இதோ, உண்மைப் பேரொளி! புரிந்துகொள்வீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

இதோ, உண்மைப் பேரொளி! புரிந்துகொள்வீர்!!


‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருத்தல்’’ என்ற வாழ்வே உண்மையில் உன்னதமான மனிதர் களுக்குரிய உயர் வாழ்க்கையாகும்!


உண்மையே பேசுதல் என்பது, அன்றாட வாழ்வில் மனிதர்களால் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முடிகிறது?


பிள்ளைகளைப் ‘பொய் பேசாதே’ என்று சொல்லி போதிக்கும் பெற்றோர்களே, அதே பிள்ளைமுன் அற்ப காரணங்களுக்காக பொய் பேசுகின்றனர்! இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகள், உண் மையைக் கடைப்பிடிக்க முடியுமா? விரும்புவார்களா? கேலிக் கூத்து அல்லவா!



ஆசிரியர்களே, மாணவர்கள் முன்னிலையில் பேச காண்போம் உண்மையல்லாத செய்திகளைப் - பற்பல நேரங்களில்!


தொழில் ரீதியாக சிலருக்கு இதற்கென (‘லைசென்ஸ்’) உரிமம் வழங்கப்பட்டு விடுகிறது சமுதாயத்தால்! கேட்டால், அது அவர்கள் ‘‘தொழில் தர்மம்‘’ என்று ஒரு சமாதானம் - விளக்கம் கூறப்படுகிறது!


வியாபாரிகளும், வக்கீல்களும் பொய் பேசுவதற்கு முழு உரிமை படைத்தவர்களாம்!


தற்காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களை மிஞ்சும் அளவுக்குப் பொய்யைக் கூறியே பதவி, பெருநிலை அடையும் வாய்ப்பும் நமக்கு கண்ணெதிரே ‘பளிச்‘ எனத் தெரிகிறது!


அன்றாடச் சுற்றுச்சூழலில் இதனைக் கண்ணு றும்போதே, உண்மையைச் சொல்லி - கடைசிவரை, பிடிவாதமாக அதைக் கடைப்பிடித்து வாழ்ந்த தலை வர்  அண்ணல் காந்தியார் என்றும், அவர் எழுதிய ‘‘தன் வரலாறு’’ அதனால்தான் ‘‘சத்திய சோதனை’’ என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளது என்றும் பலரும் கூறி வருவது உண்மை!  ‘My experiments with Truth’ என்பதே ஆகும்.


ஆனால், சமூகப் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள் பொதுவாழ்வில் மட்டுமல்லாமல், தனி வாழ்விலும்கூட, அதிலும் தான் வியாபாரியாக இருந்த காலத்திலிருந்தே உண்மையை மட்டுமே பேசி அதற் காகத் தண்டனை கிடைத்தாலும்கூட, ஏற்பதுதான் தனது வாழ்க்கை நெறி; உண்மைக்கு மாறாக பொய் பேசி, ஒருபோதும் விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள விரும்பாத ஒரு மாமனிதராகவே  இருந் துள்ளார் - வாலிபத்திலிருந்தே!


1900-லேயே ஈரோட்டில் உள்ள பிரபல ‘‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’’ க்குப் (இவரது தந்தை விலாசம் அது) பொறுப்பேற்று மண்டி வியாபாரம் செய்பவராக - இளைஞராக இருந்தபோதே தயாராகிவிட்டார்!


அப்போது ஒரு நிகழ்வு:


(இது தந்தை பெரியாரே எழுதிய அறிக்கையிலிருந்து (26.7.1952) எடுத்துக்காட்டுகிறோம்).


வணிகர் ஈ.வெ.ராமசாமிக்கு 24 வயது - 1903 இல் நிகழ்ந்தது! வெங்கட்ட நாயக்கர் என்ற அவரது தந்தை பெயரில் இருந்த ஓர் ஆயிரம் ரூபாய் (அதன் மதிப்பு இப்போது எவ்வளவு?) டிகிரி - நகலை எடுத்துக் கொண்டு, திருச்சியில் நிறைவேற்ற இவரது ‘அவசரப் படி’ கட்டி வக்காலத்து பாரத்தில் இவரே, இவரது தகப் பனார் கையெழுத்தைப் போட்டுவிட்டு, ஈரோட்டிற்கு வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, இவர்மீது போர்ஜரி - ஆள்மாறாட்டம் வழக்கு வந்துவிட்டது. கிரிமினல் வழக்கு போடப்பட்டது. இவரது தந்தையார் பிரபல வக்கீலை எல்லாம் (அப்போது பார்ப்பன உயர்ஜாதிக் காரர்கள்தான்) வைத்து வாதாடச் செய்தார். தன் மகன் ஜெயிலுக்குப் போவதை இந்தப் பணக்காரத் தந்தை அதுவும் ஊரில் பெரிய மனுஷன் மகன் - நினைத்து நினைத்து அழுதார். அந்த வக்கீல், ‘‘அக் கையெழுத்தை உங்கள் மகன் இராமசாமி நாயக்கன் போடவில்லை என்று மறுத்து வாக்குமூலம் சொன்னால், நான் மீதியைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.


இவர் தந்தை வெங்கட்ட நாயக்கர் இவரிடம் மன் றாடுகிறார். ‘‘பொய் சொல்லமாட்டேன். நானே கையெ ழுத்துப் போட்டு விட்டு இப்போது மறுத்து கோர்ட்டில் சொல்லமாட்டேன்’’ என்று பிடிவாதமாகக் கூறிவிட்டு, தனது தங்க நகை, கடுக்கன்களைக் கழற்றிவிட்டு, தரையில் படுத்து, எளிய உணவு உண்டு சில நாள் - சிறைவாசத்திற்குப் பழகி ஆயத்தமாகிறார்.


கோர்ட்டில் பிரபல வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். இவர் (பெரியார்) வெள்ளைக்கார கலெக்டர் (விசா ரணை நீதிபதி) விசாரித்தபோது இவரிடம் கேட்டார்; ‘‘ஆம், என் தந்தை கையெழுத்தை நான்தான் போட் டேன் - வியாபாரத்தில் அக்காலத்தில் வாடிக்கையாக நடைபெறும் வழக்கம்‘’ என்றார்.


 ‘‘ஏன் அந்த வழக்கம்?’’ என்று வெள்ளைக்கார கலெக்டர் - (விசாரணை நீதிபதி) கேட்கிறார்.


அதற்கு ஈ.வெ.ரா. பதில் கூறுகிறார் கோர்ட்டில், ‘‘எங்கள் அப்பா கிழவனார்; நான்தான் வேலை பார்ப்பது, அந்த வியாபாரமும், பணமும் என்னுடையது. அவர் பெயர் பிரபலம் ஆதலால், அந்தப் பெயர் வைத்தே - மாற்றாமல் நான் வியாபாரம் செய்கிறேன்’’ என்றார்.


உடனே வெங்கட்ட நாயக்கரைக் கூப்பிட்டு, பெட்டியில் ஏற்றி, கலெக்டர் கேட்டார், ‘‘அவர் சொல் வது உண்மையா?’’


‘‘ஆம். பல காலம் அவர்தான் மண்டி நடத்துபவர்’’ என்றார் அவர்.


‘‘சரி, போகலாம்!’’ என்று சொல்லிவிட்டு, தீர்ப்பில், ஈ.வெ.ரா.வை விடுதலை செய்துவிட்டார் வெள்ளைக் கார கலெக்டர்.


‘‘இந்த நடவடிக்கை, இந்த செக்ஷனுக்குப் பொருந் தாது. எதிரி யாரையும் மோசம் செய்ய இந்தக் காரியத் தைச் செய்யவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது’’ என்றார்.


வக்கீல்களுக்கே அதிர்ச்சி!


உண்மை வென்றது; பெரியாரின் பொது அறிவும், அறிவு நாணயமும் அவருக்கு விடுதலையை வாங்கித் தந்தது. எத்தனை ஆண்டுகளுக்குமுன் - 117 ஆண்டு களுக்குமுன் நடந்தது.


தந்தை பெரியார் தனது ‘குடிஅரசு’ அச்சகத்தை ஈரோட்டில் 1925-க்குப் பிறகு நிறுவினார். அதற்குப் பெயர் ‘‘உண்மை விளக்க அச்சகம்‘’ என்பதாகும். இப்போது நடத்தும் (50 ஆண்டுகள்) ஏடு ‘‘உண்மை.’’


உண்மையோடு வாழ்வதுபற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார், கேட்போமா?


‘‘எனக்கு மட்டும் உண்மையின்மீது மிகப் பற்று உண்டு. ஒழுக்கத்திற்கே மதிப்புக் கொடுப்பேன். ஒழுக் கத்திற்கு மரியாதை கொடுக்க நான் தவறுவதில்லை. இன்றைக்கு இல்லையானாலும், என்றைக்காவது உண்மையான மேன்மையை மக்கள் உணரத்தான் போகிறார்கள். எனவே, என்னைப் பொறுத்தமட்டில், ஒழுக்கத்தோடு நடந்தால், உண்மையை ஒளிக்காமல் (மறைக்காமல்) எதையும் நேர்மையுடன் கடைப்பிடித் தால் அதற்கு தனி சக்தி உண்டு என்பது என் நம்பிக்கை!’’


- தந்தை பெரியார், ‘விடுதலை’, 10.3.1956


எனவேதான், புரட்சிக்கவிஞர் பாடினார்,


‘‘வாய்மைப் போருக்கு என்றும் இளையார் - பெரியார்’’ என்று!


எனவே, தெரிந்துகொள்ளவேண்டும் - உண்மை யின் மறுபெயர் பெரியார் என்பது வரலாற்று உண்மை அல்லவா?


No comments:

Post a Comment