அக்னி பத்தை கைவிடுக!: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

அக்னி பத்தை கைவிடுக!: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஜூன் 29  அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும், "காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 28) கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆவது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.  ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்கிறது.

‘இந்திய ராணுவத்தை காவிமயமாக்கு’ என்று ஆர்எஸ்எஸ் முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பாஜக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ‘அக்னி பத்’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது. 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment