1908 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சு என்ற பெயரில் வ.உ.சி., சிவா, பத்மநாப அய் யங்கார் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 133-ஏ பிரிவுகளின்கீழ் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு, அது ராஜ நிந்தனை சட்டமாக வெள்ளையர் அரசால் மாற்றப்பட்டது.
வ.உ.சி.யின் பொதுக் கூட்ட உரைகள் அனல் கக்கின. நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ‘வந்தே மாதரம்' ஒலி முழக்கம் எங்கும் விண்ணைப்பிளந்தது. பாளையங்கோட்டையில் நடந்து சென்ற ஹார்வி சகோ தரர்கள்மீது சிலர் தாக்குதல் தொடுத்தனர். சுதேசிய உணர்ச்சியின் மிகுதியால் திருநெல்வேலியில் நடை பெற்றுக் கொண்டு இருந்த அய்ரோப்பிய சர்க்கஸ் கம்பெனி பொதுமக்கள் ஆதரவின்மையால் முடங்கியது.
சுதேசி எழுச்சியைக் கண்டு எரிச்சலடைந்த கலெக்டர் வின்ச் என்பவரால் அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக வ.உ.சி., சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
மூவரும் காவலில் வைக்கப்பட்டதற்காக நெல்லை மக்கள் கொதித்துக் கிளம்பினர்.
இவர்கள்மீதான வழக் கினை ஆதர் பிரான்சிஸ், பின்ஹே ஆகியோர் விசாரித்தனர்.
வெள்ளைக்கார நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பு இலண் டன் மாநகரம் வரை கடும் கண்டனத்தை எழுப்பச் செய்தது.
வ.உ.சி.க்கு அளிக்கப்பட் டது இரட்டை ஆயுள் தண்டனை - ஆம் நாற்பது ஆண்டுகள்.
கோவையில் இறங்கிய வ.உ.சி. காலிலும், கையிலும் விலங்கும், சங்கிலியும் மாட்டி, போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டார். வெள்ளை சார்ஜண்ட் உருவிய வாளுடன் நடந்து சென்றான். சிறையிலே மாட்டுக்குப் பதிலாக வ.உ.சி. செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
நீதிபதி பின்ஹே எழுதிய தீர்ப்பின் வரிகள் என்ன தெரியுமா?
‘‘சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இருவர்க்கத்தாரிடையே பகைமையையும், வெறுப் பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள்கூட சாவுக்குப்பின் ராஜ துவேஷத்தை ஊட்டும்!'' என்று எழுதினார் என்றால், இந்தச் சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து இந்திய ஒன்றிய அரசின் நிபுணர்கள், ‘வ.உ.சி. யார்? இவரை யாருக்குத் தெரியும்? இவர் ஒரு வணிகர்தானே?' என்று கேட்டனர் என்றால், நாம் இன்னொரு ‘வெள்ளை'யர் ஆட்சியில் வாழ்கிறோமா என்றுதானே நினைக்கத் தோன்றும்!
- மயிலாடன்
ஆதாரம்: அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்')
No comments:
Post a Comment