நான் ஒரு பிறவித் தொண்டன், தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பதும் எனக்குக் இஷ்டமில்லாததும் எனக்கு தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப் பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய இதில் எனக்கு மனச்சாந்தியோ, உற்சாகமோ இல்லை.
-‘குடிஅரசு’ 13.10.1940
குரல் உள்ளவரை பிரசங்கம்
நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போல், எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக வேண்டும், பிரசங்கம் செய்தாக வேணடும். என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்க கூடிய ஆட்கள் தான் எனக்கு தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.
- ‘குடிஅரசு’ 29.5.1948
No comments:
Post a Comment