மாநிலங்களின் நிர்வாகப் பணிகள் தடைபடுவதற்கான நிலையையே இது உருவாக்கும்! இம்முடிவினை கைவிடுவது நல்லது!
ஆட்சிப் பணி விதிகளில் (அய்.ஏ.எஸ்.) நான்கு திருத்தங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது என்பது மாநிலங்களின் நிர்வாகப் பணிகள் தடைபடுவதற்கான நிலையையே உருவாக்கும் - இம்முடிவினை ஒன்றிய அரசு கைவிடுவது நல்லது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசு ஆட்சிப் பணி (அய்.ஏ.எஸ்.) விதிகளில் நான்கு திருத்தங்களைக் கொண்டுவர உத்தேசித்து, அதுபற்றி மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது; இதுபற்றி மாநில அரசுகள் ஜனவரி 25 ஆம் தேதிக்குமுன் தங்களது கருத்துகளைக் கூறவேண்டும் என்றும் கூறியிருப்பது, மாநிலங்களிடம் கருத்துக் கேட்பதற்கு உரிய கால அவகாசத்தை மிகவும் சுருக்கி வைத்துள்ளது மட்டு மல்ல, வெறும் சம்பிரதாய சடங்குபோல் தோன்றுகிறது.
மாநிலத்தின் நிர்வாகப் பணிகள் தடைபடுவதற்கான நிலையை உருவாக்கக் கூடும்!
இந்த நான்கு திருத்தங்களில் குறிப்பாக இரண்டு முக்கிய திருத்தங்கள் மாநில நிர்வாக செயல் திறனை வெகுவாகப் பாதிப்பதாக அமையும்; காரணம், முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை உடனடியாக டில்லிக்கு - ஒன்றிய அரசுத் துறைக்குப் பணிபுரிய அனுப்பவேண்டும் என்பது - அந்தந்த மாநில அரசின்கீழ் சிறப்பான வகையில் செயல்படும் அதிகாரி களை, அவர்கள் விருப்பம்பற்றியே கவலைப்படாமல், திடீரென்று அழைப்பது, மாநிலத்தின் நிர்வாகப் பணிகள் தடைபடுவதற்கான நிலையை உருவாக்கக் கூடும் என்பதாலும், அவர்களிடையே ஓர் அச்சத்தையும் நிரந் தரமாக ஏற்படுவதாகும். இதை அரசியல் நோக்கத்தோடு பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்தும், அதில் பொதிந் திருக்கும் வாய்ப்பும் ஏற்படும் என்பதால்தான், நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த முடிவைக் கைவிடவேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்!
மாநிலங்களில் நிலையான அரசுதான் நீடித்த வளர்ச் சிக்கு அடிப்படையாகும். இந்த நிலையான அரசுக்கு, நிலையான நிர்வாக அதிகாரிகள்தான் ரத்தவோட்ட மாகும்.
ஒன்றிய அரசு இம்முடிவை கைவிடுவது நல்லது!
இது மாநில வளர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடிய தாகி விடக் கூடும்; விரும்புபவரை அனுப்பும் நடைமுறை தற்போது உள்ளது. இப்படி அவர்களை ஒன்றிய அரசு திடீரென்று அழைத்தால், அதனால் எற்படும் நன்மையை விட, தீமையே அதிகம் என்று அனுபவம் வாய்ந்த, ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்துகளையும் பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
இம்முடிவினை கைவிடுவது நல்லது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.1.2022
No comments:
Post a Comment