மின்சாரம்
1. கேள்வி: காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்ன?
பதில்: ஈ.வெ.ரா.வின் சமூகநீதி. அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர ஸ்டாலின் விடுத்த அழைப்பை காங்கிரஸ் ஏற்றிருப்பதால், தி.மு.க.வின் ஈ.வெ.ரா. சமூகநீதிக் கொள்கைதான் காங்கிரஸ் கொள்கையும்.
(துக்ளக், 23.2.2022, பக்கம் 7)
‘துக்ளக்‘, காங்கிரசை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு காங்கிரசை உயர்த்தித்தான் பிடித்திருக்கிறது.
சமூகநீதிக் கொள்கை என்பது மிக உயர்ந்த கொள்கைதானே. சமூகநீதி என்பதை ஒரு கட்சி எதிர்க்கிறது, அந்தச் சொல்லைக் கேட்டாலே ஒரு கட்சிக்குக் கசக்கிறது என்றால், அதன் பொருள் அந்தக் கட்சி மக்களுக்குக் கசக்கிறது என்று பொருள். இப்பிரச்சினையில் இன்றைக்கு அனைத்துக் கட்சிகளாலும் - பெரும்பாலான மக்களாலும் தனிமைப்படுத்தப்பட்ட பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரே கட்சி பி.ஜே.பி.தானே!
தமிழ்நாட்டை ஒருபோதும் பா.ஜ.க. ஆள முடியாது என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., சொன்னதன் பொருள் என்ன?
சமூகநீதியை நாங்களும் ஆதரிக்கிறோம் என்று கூட வாய்த் தவறியோ, தப்பித் தவறியோ சில நேரங்களில் பி.ஜே.பி. தலைவர்கள் சொல்லுவது உண்டே - அப்படியானால் வேறுவழியின்றிப் பெரியாரின் வழியை பி.ஜே.பி. ஏற்றுத் தீரவேண்டிய இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?
அந்தோ பரிதாபம் - குருமூர்த்தி துக்ளக்கை அதலபாதாளத்தில் தள்ளி, கர்மாந்திரங்களைச் செய்துவிட்டுதான் வெளியேறுவார் போலிருக்கிறது.
2. கேள்வி: கர்வம் போற்று தலுக்குரியதா, சிறுமைக்குரியதா?
பதில்: மற்றவர்களை மட்டமாக நினைக்காத, நம் கர்வம் போற்றத்தக்கது. உதாரணமாக நம் மதம், நம் கிராமம், மொழி, நாடுபற்றி கர்வம் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், மற்ற மதங்கள், கிராமங்கள், மொழிகள் நாடுகளை மட்டமாக நினைக்கும் நம் கர்வம் தவறானது. ஏன் ஆபத்தானதுகூட.
(துக்ளக், 23.2.2022, பக்கம் 9)
கால் பந்தாட்டத்தில் ‘சேம் ஸைடு கோல்’ அடிப்பதுண்டு. துக்ளக் அந்த வேலையை ‘வெகு அழகாகவே’ செய்கிறது.
மற்ற மதங்கள், மொழிகள், நாடுகளை மட்டமாக நினைக்கும் நம் கர்வம் தவறானது - ஏன் ஆபத்தானதும்கூட என்கிறது ‘துக்ளக்‘.
மற்ற மதங்களை மட்டமாக நினைப்பது எது? இவர்களின் குருநாதரான கோல்வால்கர் எழுதிய We or Our Nation hood Defined (வரையறுக்கப்பட்ட நமது தேசியம்) என்னும் நூலில் என்ன கூறுகிறார்?
இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் எதையும் கேட்காமல், எந்தச் சலுகையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்‘‘ என்று எழுதியுள்ளாரே -
இதுதான் குருமூர்த்தி அய்யர் கூறும் மற்ற மதங்களை மட்டமாக நினைப்பது கர்வம் என்பதற்கான இலக்கணமோ - எடுத்துக்காட்டோ!
அல்லது குருஜியைக் குதறியும், கேலி செய்யும் இடக்கர் அடக்கரோ!
“ஸ்ரீராமபிரான்- ஸ்ரீ கிருஷ்ண பகவான்” ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக் கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.
இந்தியக் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கத் தலைமை இடத்தின் ஏற்க முடியாது கருத்துகளை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்‘‘ என்று மேனாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் ஆக்ராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸின் மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பேசினாரே (‘தினமணி’, 16.10.2000) இதுதான் குருமூர்த்தி கூறும் மற்ற மதங்கள்மீது கர்வம் கூடாது - தவறானது - ஆபத்தானது என்பதற்கான பாஷ்யமோ!
உங்கள் ஜென்டில்மேன் அடல்பிஹாரி வாஜ்பேயியின் யோக்கியாம்சம்தான் என்ன?
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை எழுதியவர் ஏ.பி.வாஜ்பேயிதான். எத்தகைய ‘முத்துகளை’ கொட்டியுள்ளார் - தெரியுமா?
‘Sang my Soul’ என்பது கட்டுரையின் தலைப்பாகும். (‘‘ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா!’’)
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டுவர என்ன செய்யவேண்டும் தெரியுமா?
1. இந்துக்களை அணி திரட்டவேண்டும் (Organising) 2. முஸ்லீம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள் முஸ்லிம்களுக்கென உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மதமாக்குவது.
அப்படி முஸ்லிம்களை உட்கொள்வதற்கு வழிகள் மூன்று:
1. முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிட வேண்டும்; விரட்டிவிட வேண்டும்.
2. முஸ்லிம்களை நம் வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3. முஸலிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி.
இந்த மூன்று “முத்துகள்”தான் ஜென்டில்மேன் வாஜ்பேயி உதிர்த்தவை.
மற்ற மதங்களை மட்டமாக நினைப்பது கர்வம், ஆபத்து என்று கூறும் குருமூர்த்தி அய்யர்வாளே - குருஜி கோல்வால்கர், கே.எஸ்.சுதர்சன், அடல்பிஹாரி வாஜ்பேயி கூறியவற்றிற்கு என்ன வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் சொல்லப் போகிறீர்?
ஒன்றை உறுதியாக ஒப்புக்கொண்டதற்கு குருமூர்த்தி அய்யரை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உயரத் தூக்கித் தூக்கிப் புகழலாம்.
துக்ளக் பதிலில் மற்ற மதங்களை, மொழிகளை மட்டமாக நினைக்கும் நம் கர்வம் தவறானது, ஆபத்தானது என்று ஒப்புக்கொண்டுள்ளாரே - அதற்காகத்தான் இந்தப் ‘பாராட்டோ, பாராட்டு!
No comments:
Post a Comment