இன்றைய தேதிக்கு விமானம் ஒட்டுவது முதல் ராக்கெட்டில் செல்வது வரை பெண்கள் சாதிக்காதத் துறையே இல்லை எனலாம். இருந்தாலும் ஒளிப்படக்கலையில் வணிகரீதியாக வெற்றி பெறுவது என்பது பெண்களுக்கு சவாலாகவே இருக்கிறது,ஆனாலும் வெற்றி பெற்றே தீர்வது என்று முடிவெடுத்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் நிலா,சிதம்பரத்தில் தனது பெயரிலேயே ஸ்டூடியோ வைத்துள்ளார். உளூந்தூர் பேட்டை அருகில் உள்ள பாண்டூர் கிராமத்தில் பிறந்தவர் பட்டப்படிப்பை முடித்தவர் திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் சராசரி பெண்ணாக குடும்ப பெண்ணாக இல்லத்தலைவியாக இருந்துவந்தார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு போயே ஆகவேண்டிய கட்டாயம் புகுந்த வீடு உள்ள புவனகிரியில் ஒரு ஸ்டுடியோவில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார்.ஆர்வம் காரணமாக போட்டோகிராபியை கற்றுக்கொண்டார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒளிப்பட உதவியாளராகவே வேலைக்கு சேர்ந்து கூடுதலாக பயிற்சி பெற்றார், அங்கிருந்து விலகவேண்டிய சூழ்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவர் துணிந்து தனியாக ஸ்டுடியோவை அமைத்தார்.
ஆண்கள் கோலோச்சும் இந்த துறையில் ஆரம்பத்தில் இவருக்கு ஆர்டர் கிடைப்பது சிரமமாகவே இருந்தது ஆனால் போகப்போக நிலாதான் வரவேண்டும் என்று வாடிக்கையாளர் விரும்பி கேட்குமளவு இப்போது ஆர்டர்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணாக இருப்பதால் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு நிலாவே முதல் தேர்வாக இருக்கிறார்.
இந்த துறையில் மிளிர வேண்டும் என்பதற்காக ஒளிப்படம் தொடர்பான கருத்தரங்கு,பயிலரங்கு,பயிற்சி பட்டறைகளில் பங்குகொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்கிறார்.
No comments:
Post a Comment