“திராவிடர்” பிரச்சினை எங்கும்! எங்கும்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

“திராவிடர்” பிரச்சினை எங்கும்! எங்கும்!!

கவிஞர் கலி.பூங்குன்றன்

“திராவிடர்” என்று திராவிடர் கழகம் சொன்னால் மூக்கின் மீது கோபக்குரங்கு உட்கார்ந்திருந்து சேட்டை செய்கிறது. எரி நெருப்பில் விழுந்த புழு போல துடிக்கிறது ஒரு விபீடணக் கூட்டம்!

இப்பொழுது எங்கும் “திராவிடம் - திராவிடம்” என்ற சங்கொலி கேட்கிறது.

இதோ சில ஆதாரங்கள்: 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, - வரலாறு தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். 

அந்த ஆய்வானது, கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது. முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு ஈரான் பகுதியில் உள்ள அய்க்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது.

இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதியில் இருக்கும் மனித இனத்தோடு கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.

ஆரியர் வருகை

இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வருகை.

இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்கள் தான்.

இந்த நிலப்பரப்பில் ஏற்கெனவே வாழ்ந்தவர்கள் இந்திய தீபகற்பத்தை செம்மைப் படுத்திவைத்துள்ளனர் - அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தமண்ணிலேயே தொடர்ந்துவாழும் இனத்தின் மரபணுவை ஒத்து இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக மக்களின் மரபணுவும் ஒத்துப் போகிறது.

ஆரியப் பார்ப்பனர்களின் மரபணு பூர்வீக குடிகளின் மரபணுவோடு எங்கேயும் ஒத்துப்போகவில்லை.

திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ -ஆசிய மக்கள் என இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல குடிபெயர்வுகள் நிகழ்ந்து இருக்கின்றன.

இந்திய ஆளும் வர்க்கமும் வேத பண்பாட்டை போற்றிப்புகழ்ந்துகொண்டே உள்ளது. ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் “வேத கல்விதான் நம் குழந்தைகளுக்கு சிறந்தது” என்று பேசி இருக்கிறார்.

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு மற்றொரு காரணம்,

வெளியிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் கூறும் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் போல அவர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது போலாகிவிடும் என்பதால்தான்.

வெறும் தத்துவ விவாதங்களாக மட்டும் முன்னெடுப்பதை இந்து வலதுசாரிகள் விரும்பவில்லை. அரியானாவை ஆளும் பா.ஜ.க. வேதங்களில் காணப்படும் சரஸ்வதி என்ற நதியை உண்மையாக தங்களின் அனைத்து அரசு பலத்தையும் பயன்படுத்தி மண்ணிலிருந்து கிளம்பும் நீரூற்றுகள் எல்லாம் மறைந்து போன சரஸ்வதி நதி தான் என்று கதைவிட்டுக் கொண்டு இருக்கிறது. பஞ்சாப் நதிகளின் அழுத்தம் தென்பகுதிகளை நோக்கி அழுத்தத்தோடு நிலத்தடி நீரோட்டமாக பாய்கிறது. அரியனா மற்றும் ராஜஸ்தானின் வடக்குப் பகுதிகளில் எங்கு தோண்டினாலும் கிடைக்கும் இடைவெளியில் நிலத்தடி நீர் பிரிட்டு அடிக்கும், உடனே இதோ சரஸ்வதி நதி என்பார்கள். ஆனால் அதன் தொடர்ச்சி ராவி, மற்றும் சட்லஜ் நதி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அடுத்த இடத்தில் தோண்டத் துவங்கி விடுகிறார்கள்.

சரஸ்வதி நாகரீகம் என்பதை உறுதி செய்ய பார்ப்பனர்கள் சரியாக வெள்ளையர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய உடனேயே, அவர்களின் கைகளில் அதிகாரம் சென்றதும் செய்யத் துவங்கிவிட்டனர்.

ஆனால் நேரு அதனைத்தொடர்ந்து இந்திராகாந்தி என மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்த தலைவர்களின் முன்பு பார்ப்பனர்களால் அவ்வளவாக சரஸ்வதி நதிதொடர்பான தேடலை முன்வைக்க முடியவில்லை. இந்த நிலையில் வாஜ்பாய் ஆட்சி வந்ததும் மீண்டும் சரஸ்வதி நதியை முழு வீச்சில் தோண்டத் துவங்கினர்.

தற்போது முழுமையாக ஹிந்துத்துவ கார்ப்பரேட் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது, ஆகையால் தான் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதிவிடவேண்டும் என்ற முனைப்போடு இந்திய மண்ணிற்கான தலைவர்களின் பெயர்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள்.. உண்மையை ஆர்.எஸ்.எஸ்.   மறைக்கப்பார்க்கிறது” 

சித்தராமையா சாடல்!

“திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ். மறைக்கப்பார்க்கிறது” என்று கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா சாடியுள்ளார்.

கருநாடகாவில் 10ஆம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார்,  சிறீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருநாடக கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் 

தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கருநாடக மாநிலத்தில் மேனாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ன இந்தியாவின் பூர்வகுடிகளா? ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா என சொல்லுங்கள்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்ன திராவிடர்களா? 600 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய ஆட்சிக்கு யார் பொறுப்பு? திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ். மறைக்கப்பார்க்கிறது. பிரதமர் மோடி நாட்டை அய்ந்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் அபாயகரமான வேலையை செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திராவிடர் - திராவிடர் என்று பேசும் சித்தராமையா தான் யார் என்பதைக் கூறமுடியுமா என்று கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பினார். 

 இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சித்தராமையா,   

நான் திராவிடன், எங்கள் ஊரில் வந்து எங்களையே யார் என்று கேட்கிறார்கள். இது எங்கள் மண். நான் திராவிடன் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ளும் நிலையில் நமது முதலமைச்சர் உள்ளாரே - என்று பதில் அளித்துள்ளார்.

வடக்கே வெகுண்டெழுந்த 

திராவிட இன எழுச்சி முழக்கம்

திராவிட -  ஆரியர் முழக்கம் தமிழ்நாட்டில் 1900 களிலேயே துவங்கிவிட்டது, ஆனால் அது வேங்கட எல்லையைக் கடக்க 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, 

2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன் கார்கேவின் முழக்கம், 

ஆம் நாங்கள் திராவிடர்கள் தான், இந்த மண்ணுக்கானவர்கள், இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள், நீங்கள் ஆரியர்கள்; ஆடு, மாடுகளைமேய்த்துக் கொண்டு எங்கள் மண்ணில் நுழைந்தீர்கள்,  உங்களுக்கும் எங்களுக்கும் இன்றும் ஒரு மெல்லிய இடைவெளி உள்ளது என்று முழங்கினார். 

உடனடியாக அவரது பேச்சை திசைதிருப்ப ராஜ்நாத் சிங் அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நாள் என பேசத் துவங்கிவிட்டார். 

அப்போது மல்லிகார்ஜுன் பரபரப்பாக பேசியது ஒரு சிறு தீப்பொறிதான். இன்று அது வட இந்தியாமுழுவதும் பற்றி எரிகிறது. 

 பார்ப்பனர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதும் வலதுசாரி ஆதரவாளர்களும் என்ன கூறுகிறார்கள்? 

 “இந்திய நாகரிகம் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது.. இந்திய தீபகற்பத்தில் நாங்கள் வடக்கும் தெற்கும் நாடோடிகளாக அலைந்து நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்து இந்திய நாகரிகத்தை கட்டி எழுப்பினோம் அந்த நாகரிகத்தின் தொடர்ச்சியாக வேதங்களை எழுதினோம். நவீன இந்தியா என்பது நாங்கள் உருவாக்கியது” நாங்கள் நாடோடிகளாக சென்று நாகரிகத்தைப் பரப்பாவிட்டால் இந்திய தீபகற்பம் ஆப்பிரிக்காவைப் போன்று இருக்கும்” என்று கூறுகின்றனர்.   

தங்கள் பிறப்பிடம் இந்தியாதான் என்பது ஆரியர்கள் வாதம். இங்கிருந்தே ஆசியா, அய்ரோப்பா ஆகிய நாடுகளுக்குப் பரவினோம். இப்போது இந்தியா மற்றும் அய்ரோப்பாவில் பேசப்படும் இந்தோ - அய்ரோப்பிய மொழிகளை உருவாக்கியது தாங்கள்தான் என்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் மத்திய அய்ரோப்பாவை சேர்ந்த இனவரைவியலாளர்கள் மற்றும் ஹிட்லர், ஆரிய இனம் மேலான இனம் என்று கருதினார்கள். .நார்டிக் மரபை சேர்ந்த இனம் அது என்றார்கள்.

இந்தியாவின் முந்தைய நாகரிகம், அதாவது வடமேற்கில் இருந்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் ஆரியர்கள் இந்த பகுதிக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிந்துவெளி நாகரிகமானது,  எகிப்திய மற்றும் மெசோபோடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.

இந்த இரண்டு குழுக்களுக்குமிடையே கருத்து மோதல்கள் அதிகரித்த படியே வருகிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2 தரப்பிற்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பழைமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது. 

திராவிடர் கழகத்தினர் மற்றும் பெரியார் இயக்கத்தவர் மட்டுமல்ல, ஆரியத்துக்கு எதிரான அனைவரும் திராவிடர்களே!

எழுச்சித் தமிழர் முழக்கம்!

``நான்கு வர்ணங்களை எதிர்த்து மூன்று நிறங்கள் தொடுக்கும் போரின் அறிவிப்பாக இந்த மாநாடு உள்ளது. நான்கு வர்ணங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள 30 கோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் நான்கு வர்ணங்களுக்குள் வரமாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசால் அல்லது ஆதிக்க ஜாதியினரால் அடையாளப்படுத்தப்படுபவர்கள்தான் சூத்திரர்கள். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் பஞ்சமர் என அழைக்கப்படுகின்றனர். வர்ணாசிரமத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பஞ்சமர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் ஆரியன், திராவிடன் என இரண்டே மரபினம்தான். இரண்டுக்கும் டி.என்.ஏ. வேறு வேறு, ஏதோ தி.க.வும், தி.மு.க.வும் பெரியாரியர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று கருதக் கூடாது. இந்த மண்ணில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே திராவிடர்கள்தான். திராவிடத்தை எதிர்ப்பவர்கள் அயோத்திதாச பண்டிதர் பேசியதையும் எதிர்க்க வேண்டும். ஆனால் பெரியாரை மட்டுமே எதிர்ப்பார்கள்.

இந்தியாவில் எதிர்ப்புக் கலகம் செய்பவர்கள்தான் பறையர்கள். ஆரியர்கள் தங்களிடையே உருவாக்கிக்கொண்ட வாழ்க்கை முறைதான் நான்கு வர்ணம். அதில் சூத்திரர்கள் நாம் இல்லை. இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் ஆதிதிராவிடர்கள். இந்தியாவே திராவிடர்களின் நாடுதான்.

ஆதிக்கத்தையும், சுரண்டலையும் எதிர்க்க போராடியவர்கள் அம்பேத்கர், பெரியார். மேல்ஜாதி, கீழ்ஜாதி கட்டமைப்பை அவ்வளவு எளிதாக வெட்டி சாய்த்து விட முடியாது. தேர்தல் காலத்தில் மட்டும்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வேலை செய்கிறது. மற்ற நேரத்தில் சனாதன மனுதர்ம சட்டம் மட்டுமே வேலை செய்கிறது

பட்டியலினத்தவர்களை வஞ்சகத்தால் வளைத்துப் பதவி தருகிறேன் எனக் கூறுவார்கள். இந்தியாவிற்கு பிரதமராக மோடி இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு அவர் பணியாள்தான். ஆர்.எஸ்.எஸ்சில் பார்ப்பனர்கள் மட்டுமே தலைவராக முடியும். பிரதமர் மோடி இன்னொரு முறைகூட பிரதமர் ஆகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராக முடியாது.சூத்திரர்கள் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என மனுதர்மத்தில் சொல்லப்படுகிறது. அது பட்டியலினத்தவர்களை, பழங்குடியினரை சொல்லவில்லை. தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சூத்திரருக்குத்தான் கோபம் வர வேண்டும். உண்மையான எதிராளிகளை அவர்கள் அடையாளம் காட்டவில்லை. சனாதன பார்ப்பன சக்திகளுக்கு 2024இல் வாய்ப்பு ஏற்படுவதைத் தடுக்க மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய உணர்வாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்கிறார் தொல்.திருமாவளவன்.

இந்தியா திராவிடர்களுக்கே சொந்தம்.. வேறு யாருக்கும் உரிமையில்லை”: 

அசாதுதீன் ஓவைசி பேச்சு!

கருநாடகாவில் 10ஆம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், சிறீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்கள்தான். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைக்கப்பார்க்கிறது என கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார். இந்நிலையில்,இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம் என அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியும், சித்தராமையாவின் ஒத்தக்கருத்தையே பேசியுள்ளார்.

மகாராட்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற நிகழ்வில் அசாதுதீன் ஓவைசி, “இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல. இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது” என தெரிவித்துள்ளார்.

இன்னும் ஏராளம் உண்டு - எதிரிகள் சீண்டினால் நமது சீற்றமும் சீறிக் கொண்டு ஆதார அம்பறாத் தூணியிலிருந்து வெளிவரும்!

No comments:

Post a Comment