பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (3)

 பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (3)

பொருளை ஈட்டுவது நேரான வழியில் இருந்தால் மட்டும் போதாது நண்பர்களே, அதைச் செலவு செய்வதிலும்கூட மிகுந்த அக்கறை செலுத்தி - ஆயிரம் முறை யோசித்து - 'இது செய்ய வேண்டிய செலவு தானா?' என்பதை ஆழ்ந்து சிந்தித்து, அதன் விளைவு களை துல்லியமாகக் கணக்கிட்டு, தேவையானது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த பிறகு செல வழித்தீர்களானால் - பின்னால் வருந்த வேண்டிய நிலை வாழ்வில் ஒரு நாளும் ஏற்படவே ஏற்படாது!

சில நண்பர்களின் பாராட்டத்தக்க பழக்கத்தை அறிந்து நான் வெகுவாக மகிழ்ந்தது உண்டு. காரணம் அவர்கள் செலவழித்ததை நாளும் குறித்து வைத்து தங்களது வாழ்க்கையை வரை முறைப்படுத்திக் கொள்ளும் நல்ல பழக்கத்தை உடையவர்களானபடியால்! 

நம்மில் எத்தனைபேர், நாளும் செல வழிப்பதை தாளில் குறித்து வைத்து (பில்களை சேகரித்து வைப்பதுகூட பயன்படும்) சற்று நிதானமாக ஆய்வு செய்தால், நம்மையும் மீறிப் புகுந்த தேவையற்ற செலவுகள், அதீதமான செல வுகளை மேலும் குறைக்க வழிமுறை தென்படுமே!

அவசியச் செலவு - அனாவசியச் செலவு - ஆடம்பரச் செலவு என்ற பல்வகைச் செலவுகள் பற்றி சற்று யோசியுங்கள்!

குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தால் - அந்தப் பணம் - உழைத்து நேரிய வழியில் வராத பணம்; ஆதலால், அதனுடைய உண்மையான மதிப்புத் தெரிய வராது, செலவழிக்கும் 'டம்பாச்சாரித்தனமே' மிஞ்சும்!

திருட்டுப் பொருள் விற்கும் திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ அப்பொருளின் மதிப்புத் தெரிந்தா அதை விலைக்கு விற்றுப் பணம் தேடு கிறார்கள்? இல்லையே! அவசர கதியில் கிடைத் தது போதும் என்று தானே - அதன் மதிப்பைப் பற்றிக்கூட கவலைப்படாமல் விற்று விட்டு ஓடுகிறார்கள், அது போன்றவர்களே பணத்தின் அருமை தெரியாத ஆடம்பரவாசியினர்  - அவசியமற்ற செலவுகள்!

பொதுக் காரியங்களுக்குப் பலர் நன்கொடை தர மாட்டார்கள் - சாமியார்கள் கூறும் தீட்டுக் கழித்தல், மற்ற சடங்கு சம்பிரதாயங்கள் என்ற மூடநம்பிக்கைகளுக்குத் தாராளமாகத் தருவார்கள்.

கோயிலுக்கு நிதி நன்கொடை தர முன் வருவோர் பலர் பள்ளிகளுக்கும், மருத்துவமனை களுக்கும் தருவதில்லை. தங்கள் பாவத்திற்குப் பிராயச்சித்தமாகவே உண்டியலில் பெருந் தொகை போடுகிறார்கள்! அவர்கள் நல்ல தருமவான்களா? பொல்லாத கருமவான்களா?

விளம்பரத்திற்காக நிதி தருவதும் உண்டு! 'அற விலை வணிகர்' என்று நம் இலக்கியங்களில் அவர்களுக்குப் பெயரும் உண்டே!

இதுபற்றி நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - ஒருமுறை மலாயா நாட்டுத் தமிழர்கள் கவிஞரின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வாழ்த்து அனுப்பியிருந்தார்களாம்!

அதற்கு மறுமொழியாகக் கவிஞர் அவர்கள் சிறு பாடல்களைப் பாடி தம்முடைய 'குயில்' இதழில் வெளியிட்டிருந்தார்.

அப்பாடல்களில் ஒரு இடத்தில்

"செல்வம்

தலையான தென்றே எண்ணித்

தக்கவாம் வழியில்தேடிச்

செலவு மட்டாகச் செய்து

செந்தமிழ் போற்றி வாழ்க!"

என்று பாடியுள்ளார்!

ஆனால் அவரது வாழ்க்கையிலோ, ஒரு சேமிப்பு அறியாத செலவினக் கவிஞராகவே வாழ்ந்தார்!

கிராமங்களில் ஒரு பழமொழி கூறுவதுண்டு; "வந்த மாட்டையும் கட்ட மாட்டாள்; போன மாட்டைப்பற்றியும் கவலைப்பட மாட்டாள்" (அந்த வீட்டுக்காரி) என்பதாக!

அதைத்தான் - குழந்தை உள்ளத்தை பல விடயங்களில் காட்டிய நமது புரட்சிக் கவிஞர் தனது வாழ்க்கையாக நடத்தினார்!

(மேலும் சிந்திப்போம்)


No comments:

Post a Comment