கேள்வி : மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் தனியாக காவல் நிலையம் செல்ல வேண்டாம் என்று மேனாள் ஆளுநரும் பா.ஜ.க. தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மவுரியா அவர்கள் கூறியிருப்பது பற்றி தங்கள் கருத்து?
- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை.
பதில்: ஒரு பெண் உடல் முழுவதும் நகைகள் அணிந்த நிலையில் இரவில் நடுநிசியில் தனியே நடந்து செல்வதே நாம் உண்மையான சுதந்திர ஆட்சியில், பாதுகாப்புடன் உள்ளோம் என்பதற்கான அடையாளம், அறிகுறி என்றார் காந்தியார்.
ஆனால் டில்லி தலைநகரில் பெண்களின் நிலைமை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம், அதே பா.ஜ.க. தேசிய துணைத் தலைவரின் கருத்தும் பேச்சும்!
இந்த நாட்டின் 75 ஆண்டு கால சுதந்திர ஆட்சியில் பெண்கள் வெளியே நடமாடவே கூடாது என்று சொல்லவில்லையே என்பதற்காக நாம் அவருக்கு நன்றி கூறுவோமே!
கேள்வி : அறிவை வளர்க்கும் படிப்பகங்களுக்கு ‘டொமாஸ்டிக்‘ முறையில் மின்கட்டணம் விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதைப் போல் முதியோர் இல்லங்களுக்கும் வழங்குமாறு வேண்டுகோள் வைத்தால் என்ன?
-ஆரோக்கிய சேவியர்,செங்கோட்டை
பதில்: கோரிக்கை வந்தால் - மின்சார வாரிய நிலைமை சரியானால் நிச்சயம் பரிவுடன் கவனிக்கும் இவ்வாட்சி என்பது நிச்சயம். காரணம் - இது திராவிட மனித நேய ஆட்சியாகும்!
கேள்வி : அரசியலில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டாததால், பிரதமர் மோடி மேலும் மேலும் பலம் பெறுவார் என்று மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
- ம. கண்ணன், மேல்மருவத்தூர்
பதில்: காங்கிரஸ் கட்சி தலைமையை விரைவில் அறிவித்து, ராகுல் போன்ற கொள்கையாளர்கள் விரைந்து செயல்பட வில்லையே இந்த கால கட்டத்திலும் என்பதற்கான ‘வேக் - அப்’ (wake-up call) தான் அது!
கேள்வி : தமிழ்நாடு ஆளுநர் மூலம் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?
- இர. கலைவாணி, மேடவாக்கம்.
பதில்: சரியான பேச்சு, நூற்றுக்கு நூறு உண்மை! வரவேற்கிறோம் அவரது கருத்தை.
கேள்வி : இவ்வருடம் (2021) சராசரி மழை அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆனால் பொழிகின்ற மழைநீரைத் தேக்கி வைக்காமல் கோடைகாலங்களில் குடிநீருக்கே அல்லல்படுகின்ற அவலநிலையைக் களைந்தெறிய தமிழ்நாடு அரசு ஆவன செய்யுமா?
- க. சண்முகம், மணிமங்கலம்.
பதில்: நிச்சயமாக; வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பு அணைகளும், நீர் சேமிப்புகளும் மிகவும் முக்கியம். வீட்டுக்குவீடு மழைநீர் சேகரிப்புத் திட்டம் வலிமையாக்கப்பட்டு வெளியேறும் நீரை தனித்தனியே சேமித்து, தூய்மைப்படுத்த ஒரு தனித்திட்டமே வகுக்கலாம்!
கேள்வி : அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் அறிஞர்கள் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்து ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என்று தி.மு.க. அரசு அறிவித்ததற்கு அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து நிலவுவது சரியா?
- இராசு.மணி, காட்பாடி.
பதில்: தவறு; ‘தமிழ்நாடு நாளை’ கொண்டாடும்போது அதற்கு - அம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் இருந்திருக்க வேண்டாமா? 1967 ஜூலை 18 தான் ‘தமிழ்நாடு’ பிறந்த நாள்! அதற்கு முன்னமே நவம்பர் முதல் நாள் மொழிவழி மாநிலம் பிரிந்து சென்னை ராஜ்யம் உருவானது. இரண்டுக்குமான வேறுபாடு பளிச்சென தெரியவில்லையா?
எனவே முதல் அமைச்சரின் அறிவிப்பில் குறை காண முயலுவது அரசியல்; பச்சை அரசியல்! மாநிலப் பிரிவினை வேறு, தமிழ்நாடு உதயமான நாள்வேறு!
கேள்வி : தங்களுக்குரிய உரிமை மறுக்கப்படுவதை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த குறவர் சமூகத்தைத் சேர்ந்த சகோதரி அஸ்வினி அவர்களின் தெளிவு பாராட்டுக்கு உரியது அல்லவா?
- வெ. ஜமுனா, ஆரணி.
பதில்: உரிமை காக்க குரல் எழுப்பி, கவனத்தை ஈர்த்து வரலாற்றைப் புரட்டிப் போட்ட துணிச்சல் பெண்மணி.
“சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை!” என்ற நமது முதல் அமைச்சரின் நெற்றியடி சொற்கள் பிரமாதம்; என்னே அருமையான கருத்துச் சிதறல்!
உடனடியாக உடன் உண்ணலை அதே கோயிலில் ஏற்பாடு செய்து, உடன் அமர்ந்து உண்ண வைத்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் விரைந்த நடவடிக்கைக்கு நமது மனம் நிறைந்த செயற்கரிய செயல் ஆகும்!
கேள்வி : 2ஜி வழக்கில் வினோத் ராய் மன்னிப்புக் கேட்டுள்ளாரே- ஆ.இராசா உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு?
-முகிலா, குரோம்பேட்டை.
பதில்: மில்லியன் டாலர் கேள்வி. நாம் (திராவிடர் கழகம்) துவக்கத்தில் இதைத்தானே நாடு முழுவதும் தோலுரித்துக் காட்டி உண்மையை நிலைநாட்ட ஊர்தோறும் பிரச்சாரம் செய்தோம் - மறந்துவிட்டதா? வாய்மையே வெல்லும்!
கேள்வி : வட மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் தொடர்ந்து சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் பிஜேபிக்கு இறங்குமுகம் தானே?
- சங்கர் அப்பாசாமி, ஜெயங்கொண்டம்
பதில்: காவிச்சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என்பதற்கான அடையாளம் இது! ‘கிழக்கு வெளுத்தால், காரிருள் நீங்கும்!‘ என்பது பழமொழி!
கேள்வி : ‘ஜெய்பீம்‘ திரைப்படம் பற்றி தங்கள் கருத்து?
- மணிமேகலை, ஆவடி.
பதில்: அண்மைக்காலத்தில் வந்த அறிவுக்கு வேலை கொடுக்கும், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கு குரல் எழுப்பிய பயனுறு சிறந்த திரைப்படம். ‘ஜெய்பீம்‘ தந்த நடிகர் சூர்யாவையும், அவரது குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
இது போன்ற திரைப்படங்கள் சமூகத்தின் மனச்சான்றை எழுப்பிடும் அருமையான ஏவுகணைகளாகும்!
No comments:
Post a Comment