மே 10ஆம் தேதி வரை 110 கோடி பெண்கள் இலவசப் பயணம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

மே 10ஆம் தேதி வரை 110 கோடி பெண்கள் இலவசப் பயணம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்

சென்னை, மே12 - தமிழ்நாடு  அரசுப் பேருந்துகளில், கட்டணமின்றி பயணிக் கும் மகளிரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், சாதாரண கட்டணப் பேருந்து பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 2022 மே 10-ஆம் தேதி வரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ள தாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில், அனைத்து அரசுப் போக்கு வரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (மே 11), போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் செலவீனங்களைக் குறைத்து நிதி நிலையினை மேம்படுத்துதல் குறித்தும்,   மே 12 அன்று நடைபெற உள்ள போக் குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்கள்.

பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது தமிழ் நாடு முதலமைச்சர் மகளிருக்கான இலவச பயணத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார்.அதற்கு தமிழ்நாடு முழுவதும் சாதாரணக் கட்டண பேருந்து அறிவிப்புக்கு முன்னர் அதாவது 2021 மே 7-ஆம் தேதிக்கு முன் 5,865 ஆக இருந்த சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 7,321-ஆக அதிகரித்துள்ளது. 

இதனால் தற்போது, அதிகமான மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் அரசுப் பேருந்துகள் உள்ள தாக தெரிவித்தனர். 

சாதாரண கட்டணப் பேருந்து பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 2022 மே 10-ஆம் தேதிவரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ள தாகவும் தெரிவித்தனர்.

வலைதளம் வாயிலாக பயண கட்டணச் சலுகை சீட்டு

மேலும், தற்போது 2022-_2023 ஆண்டிற்கான சட்டசபையில் அறிவித்துள்ள அறிவிப்புகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை/ பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக் கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மய்யம் அமைத்தல், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநக ரங்களில் உள்ள 16 பேருந்து முனை யங்களில்  தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை நடை முறைப்படுத்த அறிவுறுத்தினார்.

ஓட்டுநர் பயிற்சி மய்யம்

மேலும் அரசு விரைவு போக்கு வரத்துக் கழகப் பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடுதல், இணையவழியாக முன்பதிவு செய்யும் இருவழி பயணச்சீட்டுகளுக்கு 10 சதவீத கட்டண சலுகை அறிமுகப் படுத்துதல், 5 வயதிற்கு உட்பட்ட குழந் தைகளுக்கு பேருந்துகளில் கட்டண மில்லா பயணம் செய்ய அனுமதித்தல், திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாத புரத்தில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மய்யம் அமைத்தல் ஆகியவற்றை விரைவில் போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், பயணக் கட்டணம் தவிர்த்த இதர வருவாயினை பெருக்குவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள் ளவும், பணிமனைகளில் சோலார் ஒளிப் பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், மற்றும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment