது மூளையில் போட்ட விலங்கு நண்பர்களே, அது கண்களுக்குத் தெரியாது; அதை உடைக்கக் கூடிய ஒரே சம்மட்டி - ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் அது முடியும்.

அந்த அடிப்படையில் வரும்பொழுது, அண்ணா மேலும் சொல்கிறார் கேளுங்கள்:

‘‘ ‘ல, வ, ற, ன’ என்ற நான்கும் வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம்.''

தமிழை ஏன் நீஷ பாஷை என்கிறார்கள்; தமிழ் எழுத்துகள் ழ, ள என்பதாம். மக்களால் பேசப்படாத, செத்துப் போன மொழி தேவ பாஷையாம். ஆனால், நம்முடைய வளமுள்ள மொழி அவர்களுக்கு நீஷ பாஷையாம்.                       (தொடரும்)


No comments:

Post a Comment