வெறுப்பைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் - தலைவர்கள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

வெறுப்பைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் - தலைவர்கள் வலியுறுத்தல்

 முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யுங்கள்  லாலு பிரசாத்  

முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யுங்கள் என பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இந்தியா அளவில் 11 மாநிலங்களில் கடந்த வாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக அதன் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 8 மாநிலங்களில் நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து. அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பீகார் மேனாள் முதல் அமைச்சரும்  ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- "பி.எப்.அய். போல வெறுப்பை பரப்பும் அனைத்து இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். பி.எப்.அய்.யை விட அது மோசமான இயக்கம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், "ஆர்.எஸ்.எஸ் இதற்கு முன்னர் இரு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தார் என்பதை மறக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை சித்தராமையா பேட்டி

 

பி.எப்.அய்.க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை தேவை என்று சித்தராமையா கூறியுள்ளார்.  கருநாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 

ஒன்றிய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.அய்.) அமைப்புக்கு தடை விதித்துள்ளது. சமுதாயத்தில் யார் அமைதியை சீர்குலைக்கிறார்களோ அவர்களுக்கு தடை விதிப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், சமூக விரோத அரசியலை செய்கிறவர்கள், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் பணியை செய்கிறது. அந்த அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.  

கருநாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா வகையான மதவாதம் மற்றும் விரோத சமுதாயத்தை உருவாக்குவது தவறானது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

கருநாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பி.எப்.அய். அமைப்புக்கு தடை விதித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதே போல், அரசியல் சாசனத்தின் விருப்பம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு அமைப்பையோ அல்லது அரசியல் கட்சியையோ காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து கொண்டே வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.


ஆர்.எஸ்.எஸ்ஸையும் தடை செய்யுங்க... 

கேரள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என ஒன்றிய அரசு அறிவித்து இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் முன்னதாக கேரளா மாநிலம், மலப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை தலைமை கொறடாவுமான கொடிக்குன்னில் சுரேஷ் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.

”பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது மட்டும் தீர்வாகாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாடு முழுவதும் ஹிந்து வகுப்புவாதத்தை பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ், பி.எஃப்.அய். இரண்டு அமைப்புகளும் ஒரே மாதிரியானவை தான். அரசாங்கம் இரண்டு அமைப்புகளையுமே தடை செய்ய வேண்டும். எதற்காக பாப்புலர் பிரண்ட் ஆஃப் அமைப்பை மட்டும் ஒன்றிய  அரசு தடை செய்துள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

'மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்'

கேரள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்

மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அய்ந்தாண்டுகள் தடை விதித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்அய்) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று 2ஆவது நாளாக நடைபெற்ற சோதனையை அடுத்து தடை அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக இது குறித்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர் எஸ் எஸ் அமைப்பினைத் தான் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? எந்த ஒரு அமைப்பையும் தடை செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பது ஏற்கெனவே தடைகளை சந்தித்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.

ஒரு கட்சியையோ அமைப்பையோ தடை செய்வதால் அது கொண்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வந்துவிடாது. வேறு ஒரு புதிய பெயரில் புதிய அடையாளத்துடன் அது மீண்டும் முளைத்து வரலாம். அதனால் அவ்விதமான அமைப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவாரங்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. இரண்டு மதவாத சக்திகள் மோதிக் கொண்டால் அவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று வலுப்படுத்திக் கொள்கின்றன. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

முன்னதாக ஒன்றிய அமைச்சர் நட்டா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தீவிரவாதத்தின் கூடாரமாகி வருகின்றன. அங்கு மக்கள் வாழ்வது கடினமாகியுள்ளது என்று கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடை செய்யவில்லை? தொல். திருமாவளவன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடை செய்ய வில்லை? என்று மதுரையில் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.  மதுரை அண்ணா நகரில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா மற்றும் சனாதன சக்திகளை தனிமைப் படுத்துவோம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, சட்ட மன்ற உறுப்பினர் பூமிநா தன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மதுரை மேயர் இந்திராணி, உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசும் போது, ஆ.ராசா பேசிய தில் தவறில்லை. ஆ.ராசா பேசி யதை நான் வழிமொழிகிறேன். சனாதனம் குறித்து பேசக் கூடாது என்கிறீர்கள். மனு தர்மத்தில் உள்ளதை தான் சொல்கிறோம் என்றார். 

கூட்டத்தில் வைகோ பேசும் போது, இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள். அதை எதிர்த்து தென் இந்தியா விற்கு தலைமை தாங்க முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் திருமா வளவன். அதை நானும் இங்கே வழி மொழிகிறேன் என்றார். 

கூட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- 

பா.ஜனதா இந்துக்களுக்கா னது அல்ல. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடை செய்யவில்லை? அது என்ன ஜனநாயக இயக்கமா? இந்த முறை எக்காரணம் கொண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர கூடாது. அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. 

எனவே சனாதனத்திற்கு எதிராக அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக தொல்.திருமா வளவன் குறித்த புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நவாஸ்கனி ஆகியோர் வெளியிட்டனர்.

No comments:

Post a Comment