புதுச்சேரி, அக். 23- புதுவையில் படிவங்கள் அனைத்திலும் தமிழ் இடம்பெறாததால் வங்கியின் கதவை இழுத்துப்பூட்டி தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
புதுவையில் படிவங்கள் அனைத்திலும் தமிழ் இடம் பெறாததால் வங்கி கதவை இழுத்துப்பூட்டி தமிழ் அமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில், புதுச்சேரி தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி வங்கிக்கணக்கு வைத்துள்ளார். நேற்று வங்கிக்கு அவர் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் காசாளர் ஹிந்தி மொழியில் பேசியுள்ளார். ஹிந்தியில் என்ன பேசுகிறார் என தெரியாமல் வேல்சாமி திணறினார். தமிழ்மொழி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில், வங்கி காசாளர் தமிழில் பேசாமல், ஹிந்தியில் பேசியது இழுக்கு என நினைத்த அவர், இதுகுறித்து வங்கி மேலாளர் திரிபாதியிடம் முறையிட்டார். அவரும் தங்களுக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என கூறியதாக தெரிகிறது. மேலும் வங்கியில் படிவங்கள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்துள்ளது. அது அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.
இந்த தகவல் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு திரண்டனர். பின்னர், வங்கி நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கியின் பிரதான கதவை இழுத்து பூட்டி வங்கி ஊழியர்களுக்கு எதிராக அவர்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி, தமிழர் களம் அழகர், நாம் தமிழர் கட்சி பொருளாளர் இளங்கோவன், தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து வங்கி மேலாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது வங்கி படிவங்கள் அனைத்திலும் இன்னும் 15 நாட்களுக்குள் தமிழை இடம்பெற செய்வதாக உறுதி யளித்தார். இதை ஏற்று தமிழ் அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment