தமிழினம் தாங்கி நின்ற எழுதுகோல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

தமிழினம் தாங்கி நின்ற எழுதுகோல்!

பன்னூறு ஆண்டுகளாய்ப் பார்ப்பனரின் பிடியினில்

மண்புழுவாய்க் கிடந்தோர்க்கு மாண்புரைத்த எழுதுகோல்!!

கண்ணிருந்தும் பயனின்றிக் கடைத்தேறும் வழியிலார்

முன்னேற வழியமைத்தே முழங்கிநின்ற எழுதுகோல்!

உண்மையினைச் சொல்லுதற்கே ஓடிவரும் கதிரெனப்

பொன்னுலகின் விடியலினைப் புரிந்துரைத்த எழுதுகோல்!!

மண்ணிருந்தும் அடிமையென மலைத்திருந்த பேதையர்

தன்மானம் பெற்றெழவே தானுழைத்த எழுதுகோல்!

பெண்மகவை ஆண்நிகராய்ப் பேணிடவே மொழிந்தநம்

தந்தையவர் பெரியாரின் தடம்பயின்ற எழுதுகோல்!

புண்ணென்றே சமூகத்தில் புரையோடும் ஜாதியைத்

தன்னெழுத்தால்  சரிசெய்யத் தவித்துநின்ற எழுதுகோல்!!

கண்ணயரா உழைப்பினாலே கற்றோரும் வியந்திடப்

பன்னூறு கவியெழுதிப் பாடிநின்ற  எழுதுகோல்!

விண்ணுயரத் தமிழெடுத்து விதைத்துவைத்த வள்ளுவர்

தன்னுருவம் மாக்கடலில் தளிர்க்கவைத்த எழுதுகோல்!

வன்நெஞ்சர் அழைக்கையிலே வலிசுமந்த பாலினம்

தன்பெயரில் திருச்சேர்த்தே தலைநிமிர்ந்த எழுதுகோல்!

மண்ணுழுது விதைத்தவரின் மனங்குளிர ஊரெலாம்

சந்தையினைத் திறந்துவைத்தச் சரித்திரத்தின் எழுதுகோல்!

விந்தையெனக் கையெழுத்தை விரைந்திழுக்கும் போக்கிலே

சிந்தையிலே தமிழ்நாட்டைச் செதுக்கிவைத்த எழுதுகோல்!

வந்துழைக்கத் தனக்குப்பின் தளபதியாம் ஸ்டாலினைத்

தந்துசென்ற கலைஞரய்யா தாங்கிநின்ற எழுதுகோல்!

- சுப முருகானந்தம்


No comments:

Post a Comment