ஆன்மீகம், அறிவியல் , அரசியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

ஆன்மீகம், அறிவியல் , அரசியல்









இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும்  உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவி யலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.


சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது  வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு 'ஆண்டி-பயாடிக்'  என்ற அறிவியல் உண்மையின் காரணமா கத்தான் என்பதுவரை உங்களிடம் யாரே னும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத் திருக்கக்கூடும்.


இவற்றையெல்லாம் அந்தக் காலத்தி லேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்க ளில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.


மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் 'போலி அறிவிய லுக்கு'ப் பலி ஆனவர்தான்.


பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத் தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை 'ஆண்டிபயாடிக்' என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டு வதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு 'அம்மை நோய்' வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், 'ஆண்டிபயாடிக்' என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.


போலி அறிவியல் உருவாகக் காரணம்: நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடை யேயான 'சண்டை' பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவ ரைக் 'குற்றவாளி' என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலி லியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாக வும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதி ரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். 'மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்' செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச் சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.


மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படை வாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவி யலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மத நிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.


இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவி யலையும், நம்பிக்கைகளையும், கட்டுக் கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல், அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.


இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓது வது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடு வது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண் டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.


இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மய்யமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் 'அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை', 'குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்' என்றவாறு இருக்கும்.


அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம்


என்பார்கள். இல்லையென்றால் திரு மூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்து விட்டு போய்விட்டார் என்பார்கள்.


ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப் போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப் போடுவார்கள். 'காஸ்மிக் டான்ஸ்' அத னைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் 'நடனம்' ஆடுகின்றார் என்பார் கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டு போகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந் தள்ளுவதே புத்திசாலித்தனம்.


எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச் சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படு கின்றன.


மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக் களை ஏமாற்றுபவர்கள் தங்களுக் கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக் கின்ற னர். அது என்னவெனில், ஒருவர் மற்ற வரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.


எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.


அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத் திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரான வர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக் களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.


ஒவ்வொருவரும் இந்த ஆன்மீகத்தில் அறிவியல் உள்ளது என்று ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டு கொள் வது அவசியமாகிறது.


- Venugopal Shanger


தகவல்: வி.சி.வில்வம்









No comments:

Post a Comment