கரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை..! - ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

கரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை..! - ஒன்றிய அரசு

புதுடில்லி, பிப்.9 கரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. 

கோவின் இணையதளத்தில் கரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த வழக்குரைஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஒன்றியஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நடைமுறை செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கொண்டு வரச்சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒன்றிய அரசு  பதில் அளிக்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு 7.2.2022 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், கோவின் இணையதளத்தில் கரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமல்ல, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களிடம் ஆதார் அட்டை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சகத்தின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment