இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (6) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (6)

தனது ரத்த உறவுகளில் யாரும் கொள்கை பூர்வ இயக்க உணர்வு கொண்டு, இயக்கத்தில் இல்லாதவர்கள், என்ற நிலையில்கூட, தந்தை பெரியார் அவர்கள், தனது அறக்கட்டளையில் தனக்குப் பிறகு அன்னையார் அதனை நடத்தும் போது அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு - நல்லெண்ணக் கண்ணோட்டமாக அம்மாவின் தம்பி ஒருவரை யும் உறுப்பினராக நியமித்தார். அவருக்கு அய்யாவே அவரது உறவு வழியிலே ஒருவரை யும் திருமணமும் செய்து வைத்தார்.

அய்யா டிரஸ்ட் உறுப்பினராக அவரைப் போடுவதை அம்மாவுக்குக்கூட முதலில் சொல்ல வில்லை, பிறகு சில மாதங்கள் கழித்துதான் அய்யா அம்மாவிடம் மினிட் புத்தகத்தில் - நடவடிக்கைகளுக்கான கையொப்பம் வாங்கும் படி சொன்னபோது; அவரது தம்பி பெயரைப் பார்த்துவிட்டு அவர் மகிழ்ச்சி அடையவில்லை; மாறாக, அய்யாவிடம்அவனை ஏன் போட்டீர் கள்?” என்று கேட்டுள்ளார்; “உங்களுக்குத் துணையாய் - உதவியாய் இருப்பார்என்று கருதியே போட்டிருக்கிறேன் என்று சொன்னார் அய்யா.

உடனே அம்மா அவர் கூறியதில் சற்றும் தயங்காமல், “அவன் துணையாய் இருக்க வேண் டாம். தொல்லை கொடுக்காமல் இருந்தாலே நல்லது. அதில் எனக்கு உடன்பாடில்லை” - என்று அய்யாவிடம் சொன்னதை எங்களிடம் பிறகு ஒரு நாள் சொன்னார் - சில புகாருக்குரியவராக அவர் நடந்து கொண்டார் - அய்யா மறைவுக்குப் பின் - அம்மா கணித்தது சரியாயிற்று.

அம்மா கணித்தது எதுவும் தவறாகப் போகவில்லை. அம்மா மறைவுக்குப் பின்னரும் நான் அவரை நீக்கிடவில்லை - சற்று எச்சரிக்கை யாகவே இருந்தேன். காரணம் அவரும் திடலி லேயே இருந்தார் அவரையும் வெளியேற்ற வில்லை.

அன்னையார் தொலைநோக்கு சரியானது என்பதை அவரது நடத்தை அம்மா வாழ்ந்த போதும் சரி, பிறகும் சரி இயக்க நடவடிக்கை களுக்குப் பெருத்த அவலமாகவே இருந்தது. அது பற்றி விவரிக்க விரும்பவில்லை.

அன்னையாருக்கு ஒரு தங்கை, இரண்டு தம்பிகள், தங்கை பெங்களூருவில் பெரும் குடும்பத்தில் திருமணமாகி அவருக்கு இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள். இராணுவத்தில் பணியாற்றி, பெங்களூருவில் நிரம்ப சொத்துப் படைத்து பிறகு சற்று வாய்ப்புக்குறைந்த வர்களானவர்கள். அதிக தொடர்பு அம்மா வைத்துக் கொள்ள மாட்டார்.

தம்பிகள் இருவரில் ஒருவர் திடலில் இருந்த வருக்கு மூத்தவர். அவர், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஒரு கம்பெனியில் பணிபுரிந்தவர் - ஒழுக்கமானவர். எப்போதாவது அம்மாவை வந்து பார்த்துவிட்டுப் போவார். அவருக்கு திருச்சியில் பெண் பார்த்து பெரியார் தலைமை யில் திருமணம். பிள்ளைகள் உண்டு. அம்மாவின் தங்கை (கமலா அம்மாள்). தங்கையின் பெண் பிள்ளையில் ஒன்று அம்மா உடல் நலம் குறைந்தவுடன் கடைசி கட்டத்தில் உதவியாக இருந்தவர்.

அம்மாவின் அன்னையார் (திருமதி பத்மாவதி) உடல் நலம் குன்றி, மீரான் சாயபு தெரு வீட்டில் ஒரு அறையில் கடைசி வரை இருந்தவர். அவரை அம்மா கவனித்து வந்தார்!

அமைப்பின் சொத்தில் அந்த உறவுகள் உரிமை கொண்டாட முடியாமல் செய்தாலும், அம்மா மனிதநேயத்துடனே அவர்களிடம் பழகினார். அம்மாவின் அன்னையார் தம் விருப்பப்படி அவர்களது நகைகளில் சிலவற்றை அம்மாவுக்குத் தந்தார். அவர் அணியாமல் வைத்திருந்து என்னிடம்மூத்த தம்பி, தங்கை இவர்களின் குடும்பத்தில் இந்தந்த பிள்ளை களுக்கு என்று எனக்குப் பிறகு நீ அவர்களை அழைத்து இந்தக் குடும்ப நகைகளை அவர்க ளிடம் ஒப்படைத்துவிடுஎன்றார். அவை பெரும் அளவில் இல்லை; ஓர் அளவுக்குள்ளதையும் என்னிடம் குறிப்பிட்டார்கள்.

அம்மா, நீங்களே பெயர், நகை விவரம், அளவு எல்லாவற்றையும் ஒவ்வொரு சிறு துண்டுத் தாளில் உங்கள் கையெழுத்துடன் ஒவ்வொருவர் பெயரிலும் எழுதிக் கொடுங்கள்என்று கேட்டவுடன் எழுதியே தந்தார்.

அந்த நகைகளை அன்னையார் மறைந்த சில வாரங்களில் அவர்களை வரவழைத்து, அவர்க ளிடம் அம்மா கைப்பட எழுதிய பெயர், விவரம் எல்லாம் தந்தேன். பெரியார் திடலில் குடியிருந்த நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம் துணைவியார் திருமதி கமலா, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பண்டரிநாதன் (அய்..எஸ். ஓய்வு) இருவர் முன்னிலையில் சாட்சியத்தோடு அவரவர்க ளுக்கு ஒப்படைத்தேன். அவர்களும் மகிழ்ச்சியு டன் பெற்றுக் கொண்டார்கள்.

தன்னுடன் இறுதி வரை உதவிக்கு இருந்த தங்கை மகள் சுனிதி என்ற பெண் பெயரில் 25,000 ரூபாய் அம்மா ஆர்.டி. போட்டிருந்ததை இன்கம் டாக்ஸ் துறையினர் அம்மா ஏதோ பினாமி பெயரில் போட்டிருப்பதாகத் தவறாகக் கருதி அதையும் எடுத்துச் சென்றனர். இது நெருக்கடி நிலை - மிசா காலத்தால்.

மிசாவில் விடுதலையாகி நான் வந்த பிறகு இதுபற்றி அம்மா என்னிடம் சொன்னார்கள். கட்டடங்களைஅட்டாச் செய்ததோடுஅறக் கட்டளை கட்டட வாடகைகளைக் கூட வருமான வரி பாக்கிக்காக என்று அட்டாச் செய்து முடக்கினர்.

இதுபற்றி உரிய வருமானவரித் துறை அதிகாரியைச் சந்தித்து, நம் பள்ளிகள், விடுதலை, மற்றவற்றை எப்படி நடத்துவது என்பது பற்றிப் பேசி இதற்கு ஒரு முடிவு காண உரிய அதிகாரிகளை சந்தித்து வருகிறேன்என்று அம்மா விரும்பியடியே சென்றேன். அவர் ஒரு உயர்ஜாதி அதிகாரி. அவருடன் பல மணி நேரம் பேசிஒரு குறிப்பிட்ட தொகையினை மாதா மாதம் வருமான வரிக்காக கட்டுவோம். மற்ற நிறுவன அலுவலகங்கள் பள்ளிகள் உள்பட அனைத்திலும் பணியாற்றுவோருக்குச் சம்பளம் வழங்கிட வாடகைத் தடைகளை நீக்க கேட்டுக் கொண்டதைஏற்று ஒரு ஒப்பந்தம் போட்டோம்.

பலவிதமான ஏற்ற இறக்கங்கள் நட்பு, மிரட்டல் போன்ற பல வகை முறைகளையும் என்னிடம் அந்த பார்ப்பன மேலதிகாரி நளினிமாகச் செய்தார். நான் அவரிடம் அமைதியாக காரண காரியங்களுடன் நடப்புகளைச் சொன்னபோது, “என்னங்க வீரமணி நாங்களா உங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். எல்லா உங்க ஆளுங்கதானே எங்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறாங்க. அதன்மீது தானே இந்த நடவடிக்கைஎன்றார். “இதோ பாருங்கஎன்று டிராயரைத் திறந்து என்னிடமே அந்தப் புகார் கடிதங்களைக் கொடுத்துப் படிக்க சொன்னார்.

நான் சொன்னேன், “எங்கள் இயக்கத்திலி ருந்து வெளியேற்றப்பட்டவர்கள், நீக்கப்பட்ட வர்கள் இப்படி செய்யாமலா சார் இருப்பார்கள். உண்மை என்ன என்றுதான் உங்களுக்குத் தெரி யுமே; உங்களின் வருமான வரித்துறை அதிகாரி கள் பதுக்கல் மூலம் ஏதாவது தொகையைப் பற்றி இருக்கிறார்களா? எல்லாம் Transparent - வெளிப்படையாகத்தானே இருந்தது. பின் உங்களுக்கே அது பொய்யான புகார் என்பது விளங்கியிருக்க வேண்டுமேஎன்று மளமள வென ஆங்கிலத்திலேயே கூறிட அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.  அவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது குரலை கொஞ்சம் அடக்கி வாசித்தார். அவரது இந்த வாடகைக் கட்டுப்பாடு நீக்கத்திற்கு நன்றி தெரிவித்து, அந்தப் பெண் பெயரில் தொகையை வருமான வரித் துறை வங்கியிலிருந்து எடுத்தது பற்றிச் சொன்னேன். “அந்தப் பெண், அம்மா தங்கை மகள் - பினாமி அல்ல, திருமணத்திற்காகவே அத்தொகை, அதைப் பிடிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்என்று சொன்னவுடன், “அப்படியா, அதற்குத் தடை நீக்கம் செய்து உத்தரவு கொடுக்கிறேன்என்று கூறினார். இதனை வந்து சொன்னவுடன் அன்னையார் அடைந்த மகிழ்ச்சி எனக்கு ஒரு தெம்பினைத் தந்தது - மிசாவிலிருந்து திரும்பிய பிறகு.

இப்படி எத்தனையோ தடைகள், சூது சூழ்ச்சி, துரோகங்கள். அன்னையாரும், அவருக்கு உண் மையாக இருந்தவர்களும். அந் நெருப்பாற்றைத் தாண்டியதால் தான் இயக்கம் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறது என்றாலும் எப் போதும் நாம் எதிர் நீச்சல்காரர்கள்தானே.

(தொடரும்)

No comments:

Post a Comment