எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா?

featured image

தமிழ்நாடு அரசின் திட்டங்களை கனடா, அமெரிக்கா (4 மாநிலங்கள்) போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன!
பா.ஜ.க. அரசை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டிக்கின்றன!
எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா?
சேலம், தர்மபுரி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் எழுச்சி உரை

சேலம், தர்மபுரி. ஏப், 9. ஏழாம் நாளாக இந்தியா கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரப்புரை செய்தார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’ கூட்டணியில் சேலம் தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம். செல்வகணபதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானத்தில் நேற்று (8.4.2024) மாலை 5:00 மணி முதல் 8 மணி வரை, மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளவழகன் தலைமையேற்க, செயலாளர் வைரம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாசு, காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் எம்.ஆர்.சுரேஷ், தி.மு.க அம்மாப்பேட்டை பகுதிச் செயலாளர் – சேலம் மாநகராட்சி மண்டலத் தலைவர் சேகர்பாபு, ம.தி.மு.க.மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித் திருந்தனர்.

கழகத்தின் சார்பில் திரவிடர் கழக சார்பில் கழகக் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் கா.நா.பாலு, ஆத்தூர் சுரேஷ், மேட்டூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கலைவாணன், சேலம் மாநகரத் தலைவர் இளவரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஓமலூர் சவுந்தர்ராசன் ஆகி யோர் முன்னிலை ஏற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

சேலத்தில் தமிழர் தலைவர்!

தொடக்கப் பேச்சாளராக கழகத்தின் பொதுச் செயலா ளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் உரைக்குப் பின் ஆசிரியர் பேசினார். ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்கள் நடைபெறுவதால், சில மணித்துளி களில் புத்தகங்கள் அறிமுகம், விற்பனை, ஆசிரியருக்கு பயனாடை அணிவித்தல் போன்றவை நிறைவுசெய்யப் பட்டு ஆசிரியர் பேசுவார் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. ஆசிரியர் பேசும் போது, “தமிழ்நாட்டை இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங் கள் பின்பற்றுவதோடு நில்லாமல் வளர்ந்த நாடாக போற்றப்படக்கூடிய கனடா நாடு, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தை தங்கள் நாட்டிலும் பின்பற்றுகிறது என்பது திராவிட மாடல் அரசின் சிறப்பு” என்று கூறிவிட்டு, “புதிதாக அமெரிக்காவின் மின்ன சோட்டா மாநிலத்தில் இதே திட்டம் பின்பற்றுவதாக தகவல்கள் வருகின்றன” “இதுதான் திராவிட மாடல்! அப்படியென்றால் நமக்கு வேண்டியது திராவிட மாடலா? குஜராத் மாடலா?” உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களுக்கு உதய்சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக மாநகரச் செயலாளர் பூபதி நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

அரூரில் தமிழர் தலைவர்!

சேலத்தில் உரையாற்றிவிட்டு, தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தர்மபுரி மாவட்டம் அரூரை நோக்கி ஆசிரியர் வாகனம் விரைந்தது. அங்கு, தருமபுரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் மணி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில், அரூர் பகுதியில் உள்ள கச்சேரி பகுதியில் இரவு 7 மணிமுதல் 10 வரை மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாவட்டத் தலைவர் கு. தங்கராசு தலைமையேற்று உரையாற்றினார். கழகக் காப்பாளர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர் அரூர் சா. இராசேந்திரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா, கேசவன், சி.பி.அய்.(எம்) மாவட்டச் செயலாளர் அ. குமார், பேரூராட்சித் தலைவர் சூர்யா தனபால், பேரூராட்சி தி.மு.க. செயலாளர் முல்லை இரவி, தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசு கோபால், பகுத்தறிவாளர் முனைவர் மு. இராசேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை யேற்று சிறப்பித்தனர்.

கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத் துறைச் செயலாளர் மாரி கருணாநிதி, தருமபுரி மாவட்டத் தலைவர் சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோ. திராவிட மணி, ஓசூர் மாவட்டத் தலைவர் சு. வன வேந்தன், தருமபுரி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேங்கன் தமிழ்ச்செல்வன், கதிர், பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் செங்கல் மாரி, மாவட்ட மகளிரணித் தலைவர் முருகம்மாள் ஆகி யோர் முன்னிலையில் வேல்விழி, கல்பனா, மணி மேகலை, உமா மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர் மாவட்டத் தோழர்கள் முன்னிலையேற்றுச் சிறப்பித்தனர்.

தலைமைக்கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். பெண்க ளும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததால் ஆசிரியர் வழக்கம் போல் உற்சாகமடைந்து உரையாற்றி னார். இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தகுதி வாய்ந்த வழக்குரைஞர் ஆ. மணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டு கிறேன்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சேட்டு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சி முடிந்தும்கூட ஆசிரியரால் அவ்வளவு சுலபமாக தோழர்களிடம் விடைபெற்றுவிட முடியவில்லை. பிறகு ஒருவழியாக அங்கிருந்து சாலை வழியாகவே புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ஆசிரியர் இல்லம் திரும்பினார்.

No comments:

Post a Comment