பட்னா, ஆக. 8- பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது.
இந்த கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சி.பி.சிங், ஒன்றிய அமைச்சரவையிலும் இடம் பெற்றி ருந்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தனது பதவியைவிட்டு விலகினார்.
அதன் பின்னர் அய்க்கிய ஜனதாதளம் சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெறப்போவதில்லை என அய்க்கிய ஜனதாதளம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் நேற்று (7.8.2022) கூறுகையில், 'ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை என்று 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் எடுத்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
மேலும் சமீப நாட்களாக பா.ஜனதாவுக்கும், அய்க்கிய ஜனதாதளத்துக்கும் இடையே உரசல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அய்க்கிய ஜனதாதளம் வெளியேறலாம் என்று வெளியாகியிருக்கும் யூகங்களை ராஜீவ் ரஞ்சன் சிங் மறுத்தார். அனைத்தும் சரியாக உள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment