பாராட்டத்தக்க மனிதநேயம் 40 வயது கரோனா நோயாளியை காப்பாற்ற உயிரை விட்ட முதியவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 2, 2021

பாராட்டத்தக்க மனிதநேயம் 40 வயது கரோனா நோயாளியை காப்பாற்ற உயிரை விட்ட முதியவர்

நாக்பூர், மே 2 40 வயது கரோனா நோயாளிக்காக மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்த படுக் கையை விட்டுக்கொடுத்து முதியவர் ஒருவர் தனது உயிரை விட்டு உள்ளார்.

மராட்டியத்தில் கரோனா பேரலை காரணமாக ஏராளமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. மருத்துவமனை நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பது பெரும் திண்டாட்டமாக மாறி உள்ளது.

இந்தநிலையில் மாநிலத்தின் 2-ஆவது தலைநகராக கருதப்படும் நாக்பூரை சேர்ந்த நாராயண் பாவ்ராவ் (வயது 85) என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 16-ஆம் தேதி அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக சென்றார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவருக்கு படுக்கை ஒதுக்கப்பட்டது.

அப்போது நடுத்தர வயதுள்ள ஒரு பெண் கரோனா பாதித்த தனது 40 வயது கணவருக்கு படுக்கை ஒதுக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்திடம் இருகரம் கூப்பி கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்து கண்கலங்கிய முதியவர் நாராயண், தனது படுக்கையை அந்த நபருக்கு அளிக்கும் படியும், தான் வீட்டிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் தயங்கினர்.

அப்போது நாராயண் பாவ்ராவ் கூறும்போது, நான் 85 வயதை கடந்துவிட்டேன். நல்லது, கெட்டதுகளை பார்த்து விட்டேன். இந்த படுக்கை என்னைவிட இப்பெண்ணின் கணவருக்கு அதிக அவசியமாக உள்ளது. அவர் இறந்து போனால், அவரது குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, இந்த நபரின் வாழ்க்கையை காப்பது எனது கடமை. எனது படுக்கையை அவருக்கு ஒதுக்கி விடுங்கள் என தெரிவித்தார். வேறு வழியின்றி நாராயண் பாவ்ராவின் வேண்டுகோளை எழுத்து மூலமாக மருத்துவர்கள் பெற்றுக்கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகி அடுத்த 3 நாள்களில் அவர் உயிரிழந்தார். நாராயண் பாவ்ராவ் குறித்து சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment