சிதம்பரம் கோவிலில் பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

சிதம்பரம் கோவிலில் பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம், டிச.31- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 29ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது, அதனை தொடர்ந்து 30-ஆம் தேதி நேற்று தரிசன விழாவும் நடை பெற்றதுஇதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கலந்து கொண்டனர்

இந்த நிலையில் தேர் திருவிழா முடிந்து அன்று மாலை  கோவிலுக்கு கீழ சன்னதி வழியாக எடுத்து வரப்பட்ட சிலைக்கு  கோவில் வாச லில் உள்ள கீழ சன்னதியில் வசிக்கும்  பாலசுப்பிரமணியம் என்பவர் (வயது 65)  மற்றவர்களைப் போல் பூ தூவி தீபாராதனை காட்டியுள் ளார்.  அதற்கு மற்றவர்களை எதுவும் சொல்லாத தீட்சிதர்கள் பாலசுப்பிர மணியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தீபாராதனை தட்டை பறித்து தூக்கி எறிந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். காவல்துறையினர்  தடுத்தும் தடையை மீறி அவர்களை தள்ளி விட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிறீ வர்ஷன் தீட்சிதர், முத்து தீட்சிதர், சோமு உள்ளிட்ட இன்னும் சில பேர்கள் மீது 5 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  திருவிழா முடிந்த கையோடு சிதம் பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில்: "நாங்கள் பரம்பரை பரம்பரையாக  தீபாராதனை காட் டுவது வழக்கம்.  கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு  கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்தது.  அப்போது கருவறையில் தேவாரம் திருவாசகம் பாட தமிழகத்திலுள்ள சிவனடி யார்களை அழைத்து வந்து கருவறை முன்பு நிற்கவைத்து தேவாரம் திருவாசகம் பாட அனைத்து ஏற்பாடு களையும் நான் செய்தேன்.  இதனால் ஆத்திரமடைந்த தீட்சி தர்கள் அன்றைய தினத்தி லிருந்து என்மீது பகையுடன் நடந்து கொள் கிறார்கள். சித்சபையில் தீட்சிதர்கள் பிராமணர்களைத்  தவிர மற்றவர்கள் யாரும் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது. அப்படியே பாடினாலும் சித்சபையில் கீழே நின்று தான் பாட வேண்டும். சித்சபையில் நின்று தேவாரம் பாட வேண்டும் என்ற ஆறுமுகசாமியின் தொடர் போராட்டத்தில் தான் கோவிலை அரசு கையகப்படுத்தியது. எனவே இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்களால் ஒவ்வொரு தேர் மற்றும் தரிசன விழாவிலும் இது போன்று தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது.  இது குறித்து அவ்வப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் சமாதானத்தில் முடிந்துவிடும்.  தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்கிய வர்களை கைது செய்ய வேண்டும்" என்றார்.

 


No comments:

Post a Comment